தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாய்(ஞமலி)
28. குறிஞ்சி
மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி!
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங் கால் தோறும்
5
இருவி தோன்றின பலவே. நீயே,
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,
பரியல் நாயொடு பல் மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,
10
கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி,
ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என,
பிறர்த் தந்து நிறுக்குவள்ஆயின்,
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி
107. பாலை
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று
5
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
10
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
15
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
மாலை இன் துணைஆகி, காலைப்
20
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப,
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
118. குறிஞ்சி
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
தேம் கமழ் இணர வேங்கை சூடி,
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
5
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட,
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள,
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
10
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்.
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள்
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்;
அளியள்தான், நின் அளி அலது இலளே!
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர்
122. குறிஞ்சி
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
5
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்,
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
10
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
15
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
20
ஆதி போகிய பாய்பரி நன் மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - பரணர்
140. நெய்தல்
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
5
கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
10
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி,
15
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார்
158. குறிஞ்சி
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
5
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
10
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
15
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு,
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர்
182. குறிஞ்சி
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து,
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ,
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல்
வீளை அம்பின் இளையரொடு மாந்தி,
5
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட,
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர,
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட!
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
10
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல்,
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும்,
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால்,
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ,
15
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
பெரு வரை நண்ணிய சாரலானே.
தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர்
248. குறிஞ்சி
நகை நீ கேளாய் தோழி! அல்கல்;
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து,
5
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது,
'அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்' என,
10
எய்யாது பெயரும் குன்ற நாடன்
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து,
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை,
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர,
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை;
15
வல்லே என் முகம் நோக்கி,
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந்தோளே.
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது. - கபிலர்
318. குறிஞ்சி
கான மான் அதர் யானையும் வழங்கும்;
வான மீமிசை உருமும் நனி உரறும்;
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
5
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்,
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ
இன்று தலையாக வாரல்; வரினே,
10
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய,
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை,
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
15
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே!
இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர்
381. பாலை
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
5
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
10
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
முனை அரண் கடந்த வினை வல் தானை,
15
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து,
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
20
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார்
388. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின்,
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல்
5
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி,
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து,
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா இருந்தனமாக,
10
'மை ஈர் ஓதி மட நல்லீரே!
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து,
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என,
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட,
15
சொல்லிக் கழிந்த வல் விற் காளை
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து,
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என,
அன்னை தந்த முது வாய் வேலன்,
20
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்;
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின்,
வினவின் எவனோ மற்றே 'கனல் சின
மையல் வேழ மெய் உளம்போக,
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
25
காட்டு மான் அடி வழி ஒற்றி,
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே?
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 19:05:18(இந்திய நேரம்)