தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முல்லை
4. முல்லை
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
5
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
கருவி வானம் கதழ் உறை சிதறி,
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
10
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
15
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார்
14. முல்லை
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
5
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ,
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர,
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
10
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற,
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார்ஆயின், காலை
யாங்கு ஆகுவம்கொல்? பாண!' என்ற
மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன்,
15
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென,
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து,
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக,
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
20
கார் மழை முழக்கு இசை கடுக்கும்,
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே.
பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தனார்

 

24. முல்லை
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,
சிதரல் அம் துவலை தூவலின், மலரும்
5
தைஇ நின்ற தண் பெயல் கடைநாள்,
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,
விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி,
மங்குல் மா மழை, தென் புலம் படரும்
பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி,
10
தம் ஊரோளே, நன்னுதல்; யாமே,
கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து,
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு,
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி,
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு,
15
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து,
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள்,
இரவுத் துயில் மடிந்த தானை,
உரவுச் சின வேந்தன் பாசறையேமே.

தலைமகன் பருவங் கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - ஆவூர் மூலங் கிழார்

 

34. முல்லை
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
5
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல்
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
10
செல்க, தேரே நல் வலம் பெறுந!
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,
15
'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என,
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
மழலை இன் சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

 

44. முல்லை
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
5
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
10
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
15
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார்

 

54. முல்லை
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற்
காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
5
வள் வாய் ஆழி உள் உறுபு உருள,
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
10
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர்
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க,
மனைமனைப் படரும் நனை நகு மாலை,
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
15
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர்
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
வருகுவைஆயின், தருகுவென் பால்' என,
20
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி,
திதலை அல்குல் எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.
வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்

 

64. முல்லை
களையும் இடனால் பாக! உளை அணி
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய,
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி,
5
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக,
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின்,
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர,
10
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி,
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ,
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
15
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை
புலம்பு கொள் மாலை கேட்டொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்

 

74. முல்லை
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து,
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த,
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
5
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப,
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய்,
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்,
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
10
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ,
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல்
15
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற்
கல்லாக் கோவலர் ஊதும்
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே!
தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார்

 

84. முல்லை
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
5
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
10
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே,
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
15
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து,
வினைவயின் பெயர்க்கும் தானை,
புனைதார், வேந்தன் பாசறையேமே!
தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன்

 

94. முல்லை
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
5
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
ஐது படு கொள்ளி அங்கை காய,
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
10
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
ஆர்வம் சிறந்த சாயல்,
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார்

 

104. முல்லை
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற, வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின்
5
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர்,
வாங்குசினை பொலிய ஏறி; புதல
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி,
10
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய,
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
இனிது செய்தனையால் எந்தை! வாழிய!
15
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்
ஆய் தொடி அரிவை கூந்தற்
போது குரல் அணிய வேய்தந்தோயே!
வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார்

 

114. முல்லை
'கேளாய், எல்ல! தோழி! வேலன்
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்,
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு,
5
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும்
சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என,
நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க,
நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண்
நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை,
10
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்
வானக மீனின் விளங்கித் தோன்றும்,
அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த்
திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின்,
அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள்,
15
அணங்கு சால், அரிவையைக் காண்குவம்
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே.
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - .......

 

124. முல்லை
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து
சென்றீக' என்பஆயின், வேந்தனும்
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
5
இன்றே புகுதல் வாய்வது; நன்றே.
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற,
பாசறை வருத்தம் வீட, நீயும்
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை,
10
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி,
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய,
காலை எய்த, கடவுமதி மாலை
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை
15
அரமிய வியலகத்து இயம்பும்
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே.
தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

 

134. முல்லை
வானம் வாய்ப்பக் கவினி, கானம்
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
5
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன்
செய்கை அன்ன செந் நிலப் புறவின்;
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
10
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார்

 

144. முல்லை
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன;
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா;
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை
5
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்,
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு,
10
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின்
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறை,
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
15
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி,
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின் வயின் இமைப்ப,
அமர் ஓர்த்து, அட்ட செல்வம்
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.
வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்

 

154. முல்லை
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
5
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
10
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
நம் வயிற் புரிந்த கொள்கை
15
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்

 

164. முல்லை
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி,
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்;
5
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன்
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற.
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்.
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி,
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு
10
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்
இது நற் காலம்; கண்டிசின் பகைவர்
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்,
கந்து கால் ஒசிக்கும் யானை,
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே!
பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார்

 

174. முல்லை
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து,
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என,
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
5
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து,
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
10
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள,
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்,
நல் மணல் வியலிடை நடந்த
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே?
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்

 

184. முல்லை
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின்
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்!
5
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை
10
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி,
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்,
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,
15
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே.
தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்

 

194. முல்லை
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப்
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால்,
5
வித்திய மருங்கின் விதை பல நாறி,
இரலை நல் மானினம் பரந்தவைபோல்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி,
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
10
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட,
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
15
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும்
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக்
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி,
விரிஉளை, நல் மான் கடைஇ
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே.
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. - இடைக்காடனார்

 

204. முல்லை
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
கடல் போல் தானை, கலிமா, வழுதி
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே
5
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து,
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர்
10
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல்,
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்

 

214. முல்லை
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்,
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம்
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி,
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது;
5
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை,
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை,
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே;
அமரும் நம் வயினதுவே; நமர் என
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
10
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப்
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ,
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப,
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
15
மாரி மாலையும் தமியள் கேட்டே?
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

 

224. முல்லை
செல்க, பாக! எல்லின்று பொழுதே
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா,
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை,
5
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி,
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி,
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக,
10
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்,
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல்
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ,
15
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என,
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால்
அருங் கடி வியல் நகர் நோக்கி,
வருந்துமால், அளியள் திருந்திழைதானே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்

 

234. முல்லை
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
5
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,
கால் என மருள, ஏறி, நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!
10
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,
எல்லை போகிய புல்லென் மாலை,
15
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்,
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
நல் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார்

 

244. முல்லை
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
பகல் உறை முது மரம் புலம்பப் போகி,
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை
5
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு
இனிதுகொல், வாழி தோழி?'' என, தன்
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப,
10
அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப்
பாணன் வந்தனன், தூதே; நீயும்
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி,
நெடுந் தேர் ஊர்மதி, வலவ!
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை.......மள்ளனார்

 

254. முல்லை
'நரை விராவுற்ற நறு மென் கூந்தற்
செம் முது செவிலியர் பல பாராட்ட,
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ,
5
மனை உறை புறவின் செங் காற் சேவல்
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல,
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல,
10
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி,
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும்,
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப,
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய,
15
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான்
சொல்லிய அளவை, நீடாது, வல்லென,
தார் மணி மா அறிவுறாஅ,
20
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே!
வினை முற்றி வந்து எய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

 

264. முல்லை
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன,
குழை அமல் முசுண்டை வாலிய மலர,
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப்
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்,
5
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு,
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர,
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து,
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக,
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி,
10
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர்
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக்
காய் சின யானை கங்குல் சூழ,
அஞ்சுவர இறுத்த தானை
15
வெஞ் சின வேந்தன் பாசறையோரே?
பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார்

 

274. முல்லை
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து,
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
பருவம் செய்த பானாட் கங்குல்,
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
5
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி,
திண் கால் உறியன், பானையன், அதளன்,
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
10
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ,
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே.
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார்

 

284. முல்லை
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு,
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி,
5
இன் துயில் எழுந்து, துணையொடு போகி,
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி,
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர்,
விசைத்த வில்லர், வேட்டம் போகி,
10
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்
காமர் புறவினதுவே காமம்
நம்மினும் தான் தலைமயங்கிய
அம் மா அரிவை உறைவு இன் ஊரே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - இடைக்காடனார்

 

294. முல்லை
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
5
நீர் வார் கண்ணின் கருவிளை மலர,
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
10
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
'காய் சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என
15
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி! என் தனிமையானே.
பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்

 

304. முல்லை
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
5
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
10
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய,
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
15
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப,
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என,
20
நம் நோய் தன்வயின் அறியாள்,
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்

 

314. முல்லை
'நீலத்து அன்ன நீர் பொதி கருவின்,
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப,
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப,
5
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின்
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள,
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை,
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன்
10
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர்
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப்
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப,
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என,
15
கடவுட் கற்பின் மடவோள் கூற,
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின்
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்!
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி!
வேலி சுற்றிய வால் வீ முல்லைப்
20
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின்
இன் நகை இளையோள் கவவ,
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே!
வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்

 

324. முல்லை
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத்
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன,
5
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில்
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும்
துளி படு மொக்குள் துள்ளுவன சால,
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய,
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய்,
10
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த
வண்டு உண் நறு வீ துமித்த நேமி
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்,
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக,
செல்லும், நெடுந்தகை தேரே
15
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே!
வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார்

 

334. முல்லை
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க,
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக!
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
5
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து,
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி,
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின்
10
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப,
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது,
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து,
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப,
15
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப்
பொலிவன அமர்த்த உண்கண்,
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே!
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார்

 

344. முல்லை
வள மழை பொழிந்த வால் நிறக் களரி,
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்
5
கை மாண் தோணி கடுப்ப, பையென,
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்
எல் இடை உறாஅ அளவை, வல்லே,
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
10
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து,
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ!
பயப்புறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே!
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

 

354. முல்லை
மத வலி யானை மறலிய பாசறை,
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப,
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள,
5
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து,
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக்
கடு நடைப் புரவி வழிவாய் ஓட,
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர்
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து,
10
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய,
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்,
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண்
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே?
வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்

 

364. முல்லை
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து,
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க,
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
5
நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன்
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ,
முல்லை இல்லமொடு மலர, கல்ல
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர,
கார் தொடங்கின்றே காலை; காதலர்
10
வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை,
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்;
யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக்
கொலை குறித்தன்ன மாலை
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே!
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

 

374. முல்லை
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி,
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு,
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ,
போழ்ந்த போலப் பல உடன் மின்னி,
5
தாழ்ந்த போல நனி அணி வந்து,
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி,
இடியும் முழக்கும் இன்றி, பாணர்
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல
10
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை,
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்,
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி,
மணி மண்டு பவளம் போல, காயா
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய,
15
கார் கவின் கொண்ட காமர் காலை,
செல்க, தேரே நல் வலம் பெறுந!
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே!
பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்

 

384. முல்லை
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
5
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில்,
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
10
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?
உரைமதி வாழியோ, வலவ!' என, தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி,
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை;
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தியார்

 

394. முல்லை
களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
5
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த, பின்றை, நீயும்
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில்,
10
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர,
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள்,
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல்
15
மன்ற இரும் புதல் ஒளிக்கும்
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 20:38:35(இந்திய நேரம்)