தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எருமை(காரான்)
46. மருதம்
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
5
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
10
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
15
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார்
56. மருதம்
நகை ஆகின்றே தோழி! நெருநல்
மணி கண்டன்ன துணி கயம் துளங்க,
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
5
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
10
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு,
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற
15
என்னும் தன்னும் நோக்கி,
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.
பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
91. பாலை
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
5
பாசி தின்ற பைங் கண் யானை
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
10
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
15
தட மருப்பு எருமை தாமரை முனையின்,
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
100. நெய்தல்
அரையுற்று அமைந்த ஆரம் நீவி,
புரையப் பூண்ட கோதை மார்பினை,
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து,
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே.
5
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை,
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
10
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும்
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான்,
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன
15
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர்
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!
தோழி வரைவு கடாயது. - உலோச்சனார்
146. மருதம்
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
5
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியள்தானே எம் போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
10
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
ஆயமும் அயலும் மருள,
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்
165. பாலை
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்,
5
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும்
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என,
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென,
10
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ,
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி,
'தருமணற் கிடந்த பாவை என்
அருமகளே என முயங்கினள் அழுமே!
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ......
206. மருதம்
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப்
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம்,
5
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத்
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
10
ஆராக் காதலொடு தார் இடை குழைய,
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து,
அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
15
பெரு பெயற்கு உருகியாஅங்கு,
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார்
316. மருதம்
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை,
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து,
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட,
5
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து,
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள்,
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர,
10
பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை!
அது புலந்து உறைதல் வல்லியோரே,
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து,
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி,
15
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப,
வைகுநர் ஆகுதல் அறிந்தும்,
அறியார் அம்ம, அஃது உடலுமோரே!
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:54:23(இந்திய நேரம்)