தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முசுண்டை
94. முல்லை
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
5
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
ஐது படு கொள்ளி அங்கை காய,
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
10
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
ஆர்வம் சிறந்த சாயல்,
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார்
235. பாலை
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும்,
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ?
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து,
5
விண்டு முன்னிய கொண்டல் மா மழை
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ,
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
10
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய,
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க,
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி,
15
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய,
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதையச் சாஅய்,
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்
264. முல்லை
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன,
குழை அமல் முசுண்டை வாலிய மலர,
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப்
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்,
5
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு,
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர,
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து,
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக,
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி,
10
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர்
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக்
காய் சின யானை கங்குல் சூழ,
அஞ்சுவர இறுத்த தானை
15
வெஞ் சின வேந்தன் பாசறையோரே?
பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:14:30(இந்திய நேரம்)