தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குவளை(காவி)
19. பாலை
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
5
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம்,
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது,
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
10
சேயிதழ் அனைய ஆகி, குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்
வெய்ய உகுதர, வெரீஇ, பையென,
15
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை
பூ வீ கொடியின் புல்லெனப் போகி,
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார்
27. பாலை
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம் அழ,
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார்,
5
செல்ப" என்ப' என்போய்! நல்ல
மடவைமன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
10
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,
15
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்
குருதியொடு துயல்வந்தன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?
செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார்
36. மருதம்
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
5
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
10
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
15
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
நார் அரி நறவின் எருமையூரன்,
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
20
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர்
38. குறிஞ்சி
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
5
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன்.
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
10
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல்
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து;
15
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
கூஉம் கணஃது எம் ஊர்' என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே.
தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
56. மருதம்
நகை ஆகின்றே தோழி! நெருநல்
மணி கண்டன்ன துணி கயம் துளங்க,
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
5
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
10
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு,
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற
15
என்னும் தன்னும் நோக்கி,
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.
பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
62. குறிஞ்சி
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன
5
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
10
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல,
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந்தோளே வென் வேற்
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
15
கடவுள் எழுதிய பாவையின்,
மடவது மாண்ட மாஅயோளே.
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
125. பாலை
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய்,
5
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத்
தாது உறு குவளைப்போது பிணி அவிழ,
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க்
கடாஅம் மாறிய யானை போல,
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
10
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர,
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
முனிய அலைத்தி, முரண் இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
15
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின்
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
20
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர் போல,
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே.
தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -பரணர்
128. குறிஞ்சி
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே;
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொள வரின் கனைஇ, காமம்
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே.
5
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில்
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி,
10
கான நாடன் வரூஉம், யானைக்
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி,
மாரி வானம் தலைஇ நீர் வார்பு,
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின்,
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்
15
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே?
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர்
138. குறிஞ்சி
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி!
குவளை உண்கண் தெண் பனி மல்க,
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின்
5
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி,
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை,
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில்,
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,
10
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ,
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு
நின்னொடு தெளித்த நல் மலை நாடன்
15
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி,
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்,
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட்
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி
நல் நிறம் மருளும் அரு விடர்
20
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார்
150. நெய்தல்
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி,
5
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல்
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை,
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர்
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
10
மாலை மணி இதழ் கூம்ப, காலைக்
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;
'வாரார்கொல்?' எனப் பருவரும்
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!
பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார்
156. மருதம்
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கியன்ன,
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
5
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ,
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
தீம் புனல் ஊர! திறவதாகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
10
காயா ஞாயிற்றாக, தலைப்பெய,
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
15
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,
தணி மருங்கு அறியாள், யாய் அழ,
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார்
165. பாலை
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்,
5
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும்
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என,
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென,
10
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ,
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி,
'தருமணற் கிடந்த பாவை என்
அருமகளே என முயங்கினள் அழுமே!
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ......
179. பாலை
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில்,
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு,
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி
5
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது,
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர்
நல் நிலை பொறித்த கல் நிலை அதர,
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்
10
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை,
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்,
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம்
மதி ஏர் வாள் நுதல் புலம்ப,
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
180. நெய்தல்
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக,
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி,
வீ ததை கானல் வண்டல் அயர,
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து,
5
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி,
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து,
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
10
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன்
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத்
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ,
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப்
பொன் நேர் நுண் தாது நோக்கி,
15
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே.
இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார்
183. பாலை
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ் வரி வாடவும்,
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
5
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி,
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
10
காலை வந்தன்றால் காரே மாலைக்
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
15
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே?
தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -கருவூர்க் கலிங்கத்தார்
216. மருதம்
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
5
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப்
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்;
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
கழனி உழவர் குற்ற குவளையும்,
10
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு,
பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
15
பெருங் களிற்று எவ்வம் போல,
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார்
223. பாலை
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர்
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி,
ஆழல் வாழி, தோழி! கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய்
5
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர்,
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை,
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின்
10
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட,
நன் முகை அதிரல் போதொடு, குவளைத்
15
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின்
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே?
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
228. குறிஞ்சி
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென
வரை இழி அருவி ஆரம் தீண்டித்
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில்,
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக்
5
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி,
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று,
10
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப்
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய்
இரும் பிடி இரியும் சோலைப்
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார்
285. பாலை
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம்
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர்,
5
காடு தேர் மடப் பிணை அலற, கலையின்
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
10
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி,
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே, காதலர்;
15
வாராய் தோழி! முயங்குகம், பலவே.
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
308. குறிஞ்சி
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை,
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்,
5
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ,
கலம் சுடு புகையின் தோன்றும் நாட!
இரவின் வருதல் எவனோ? பகல் வரின்,
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து,
10
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி,
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத்
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட,
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய
15
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை,
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே.
இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது. - பிசிராந்தையார்
358. குறிஞ்சி
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்,
காமர் பீலி, ஆய் மயில் தோகை
இன் தீம் குரல துவன்றி, மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி,
5
கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக்
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய்,
உயங்கிய மனத்தையாகி, புலம்பு கொண்டு,
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி,
10
அன்னை வினவினள்ஆயின், அன்னோ!
என் என உரைக்கோ யானே துன்னிய
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி,
ஓடை யானை உயர் மிசை எடுத்த
ஆடு கொடி கடுப்ப, தோன்றும்
15
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே?
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
361. பாலை
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
5
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
10
கரியாப் பூவின் பெரியோர் ஆர,
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
15
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
393. பாலை
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி,
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக்
5
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி,
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர்
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப,
10
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி,
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை,
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா,
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி,
15
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்,
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,
20
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர்
நீடலர் வாழி, தோழி! தோடு கொள்
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப,
தகரம் மண்ணிய தண் நறு முச்சி,
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ்
25
வேனில் அதிரல் வேய்ந்த நின்
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
395. பாலை
தண் கயம் பயந்த வண் காற் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன,
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண்
பனி வார் எவ்வம் தீர, இனி வரின்,
5
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர்
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்,
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை,
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி,
10
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு,
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல்
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து,
ஆடு கழை இரு வெதிர் நரலும்
15
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே!
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:27:45(இந்திய நேரம்)