தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மருதம்
6. மருதம்
 
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
 
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
 
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
 
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
5
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
 
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
 
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
 
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
 
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
10
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய,
 
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
 
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
 
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,
 
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
15
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!
 
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
 
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
 
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
 
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
20
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
 
இளமை சென்று தவத் தொல்லஃதே;
 
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர்

16. மருதம்
 
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
 
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
 
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
 
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
5
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
 
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
 
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
 
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
 
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
10
'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
 
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
 
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
 
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
 
கரைய, வந்து விரைவனென் கவைஇ
15
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
 
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
 
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
 
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
 
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?
பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. - சாகலாசனார்

26. மருதம்
 
கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
 
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர்
 
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
 
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப்
5
புலத்தல் கூடுமோ தோழி! அல்கல்
 
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
 
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
 
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி
 
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
10
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று
 
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே
 
புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ,
 
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
 
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
15
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே;
 
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
 
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
 
செவிலி கை என் புதல்வனை நோக்கி,
 
'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ
20
செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என்
 
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு,
 
'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்,
 
சிறு புறம் கவையினனாக, உறு பெயல்
 
தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய்
25
மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே
 
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே?
தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி

36. மருதம்
 
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
 
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
 
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
 
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
5
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
 
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
 
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
 
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
 
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
10
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
 
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
 
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
 
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
 
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
15
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
 
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
 
நார் அரி நறவின் எருமையூரன்,
 
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
 
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
20
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
 
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
 
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
 
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர்

46. மருதம்
 
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
 
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
 
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
 
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
5
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
 
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
 
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
 
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
 
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
10
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்
 
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
 
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
 
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
 
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
15
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;
 
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார்

56. மருதம்
 
நகை ஆகின்றே தோழி! நெருநல்
 
மணி கண்டன்ன துணி கயம் துளங்க,
 
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,
 
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
5
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய
 
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
 
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
 
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
 
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
10
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
 
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு,
 
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு
 
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று,
 
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற
15
என்னும் தன்னும் நோக்கி,
 
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.
பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

66. மருதம்
 
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
 
மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
 
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
 
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்
5
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
 
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி!
 
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
 
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
 
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன்
10
மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து,
 
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
 
பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர்
 
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன். தாங்காது,
 
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப்
15
புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக்
 
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த
 
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு
 
தானே புகுதந்தோனே; யான் அது
 
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்
20
கலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச் சென்று
 
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
 
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
 
பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான்,
 
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
25
பழங் கணோட்டமும் நலிய,
 
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே.
பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

76. மருதம்
 
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க,
 
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென
 
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
 
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
5
அவை புகு பொருநர் பறையின், ஆனாது,
 
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில்,
 
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
 
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,
 
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என,
10
ஆதிமந்தி பேதுற்று இனைய,
 
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்
 
அம் தண் காவிரி போல,
 
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே.
'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர்

86. மருதம்
 
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
 
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
 
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
 
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
5
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
 
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
 
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
 
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
 
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
10
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,
 
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
 
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
 
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
 
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என,
15
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
 
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
 
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
 
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
 
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,
20
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
 
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
 
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
 
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
 
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்
25
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,
 
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
 
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
 
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
 
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
30
மடம் கொள் மதைஇய நோக்கின்,
 
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.
வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார்

96. மருதம்
 
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
 
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
 
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
 
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
5
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி,
 
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
 
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
 
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
 
'ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
10
கொண்டனை' என்ப 'ஓர் குறுமகள்' அதுவே
 
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
 
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
 
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
 
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
15
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,
 
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
 
களிறு கவர் கம்பலை போல,
 
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே.
தோழி வாயில் மறுத்தது. மருதம் பாடிய இளங்கடுங்கோ

106. மருதம்
 
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
 
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
 
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
 
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
5
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
 
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
 
செய்யாம்ஆயினும், உய்யாமையின்,
 
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண்
 
உலமந்து வருகம் சென்மோ தோழி!
10
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
 
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
 
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
 
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.
தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி வங்கனார்

116. மருதம்
 
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
 
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
 
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
 
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
5
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப்
 
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
 
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
 
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
 
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
10
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே,
 
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து
 
அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
 
மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
 
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
15
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்
 
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
 
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
 
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
 
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர்

126. மருதம்
 
நின் வாய் செத்து நீ பல உள்ளி,
 
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
 
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
 
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
5
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
 
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
 
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர்
 
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
 
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
10
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
 
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
 
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
 
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி
 
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
15
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி,
 
திதியனொடு பொருத அன்னி போல
 
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச்
 
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய
 
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
20
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
 
மின் நேர் மருங்குல், குறுமகள்
 
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்

136. மருதம்
 
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
 
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
 
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
 
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட்
5
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
 
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
 
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
 
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
 
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
10
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
 
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
 
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
 
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
 
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
15
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
 
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
 
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
 
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
 
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
20
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
 
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
 
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என
 
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
 
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
25
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
 
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
 
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
 
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
 
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார்

146. மருதம்
 
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
 
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
 
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
 
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
5
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,
 
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
 
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
 
யார்கொல் அளியள்தானே எம் போல்
 
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
10
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்
 
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
 
ஆயமும் அயலும் மருள,
 
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்

156. மருதம்
 
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
 
மூட்டுறு கவரி தூக்கியன்ன,
 
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
 
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
5
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ,
 
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
 
தீம் புனல் ஊர! திறவதாகக்
 
குவளை உண்கண் இவளும் யானும்
 
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
10
காயா ஞாயிற்றாக, தலைப்பெய,
 
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
 
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
 
கள்ளும் கண்ணியும் கையுறையாக
 
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
15
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,
 
தணி மருங்கு அறியாள், யாய் அழ,
 
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார்

166. மருதம்
 
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
 
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
 
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும்
 
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில்,
5
நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை,
 
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
 
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,
 
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின்
 
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என
10
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின்,
 
யார்கொல் வாழி, தோழி! நெருநல்
 
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ,
 
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு,
 
புதுவது வந்த காவிரிக்
15
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே?
பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார்

176. மருதம்
 
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
 
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
 
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால்,
 
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்,
5
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை
 
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க,
 
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
 
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு
 
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது
10
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல்,
 
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
 
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!
 
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி
 
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
15
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,
 
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
 
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது
 
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல்
 
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
20
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய,
 
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
 
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,
 
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
 
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
25
கூர்நுனை மழுகிய எயிற்றள்
 
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம் -
பாடிய இளங்கடுங்கோ

186. மருதம்
 
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
 
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
 
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
 
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை
5
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும்
 
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
 
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே,
 
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
 
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
10
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட,
 
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
 
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
 
இன்னும் பிறள் வயினானே; மனையோள்
 
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
15
மாரி அம்பின், மழைத்தோற் பழையன்
 
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
 
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின்
 
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர்
 
திரு நுதல் பசப்ப நீங்கும்
20
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது. -பரணர்

196. மருதம்
 
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
 
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
 
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,
 
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
5
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு
 
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
 
விடியல் வைகறை இடூஉம் ஊர!
 
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
 
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
10
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய,
 
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
 
அன்னிமிஞிலியின் இயலும்
 
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர்

206. மருதம்
 
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப்
 
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,
 
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
 
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம்,
5
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத்
 
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
 
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
 
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர்
 
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
10
ஆராக் காதலொடு தார் இடை குழைய,
 
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
 
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து,
 
அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
 
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
15
பெரு பெயற்கு உருகியாஅங்கு,
 
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார்

216. மருதம்
 
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்
 
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
 
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
 
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
5
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
 
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப்
 
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்;
 
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
 
கழனி உழவர் குற்ற குவளையும்,
10
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு,
 
பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
 
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
 
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
 
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
15
பெருங் களிற்று எவ்வம் போல,
 
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார்

226. மருதம்
 
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்;
 
நாண் இலை மன்ற யாணர் ஊர!
 
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை,
 
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
5
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்
 
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும்,
 
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான்,
 
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை,
 
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய,
10
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி,
 
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
 
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள்,
 
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
 
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
15
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,
 
போர் அடு தானைக் கட்டி
 
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே.
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர்

236. மருதம்
 
மணி மருள் மலர முள்ளி அமன்ற,
 
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன்
 
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி,
 
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை,
5
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப்
 
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக்
 
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ
 
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன்
 
காமம் பெருமை அறியேன், நன்றும்
10
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல்
 
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப,
 
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
 
அறியாமையின் அழிந்த நெஞ்சின்,
 
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின்,
15
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை,
 
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என
 
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,
 
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என,
 
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த
20
ஆதிமந்தி போல,
 
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே.
ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர்

246. மருதம்
 
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை
 
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக,
 
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
 
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர!
5
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு
 
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு
 
ஆடினை என்ப, நெருநை; அலரே
 
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
 
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்,
10
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
 
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,
 
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
 
மொய் வலி அறுத்த ஞான்றை,
 
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.
 
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - பரணர்

256. மருதம்
 
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில
 
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
 
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
 
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
5
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு
 
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
 
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர!
 
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே
 
கையகப்பட்டமை அறியாய்; நெருநை
10
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை
 
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து,
 
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது
 
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
 
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,
15
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்,
 
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
 
அறனிலாளன்,'அறியேன்' என்ற
 
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,
 
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,
20
நீறு தலைப்பெய்த ஞான்றை,
 
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.
 
தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்

266. மருதம்
 
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின்
 
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை,
 
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
 
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
5
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ,
 
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி,
 
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து,
 
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
10
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
 
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
 
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
 
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
 
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
15
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது
 
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
 
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
 
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
 
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
20
திரு மணி விளக்கின் அலைவாய்ச்
 
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே!
 
பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. -பரணர்

276. மருதம்
 
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
 
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன்
 
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக்
 
கடி இலம் புகூஉம் கள்வன் போல,
5
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு
 
ஆவது ஆக! இனி நாண் உண்டோ?
 
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
 
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண,
 
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
10
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல,
 
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
 
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று
 
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்,
 
பரந்து வெளிப்படாது ஆகி,
15
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே!
 
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர்

286. மருதம்
 
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,
 
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;
 
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,
 
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,
5
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த
 
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
 
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!
 
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
 
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு,
10
அறனும் பொருளும் வழாமை நாடி,
 
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன்
 
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்;
 
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
 
அரிய பெரியோர்த் தெரியுங்காலை,
15
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன
 
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
 
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே?
 
'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத ்தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார்

296. மருதம்
 
கோதை இணர, குறுங் கால், காஞ்சிப்
 
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல்,
 
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு
 
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும்
5
பெரு நீர் வையை அவளொடு ஆடி,
 
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின்
 
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில்
 
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி
 
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும்
10
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல்
 
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன்,
 
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய
 
மலிதரு கம்பலை போல,
 
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே.
 
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது. -மதுரைப் பேராலவாயார்

306. மருதம்
 
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!
 
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
 
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ
 
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட,
5
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்
 
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து,
 
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
 
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
 
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட
10
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி
 
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த
 
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி.
 
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு
 
ஊடினள் சிறு துனி செய்து எம்
15
மணல் மலி மறுகின் இறந்திசினோளே.
 
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

316. மருதம்
 
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை,
 
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
 
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து,
 
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட,
5
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து,
 
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
 
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
 
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள்,
 
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர,
10
பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ
 
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை!
 
அது புலந்து உறைதல் வல்லியோரே,
 
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து,
 
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி,
15
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப,
 
வைகுநர் ஆகுதல் அறிந்தும்,
 
அறியார் அம்ம, அஃது உடலுமோரே!
 
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார்

326. மருதம்
 
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி,
 
பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல்,
 
நல்லள் அம்ம, குறுமகள் செல்வர்
 
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
5
நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில்,
 
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன
 
நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து,
 
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்
 
இழை அணி யானைச் சோழர் மறவன்
10
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை,
 
புனல் மலி புதவின், போஒர் கிழவோன்,
 
பழையன் ஓக்கிய வேல் போல்,
 
பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே!
 
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர்

336. மருதம்
 
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
 
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
 
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
 
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய்
5
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின்,
 
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர்
 
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின்
 
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க்
 
காஞ்சி நீழல் குரவை அயரும்
10
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன்
 
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
 
ஏசுப என்ப, என் நலனே; அதுவே
 
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
 
கொல் களிற்று யானை நல்கல்மாறே;
15
தாமும் பிறரும் உளர்போல் சேறல்
 
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்,
 
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச்
 
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,
 
என்னொடு திரியானாயின், வென் வேல்
20
மாரி அம்பின் மழைத் தோற் சோழர்
 
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
 
ஆரியர் படையின் உடைக, என்
 
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!
 
நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார்

346.மருதம்
 
நகை நன்று அம்ம தானே இறை மிசை
 
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
 
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல்,
 
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து,
5
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்
 
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை
 
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து,
 
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி,
 
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை
10
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப்
 
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர!
 
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
 
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி,
 
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப,
15
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி,
 
எம் மனை வாராயாகி, முன் நாள்,
 
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக்
 
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர்,
 
இழை அணி யானைப் பழையன் மாறன்,
20
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
 
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
 
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
 
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
 
ஏதில் மன்னர் ஊர் கொள,
25
கோதை மார்பன் உவகையின் பெரிதே.
 
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர்

356.மருதம்
 
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை
 
உகு வார் அருந்த, பகு வாய் யாமை
 
கம்புள் இயவன் ஆக, விசி பிணித்
 
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
5
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என்
 
பொற் தொடி முன்கை பற்றினனாக,
 
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே,
 
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில்
 
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
10
கற் போல் நாவினேனாகி, மற்று அது
 
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க்
 
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன்
 
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன்
 
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார்
15
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று,
 
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது,
 
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே
 
அருவி ஆம்பல் கலித்த முன்துறை
 
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன
20
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே?
 
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.-பரணர்

366. மருதம்
 
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
 
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து,
 
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி,
 
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன்
5
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்,
 
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர்
 
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ,
 
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி,
 
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு,
10
நரை மூதாளர் கை பிணி விடுத்து,
 
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
 
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன,
 
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல் அரிவையொடு,
 
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை
15
நீ தற் பிழைத்தமை அறிந்து,
 
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே.
 
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்

376. மருதம்
 
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன்
 
கல்லா யானை கடி புனல் கற்றென,
 
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
 
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
5
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
 
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
 
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
 
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
 
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப,
10
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
 
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ!
 
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
 
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
 
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
15
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய,
 
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக்
 
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
 
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!
 
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர்

386. மருதம்
 
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
 
வாளை நாள் இரை தேரும் ஊர!
 
நாணினென், பெரும! யானே பாணன்
 
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
5
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
 
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த
 
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க்
 
கணையன் நாணியாங்கு மறையினள்
 
மெல்ல வந்து, நல்ல கூறி,
10
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின்
 
சேரியேனே; அயல் இலாட்டியேன்;
 
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத்
 
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர,
 
நுதலும் கூந்தலும் நீவி,
15
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே.
 
தோழி வாயில் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர்

396. மருதம்
 
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப்
 
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
 
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்,
 
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
5
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி,
 
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது;
 
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
 
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
 
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின்
10
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே;
 
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி,
 
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய,
 
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
 
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின்
15
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ,
 
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
 
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து,
 
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன்
 
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே!
 
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 20:41:25(இந்திய நேரம்)