தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மான்(மரை, இரலை, நவ்வி, கலை, மா, உழை, திரி மருப்பு ஏற்று, ஏறு)
3. பாலை
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார்.
4. முல்லை
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
5
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
கருவி வானம் கதழ் உறை சிதறி,
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
10
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
15
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார்
7. பாலை
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;
தலை முடிசான்ற; தண் தழை உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;
5
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை;
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
10
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை,
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,
15
பிற்படு பூசலின் வழிவழி ஓடி,
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,
20
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த
துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார்.
14. முல்லை
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
5
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ,
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர,
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
10
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற,
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார்ஆயின், காலை
யாங்கு ஆகுவம்கொல்? பாண!' என்ற
மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன்,
15
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென,
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து,
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக,
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
20
கார் மழை முழக்கு இசை கடுக்கும்,
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே.
பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தனார்
23. பாலை
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
5
காடே கம்மென்றன்றே; அவல,
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;
10
அனையகொல் வாழி, தோழி! மனைய
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும்
மௌவல், மாச் சினை காட்டி,
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
32. குறிஞ்சி
நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
5
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
10
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என்
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
கடிய கூறி, கை பிணி விடாஅ,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின்
15
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து,
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,
20
என் குறைப் புறனிலை முயலும்
அண்கணாளனை நகுகம், யாமே.
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்.- நல்வெள்ளியார்
34. முல்லை
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
5
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல்
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
10
செல்க, தேரே நல் வலம் பெறுந!
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,
15
'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என,
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
39. பாலை
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து,
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
5
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,
10
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு,
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென,
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,
15
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப்
பரந்து படு பாயல் நவ்வி பட்டென,
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,
'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின்
20
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின்
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
25
போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே!
பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச் செங்கண்ணனார்
49. பாலை
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
5
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ!
10
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர்,
15
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே!
உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார்
69. பாலை
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
5
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
கான மட மரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
10
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
15
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண்
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
தலை நாள் அலரின் நாறும் நின்
20
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.
'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
71. பாலை
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
5
மை இல் மான் இனம் மருள, பையென
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
10
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக்
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
15
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,
இது கொல் வாழி, தோழி! என் உயிர்
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?
பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார்
74. முல்லை
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து,
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த,
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
5
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப,
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய்,
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்,
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
10
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ,
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல்
15
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற்
கல்லாக் கோவலர் ஊதும்
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே!
தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார்
82. குறிஞ்சி
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
5
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
10
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
15
பலர்தில், வாழி தோழி! அவருள்,
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர்
86. மருதம்
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
5
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
10
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என,
15
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,
20
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்
25
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
30
மடம் கொள் மதைஇய நோக்கின்,
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.
வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார்
91. பாலை
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
5
பாசி தின்ற பைங் கண் யானை
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
10
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
15
தட மருப்பு எருமை தாமரை முனையின்,
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
97. பாலை
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
5
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
10
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி,
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து,
15
ஆழல்' என்றி தோழி! யாழ என்
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை,
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி,
20
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்,
புகை புரை அம் மஞ்சு ஊர,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
107. பாலை
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று
5
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
10
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
15
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
மாலை இன் துணைஆகி, காலைப்
20
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப,
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
112. குறிஞ்சி
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
சிதலை செய்த செந் நிலைப் புற்றின்
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
5
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய்,
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே;
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்;
10
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;
கழியக் காதலர்ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப!
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
15
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார்,
தொன்று இயல் மரபின் மன்றல் அயர,
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி,
நொதுமல் விருந்தினம் போல, இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.
இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார்
121. பாலை
வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
5
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி,
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி,
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு
10
தான் வரும் என்ப, தட மென் தோளி
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்,
15
கரு முக முசுவின் கானத்தானே.
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன்
129. பாலை
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி,
5
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி,
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
10
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப,
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்,
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல்
15
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின்,
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
- குடவாயிற் கீரத்தனார்
133. பாலை
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
5
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
10
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
15
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
134. முல்லை
வானம் வாய்ப்பக் கவினி, கானம்
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
5
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன்
செய்கை அன்ன செந் நிலப் புறவின்;
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
10
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார்
139. பாலை
துஞ்சுவது போல இருளி, விண் பக
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,
5
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்;
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை,
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை,
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து
10
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை;
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்,
காமர் துணையொடு ஏமுற வதிய;
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவைபோற் பாஅய், பல உடன்
15
நீர் வார் மருங்கின் ஈரணி திகழ;
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்!
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்
கருவிக் கார்இடி இரீஇய
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே.
பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார்
147. பாலை
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
5
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென,
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளி வீதியைப் போல நன்றும்
10
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே!
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஒளவையார்
151. பாலை
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என,
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
5
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
10
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும்
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு
உறுவது கூறும், சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண் குரல்
15
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே!
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார்
154. முல்லை
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
5
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
10
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
நம் வயிற் புரிந்த கொள்கை
15
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்
173. பாலை
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல்
5
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின்
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,
வருவர் வாழி, தோழி! பல புரி
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ,
10
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,
காடு கவின் அழிய உரைஇ, கோடை
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
15
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம்
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரைக் கவாஅன்
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார்
184. முல்லை
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்!
5
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை
10
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி,
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்,
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,
15
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே.
தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்
194. முல்லை
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப்
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால்,
5
வித்திய மருங்கின் விதை பல நாறி,
இரலை நல் மானினம் பரந்தவைபோல்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி,
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
10
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட,
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
15
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும்
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக்
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி,
விரிஉளை, நல் மான் கடைஇ
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே.
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார்
195. பாலை
'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும்' என, தாயே,
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி,
5
உவந்து, இனிது அயரும் என்ப; யானும்,
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்,
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள்,
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய
10
நலம் புனை உதவியும் உடையன்மன்னே;
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல;
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி,
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல்,
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
15
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்;
மாறா வருபனி கலுழும் கங்குலில்,
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்,
எம் மனை முந்துறத் தருமோ?
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே?
மகட் போக்கிய நற்றாய் சொல்லியது. - கயமனார்
199. பாலை
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன்,
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர,
5
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல்
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ,
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன,
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்,
10
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல்
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும்
15
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல்
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது,
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
20
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய,
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்,
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார்
234. முல்லை
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
5
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,
கால் என மருள, ஏறி, நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!
10
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,
எல்லை போகிய புல்லென் மாலை,
15
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்,
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
நல் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார்
241. பாலை
'துனி இன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம, அவர்' என முனியாது
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்,
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
5
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை
மூங்கில் இள முளை திரங்க, காம்பின்
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை,
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி,
10
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய்
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச்
15
செம் முக மந்தி ஆடும்
நல் மர மருங்கின் மலை இறந்தோரே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்
249. பாலை
அம்ம வாழி, தோழி! பல் நாள்
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும்
5
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி,
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ,
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
10
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார்
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ,
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை
15
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து,
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி,
உழை மான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார்
283. பாலை
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்,
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி,
5
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர்
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப்
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும்,
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமை, கரி மரம்
10
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி,
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க,
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென,
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து,
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன
15
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப,
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே.
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
287. பாலை
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ,
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக,
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை,
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின்
5
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை,
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை,
10
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க,
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க,
அரம்பு வந்து அலைக்கும் மாலை,
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார்
304. முல்லை
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
5
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
10
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய,
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
15
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப,
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என,
20
நம் நோய் தன்வயின் அறியாள்,
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
314. முல்லை
'நீலத்து அன்ன நீர் பொதி கருவின்,
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப,
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப,
5
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின்
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள,
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை,
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன்
10
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர்
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப்
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப,
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என,
15
கடவுட் கற்பின் மடவோள் கூற,
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின்
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்!
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி!
வேலி சுற்றிய வால் வீ முல்லைப்
20
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின்
இன் நகை இளையோள் கவவ,
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே!
வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
321. பாலை
பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப,
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு
5
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது,
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்
படு மணி இன நிரை உணீஇய, கோவலர்
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்,
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
10
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர்,
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ?
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ?
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே!
15
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ,
யாய் அறிவுறுதல் அஞ்சி,
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார்
353. பாலை
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
கனவுக் கழிந்தனையவாகி, நனவின்,
நாளது செலவும், மூப்பினது வரவும்,
5
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்,
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
10
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு,
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
15
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
20
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி,
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
367. பாலை
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து,
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து,
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப,
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய,
5
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர்,
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை,
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
10
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின்,
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும்
15
உயிர் குழைப்பன்ன சாயல்,
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர்
371. பாலை
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை,
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர்
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி,
குறு நெடுந் துணைய மறி புடை ஆட,
5
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது,
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்,
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
10
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து,
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
378. குறிஞ்சி
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள,
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர,
5
காமர் பீலி ஆய் மயில் தோகை
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல
ஆடு கள வயிரின் இனிய ஆலி,
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து,
10
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும்
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும்,
உடன்ற அன்னை அமரா நோக்கமும்,
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு
15
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்,
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி,
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி!
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர்
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு
20
அள் இலைப் பலவின் கனி கவர் கைய
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து,
பாடு இன் அருவி சூடி,
வான் தோய் சிமையம் தோன்றலானே.
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார்
379. பாலை
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய,
தெருளாமையின் தீதொடு கெழீஇ,
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து,
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே!
5
நினையினைஆயின், எனவ கேண்மதி!
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை,
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி,
நனவின் இயன்றதுஆயினும், கங்குல்
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால்,
10
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி,
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப,
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு,
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி,
15
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின்
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின்
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி,
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு,
20
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல்,
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர,
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று,
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
25
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த
நிரம்பா நீள் இடைத் தூங்கி,
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே?
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
395. பாலை
தண் கயம் பயந்த வண் காற் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன,
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண்
பனி வார் எவ்வம் தீர, இனி வரின்,
5
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர்
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்,
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை,
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி,
10
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு,
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல்
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து,
ஆடு கழை இரு வெதிர் நரலும்
15
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே!
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
399. பாலை
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி,
இமையக் கானம் நாறும் கூந்தல்,
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம்
பருகுவன்ன காதல் உள்ளமொடு,
5
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார்
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட,
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி,
10
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ,
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி,
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி,
15
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்,
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்,
வேய் கண் உடைந்த சிமைய,
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 19:18:42(இந்திய நேரம்)