தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆடு(தகர், மறி, கடா)
94. முல்லை
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
5
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
ஐது படு கொள்ளி அங்கை காய,
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
10
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
ஆர்வம் சிறந்த சாயல்,
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார்
101. பாலை
அம்ம வாழி, தோழி! 'இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
5
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகி,
10
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
15
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்
104. முல்லை
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற, வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின்
5
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர்,
வாங்குசினை பொலிய ஏறி; புதல
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி,
10
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய,
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
இனிது செய்தனையால் எந்தை! வாழிய!
15
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்
ஆய் தொடி அரிவை கூந்தற்
போது குரல் அணிய வேய்தந்தோயே!
வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார்
156. மருதம்
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கியன்ன,
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
5
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ,
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
தீம் புனல் ஊர! திறவதாகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
10
காயா ஞாயிற்றாக, தலைப்பெய,
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
15
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,
தணி மருங்கு அறியாள், யாய் அழ,
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?
242. குறிஞ்சி
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச்
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை,
5
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம்,
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ,
10
அறியா வேலற் தரீஇ, அன்னை
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி,
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம்,
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள்,
15
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய,
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ்
முயங்கல் இயைவதுமன்னோ தோழி!
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில்
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச்
20
சாந்த மென் சினை தீண்டி, மேலது
பிரசம் தூங்கும் சேண் சிமை
வரையக வெற்பன் மணந்த மார்பே!
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார்
274. முல்லை
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து,
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
பருவம் செய்த பானாட் கங்குல்,
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
5
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி,
திண் கால் உறியன், பானையன், அதளன்,
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
10
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ,
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே.
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார்
292.குறிஞ்சி
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து,
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச்
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ,
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி
5
ஏதில் வேலன் கோதை துயல்வரத்
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்;
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து,
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள்,
10
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்
உடு உறு கணையின் போகி, சாரல்
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
15
மலை கெழு நாடன் மணவாக்காலே!
வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர்
331. பாலை
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை,
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ,
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
5
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர்
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய,
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும்,
10
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி,
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன்,
வேளிரொடு பொரீஇய, கழித்த
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
394. முல்லை
களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
5
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த, பின்றை, நீயும்
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில்,
10
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர,
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள்,
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல்
15
மன்ற இரும் புதல் ஒளிக்கும்
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:53:00(இந்திய நேரம்)