தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாலை
1. பாலை
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
5
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
10
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்,
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
15
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார்
3. பாலை
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார்.
5. பாலை
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்,
விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ,
குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற
5
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள்,
கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல்,
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையல்அம் காட்டு,
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
10
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப,
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி,
பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல்,
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர,
15
பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம்
இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு
அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக' என்னுநள் போல,
முன்னம் காட்டி, முகத்தின் உரையா,
20
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி,
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத்
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மா மலர்
25
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்
கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள்மாதோ, பிரிதும் நாம் எனினே!
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
7. பாலை
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;
தலை முடிசான்ற; தண் தழை உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;
5
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை;
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
10
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை,
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,
15
பிற்படு பூசலின் வழிவழி ஓடி,
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,
20
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த
துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார்.
9. பாலை
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின்,
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை,
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு,
5
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய்
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு,
ஆலி வானின் காலொடு பாறி,
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின்,
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
10
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி,
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து,
15
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது,
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின்
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண்
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ,
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி,
20
கன்று புகு மாலை நின்றோள் எய்தி,
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி,
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல்,
25
அம் தீம் கிளவிக் குறுமகள்
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே?
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. - கல்லாடனார்
11. பாலை
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
5
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப்
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
10
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர,
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்
அழுதல் மேவல ஆகி,
15
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே!
தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்'என்பது படச் சொல்லியது. - ஒளவையார்
13. பாலை
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
5
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
10
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
15
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
கவவு இன்புறாமைக் கழிக வள வயல்,
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல்
20
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர,
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
வெண் குருகு நரல, வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே!
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார்
15. பாலை
எம் வெங் காமம் இயைவது ஆயின்,
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
5
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
தோழிமாரும் யானும் புலம்ப,
10
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
15
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி,
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
குன்ற வேயின் திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!
மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார்
17. பாலை
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்,
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ,
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
5
முயங்கினள் வதியும்மன்னே! இனியே,
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
10
வல்லகொல், செல்லத் தாமே கல்லென
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின்,
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த,
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்,
15
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல்,
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின்,
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்,
20
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,
வைகுறு மீனின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
19. பாலை
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
5
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம்,
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது,
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
10
சேயிதழ் அனைய ஆகி, குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்
வெய்ய உகுதர, வெரீஇ, பையென,
15
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை
பூ வீ கொடியின் புல்லெனப் போகி,
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார்
21. பாலை
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
5
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர்
10
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன்
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,
15
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட,
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்
20
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின்
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
25
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து,
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும்
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார்
23. பாலை
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
5
காடே கம்மென்றன்றே; அவல,
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;
10
அனையகொல் வாழி, தோழி! மனைய
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும்
மௌவல், மாச் சினை காட்டி,
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

 

 

25. பாலை
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்,
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
பைந் தாது அணிந்த போது மலி எக்கர்,
5
வதுவை நாற்றம் புதுவது கஞல,
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில்
படு நா விளி யானடுநின்று, அல்கலும்
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண்,
10
சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர்
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன,
இகழுநர் இகழா இள நாள் அமையம்
செய்தோர் மன்ற குறி" என, நீ நின்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
15
வாராமையின் புலந்த நெஞ்சமொடு,
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என,
மெல்லிய இனிய கூறி, வல்லே
வருவர் வாழி தோழி! பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
20
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன்,
இன் இசை இயத்தின் கறங்கும்
கல்மிசை அருவிய காடு இறந்தோரே.
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்
27. பாலை
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம் அழ,
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார்,
5
செல்ப" என்ப' என்போய்! நல்ல
மடவைமன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
10
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,
15
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்
குருதியொடு துயல்வந்தன்ன நின்
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?
செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார்
29. பாலை
"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,
கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப,
5
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்
மாவின் நறு வடி போல, காண்தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
10
வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண்
தாழக் கூறிய தகைசால் நல் மொழி
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின்
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி
15
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
20
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!
வினை முற்றி மீண்ட தலைமகன், 'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார்
31. பாலை
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என,
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
5
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு,
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
10
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,
'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
15
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே.
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்
33. பாலை
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
5
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
10
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய்
வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
யாமே எமியம் ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை,
15
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள்,
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல.
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம்
செய்வினை ஆற்றுற விலங்கின்,
20
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே?
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
35. பாலை
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்
5
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
10
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம்
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து அணிந்து,
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன்
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல
துஞ்சா முழவின் கோவற் கோமான்
15
நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை,
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு,
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!
மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற் கீரத்தனார்
37. பாலை
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
5
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி,
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
10
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை,
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
15
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,
மருதமர நிழல், எருதொடு வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார்
39. பாலை
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து,
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
5
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,
10
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு,
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென,
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,
15
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப்
பரந்து படு பாயல் நவ்வி பட்டென,
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,
'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின்
20
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின்
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
25
போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே!
பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச் செங்கண்ணனார்
41. பாலை
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
5
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப,
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
10
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
15
அம் கலுழ் மாமை கிளைஇய,
நுண் பல் தித்தி, மாஅயோளே?
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார்
43. பாலை
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
5
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
10
மை இருங் கானம் நாறும் நறு நுதல்,
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
அளியரோ அளியர்தாமே அளி இன்று
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
15
இன் துணைப் பிரியும் மடமையோரே!
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரையாசிரியர் நல்லந்துவனார்
45. பாலை
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
5
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே, காதலர். மாமை,
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
10
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
15
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார்,
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல,
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்
47. பாலை
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
5
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து,
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
10
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,
குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும்
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள் எய்தி,
15
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன்
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
வேய் புரை பணைத் தோள், பாயும்
நோய் அசா வீட, முயங்குகம் பலவே.
தலைமகன் இடைச் சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்
49. பாலை
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
5
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ!
10
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர்,
15
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே!
உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார்
51. பாலை
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
5
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
10
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது,
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.
பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார்
53. பாலை
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
அறியாய், வாழி தோழி! இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
5
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
10
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
15
பொருளே காதலர் காதல்;
'அருளே காதலர்' என்றி, நீயே.
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார்
55. பாலை
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
விளி முறை அறியா வேய் கரி கானம்,
5
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
10
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென,
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
15
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்
காதல் வேண்டி, எற் துறந்து
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.
புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார்
57. பாலை
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து,
5
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
10
யாமே எமியம்ஆக, தாமே
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர்
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
15
முதுநீர் முன்துறை முசிறி முற்றி,
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து,
பானாட் கங்குலும் பகலும்
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.- நக்கீரர்
59. பாலை
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
5
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல,
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை,
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே தோழி!
10
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
15
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன்
61. பாலை
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத்
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து
5
ஆழல் வாழி, தோழி! தாழாது,
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
10
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது
15
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.
தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
63. பாலை
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,
5
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,
10
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து,
மன்று நிறை பைதல் கூர, பல உடன்
கறவை தந்த கடுங் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை
15
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
சேக் கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே.
தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க் கண்ணம்புல்லனார்
65. பாலை
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
5
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
10
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர்
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
15
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி,
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள்,
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு
20
அரியவால்' என அழுங்கிய செலவே!
வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார்
67. பாலை
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்,
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,
5
அரம் போழ் நுதிய வாளி அம்பின்,
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்,
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
10
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
15
'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு
நிலம் படு மின்மினி போல, பல உடன்
இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே!
பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நோய்பாடியார்
69. பாலை
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
5
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
கான மட மரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
10
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
15
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண்
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
தலை நாள் அலரின் நாறும் நின்
20
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.
'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
71. பாலை
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
5
மை இல் மான் இனம் மருள, பையென
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
10
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக்
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
15
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,
இது கொல் வாழி, தோழி! என் உயிர்
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?
பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார்
73. பாலை
பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ;
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க,
5
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய்,
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என,
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
10
இருவேம் நம் படர் தீர வருவது
காணிய வம்மோ காதல்அம் தோழி!
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின்,
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
15
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர்
சென்ற தேஎத்து நின்றதால், மழையே.
தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. - எருமை வெளியனார்
75. பாலை
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
5
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல்,
10
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய்,
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும்
15
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என-
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்;
20
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி
ஆனா நோயை ஆக, யானே
பிரியச் சூழ்தலும் உண்டோ,
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?'
'பொருள்வயிற் பிரிவர்' என வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்'எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார்
77. பாலை
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
5
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
10
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
15
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
திருந்துஇலை எஃகம் போல,
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.
தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார்
79. பாலை
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
5
வன் புலம் துமியப் போகி, கொங்கர்
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
10
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
15
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,
கல் பிறங்கு அத்தம் போகி,
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
81. பாலை
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
5
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும்
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
10
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
மை எழில் உண்கண் கலுழ
15
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே?
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்
83. பாலை
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
கறை அடி மடப் பிடி கானத்து அலற,
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து,
5
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து,
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
10
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்,
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ,
எய்த வந்தனவால்தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார்
85. பாலை
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து,
5
ஆழல் வாழி, தோழி! 'சாரல்,
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
10
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
வருதும், யாம்' எனத் தேற்றிய
15
பருவம்காண் அது; பாயின்றால் மழையே.
தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
87. பாலை
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,
5
குடுமி நெற்றி நெடு மரச் சேவல்
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,
10
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம்,
நனி நீடு உழந்தனைமன்னே! அதனால்
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி,
15
தாழ் இருங் கூந்தல் நம் காதலி
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.
வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரைப் பேராலவாயார்
89. பாலை
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
5
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
10
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்
மை படு திண் தோள் மலிர வாட்டி,
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
15
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
20
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,
இடு மணற் பந்தருள் இயலும்,
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர்
91. பாலை
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
5
பாசி தின்ற பைங் கண் யானை
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
10
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
15
தட மருப்பு எருமை தாமரை முனையின்,
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
93. பாலை
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து;
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
5
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
10
நாள் அங்காடி நாறும் நறு நுதல்
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,
15
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,
20
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை.
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.

வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கணக்காயனார் மகனார் நக்கீரனார்
95. பாலை
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்;
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்;
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின்
5
எவனோ? வாழி, தோழி! பொரிகால்
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ,
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க,
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும்
10
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,
கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ,
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
15
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே?
போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
97. பாலை
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
5
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
10
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி,
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து,
15
ஆழல்' என்றி தோழி! யாழ என்
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து,
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை,
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி,
20
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்,
புகை புரை அம் மஞ்சு ஊர,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
99. பாலை
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
5
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
10
நன்றே, கானம்; நயவரும் அம்ம;
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்,
பிடி மிடை, களிற்றின் தோன்றும்
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ
101. பாலை
அம்ம வாழி, தோழி! 'இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
5
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகி,
10
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு,
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
15
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்
103. பாலை
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின்,
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி,
காமர் சேவல் ஏமம் சேப்ப;
5
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து,
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி,
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை,
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும்
10
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின்
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என,
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
தானே சென்ற நலனும்
15
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே?
தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது.- காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
105. பாலை
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல் வரை நாடன் தற்பாராட்ட
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து,
5
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி,
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு,
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச்
10
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர்
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து,
15
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம்
முகை தலை திறந்த வேனிற்
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?
மகட் போக்கிய தாய் சொல்லியது. - தாயங்கண்ணனார்
107. பாலை
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று
5
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
10
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
15
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
மாலை இன் துணைஆகி, காலைப்
20
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப,
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
109. பாலை
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ்
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
5
காடு கால்யாத்த நீடு மரச் சோலை
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை,
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச்
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென,
10
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்,
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப்
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும்
15
வறன் உறு குன்றம் பல விலங்கினவே.
இடைச் சுரத்துத் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- கடுந்தொடைக் காவினார்
111. பாலை
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
வருவர் வாழி, தோழி! அரச
யானை கொண்ட துகிற் கொடி போல,
5
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர,
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
10
அத்தக் கேழல் அட்ட நற் கோள்
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப,
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி,
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண் தேர் விளக்கின், தோன்றும்
15
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ
113. பாலை
நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்,
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
5
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
நல்காது துறந்த காதலர், 'என்றும்
10
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
15
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல்
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்
20
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
25
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கல்லாடனார்
115. பாலை
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
5
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய
10
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
15
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை,
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடாமையின், நீடியோரே.
பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
117. பாலை
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
5
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
10
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
15
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே?
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - .........
119. பாலை
'நுதலும் தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது,
5
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை,
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
10
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து,
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
15
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள
மறப் புலி உழந்த வசி படு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
20
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே?
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார்
121. பாலை
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
5
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி,
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி,
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு
10
தான் வரும் என்ப, தட மென் தோளி
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்,
15
கரு முக முசுவின் கானத்தானே.
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன்
123. பாலை
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவின் அழி குன்றம்
5
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
10
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை,
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங் கடல் ஓதம் போல,
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே.
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனார்
125. பாலை
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய்,
5
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத்
தாது உறு குவளைப்போது பிணி அவிழ,
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க்
கடாஅம் மாறிய யானை போல,
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
10
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர,
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
முனிய அலைத்தி, முரண் இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
15
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின்
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
20
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர் போல,
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே.
தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -பரணர்
127. பாலை
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும்,
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய
வலம் படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
5
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
10
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள்
தங்கலர் வாழி, தோழி! செங் கோற்
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி,
15
கல்லா மழவர் வில் இடம் தழீஇ,
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
129. பாலை
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி,
5
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி,
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
10
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப,
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்,
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல்
15
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின்,
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
- குடவாயிற் கீரத்தனார்
131. பாலை
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப்
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன,
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை
5
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என
வீளை அம்பின் விழுத் தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
10
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம், 'நம்மொடு
வருக' என்னுதிஆயின்,
15
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார்
133. பாலை
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
5
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
10
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
15
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
135. பாலை
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
5
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி,
பேதுற்றிசினே காதல்அம் தோழி!
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
10
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர்,
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை,
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர்
137. பாலை
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
5
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
10
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
15
நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர்
முதுகூத்தனார்
139. பாலை
துஞ்சுவது போல இருளி, விண் பக
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,
5
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்;
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை,
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை,
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து
10
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை;
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்,
காமர் துணையொடு ஏமுற வதிய;
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவைபோற் பாஅய், பல உடன்
15
நீர் வார் மருங்கின் ஈரணி திகழ;
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்!
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்
கருவிக் கார்இடி இரீஇய
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே.
பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார்
141. பாலை
அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
5
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
10
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
15
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ,
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
20
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது;
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்
25
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர,
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர்
143. பாலை
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
5
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும்
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே,
10
வசை இல் வெம் போர் வானவன் மறவன்
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
15
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார்
145. பாலை
வேர் முழுது உலறி நின்ற புழற்கால்,
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொற் தலை ஓதி
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
5
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
வாள்வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார,
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
10
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர்
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில்
15
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற்
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது,
20
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்,
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
147. பாலை
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
5
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென,
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளி வீதியைப் போல நன்றும்
10
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே!
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஒளவையார்
149. பாலை
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும்
5
அத்த நீள் இடைப் போகி, நன்றும்
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர்
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
10
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
15
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
151. பாலை
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என,
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
5
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
10
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும்
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு
உறுவது கூறும், சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண் குரல்
15
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே!
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார்
153. பாலை
நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
வெம்பும்மன், அளியள்தானே இனியே,
5
வன்கணாளன் மார்புஉற வளைஇ,
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு,
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின்,
10
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப்
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல்
வல்லுநள்கொல்லோ தானே எல்லி
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
15
மீனொடு பொலிந்த வானின் தோன்றி,
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின்
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?
மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன்
155. பாலை
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
5
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம்
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
10
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
15
விரல் ஊன்று வடுவின் தோன்றும்
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
157. பாலை
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
அரி நிறக் கலுழி ஆர மாந்தி,
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர்,
5
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின்
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல்
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி,
கான யானை கவளம் கொள்ளும்
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார்
10
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி!
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து,
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய்,
வினை அழி பாவையின் உலறி,
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே!
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வேம்பற்றூர்க் குமரனார்
159. பாலை
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
5
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர்
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி,
10
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும்
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது
15
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன்
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
20
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின்
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார்
161. பாலை
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி;
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை,
5
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக்
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு
10
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல்,
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல் வரல் இள முலை நனைய;
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ.
பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று, தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப் புல்லங்கண்ணனார்
163. பாலை
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய,
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள்,
எமியம் ஆக, துனி உளம் கூர,
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ,
5
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
10
எனக்கே வந்தனை போறி! புனற் கால்
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே!
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்
165. பாலை
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்,
5
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும்
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என,
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென,
10
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ,
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி,
'தருமணற் கிடந்த பாவை என்
அருமகளே என முயங்கினள் அழுமே!
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ......
167. பாலை
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே
5
இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப்
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,
10
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்,
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
15
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்
கூர் முகச் சிதலை வேய்ந்த
20
போர் மடி நல் இறைப் பொதியிலானே?
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது. -கடியலூர் உருத்திரங்கண்ணனார்
169. பாலை
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட,
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை,
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை,
5
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக்
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும்
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து,
10
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
கயல் உமிழ் நீரின் கண் பனி வார,
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால், அளியள், திருந்திழைதானே!
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - தொண்டியாமூர்ச் சாத்தனார்
171. பாலை
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும்
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
பணை எழில் அழிய வாடும்; நாளும்
நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது
5
இனையல் வாழி, தோழி! புணர்வர்
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள்
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்,
10
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின்,
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப்
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய,
கருங் கோட்டு இருப்பை ஊரும்
15
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே!
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார்
173. பாலை
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல்
5
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின்
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,
வருவர் வாழி, தோழி! பல புரி
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ,
10
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,
காடு கவின் அழிய உரைஇ, கோடை
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
15
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம்
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
விண் பொரு நெடு வரைக் கவாஅன்
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார்
175. பாலை
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்,
5
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும்
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
வருதும்' என்றனர் அன்றே தோழி!
10
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன்
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
15
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்,
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
மண் பயம் பூப்பப் பாஅய்,
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார்.
177. பாலை
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப்
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண்
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து
5
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால்
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை,
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ,
10
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
வல்லே வருவர்போலும் வெண் வேல்
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
15
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்குடை வன முலைத் தாஅய நின்
20
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்
179. பாலை
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில்,
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு,
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி
5
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது,
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர்
நல் நிலை பொறித்த கல் நிலை அதர,
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்
10
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை,
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்,
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம்
மதி ஏர் வாள் நுதல் புலம்ப,
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
181. பாலை
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின்,
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
5
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு
10
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
15
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
20
மகர நெற்றி வான் தோய் புரிசைச்
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்,
25
அணங்குசால், அரிவை இருந்த
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே.
இடைச் சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
183. பாலை
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ் வரி வாடவும்,
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
5
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி,
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
10
காலை வந்தன்றால் காரே மாலைக்
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
15
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே?
தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -கருவூர்க் கலிங்கத்தார்
185. பாலை
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய,
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து,
இரும்பின் இன் உயிர் உடையோர் போல,
5
வலித்து வல்லினர், காதலர்; வாடல்
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர்
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய,
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
10
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
பெரு விழா விளக்கம் போல, பல உடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ
187. பாலை
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
5
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி,
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
10
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி,
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
15
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து
வேனில் வெற்பின் கானம் காய,
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து,
20
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்
189. பாலை
பசும் பழப் பலவின் கானம் வெம்பி,
விசும்பு கண் அழிய, வேனில் நீடி,
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு
5
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி,
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென,
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற,
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
10
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும்
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
தேர் ஊர் தெருவில் ததும்பும்
15
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே.
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார்
191. பாலை
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ,
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி,
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர்
5
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர்
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
10
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை,
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும்,
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
15
அறல் என விரிந்த உறல் இன் சாயல்
ஒலி இருங் கூந்தல் தேறும்' என,
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?
தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
193. பாலை
கான் உயர் மருங்கில் கவலை அல்லது,
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த,
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய்,
5
பொறித்த போலும் வால் நிற எருத்தின்,
அணிந்த போலும் செஞ் செவி, எருவை;
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி
10
கொல் பசி முது நரி வல்சி ஆகும்
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப்
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி,
முருந்து ஏர் முறுவல், இளையோள்
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே.
பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
195. பாலை
'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும்' என, தாயே,
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி,
5
உவந்து, இனிது அயரும் என்ப; யானும்,
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்,
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள்,
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய
10
நலம் புனை உதவியும் உடையன்மன்னே;
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல;
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி,
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல்,
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
15
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்;
மாறா வருபனி கலுழும் கங்குலில்,
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்,
எம் மனை முந்துறத் தருமோ?
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே?
மகட் போக்கிய நற்றாய் சொல்லியது. - கயமனார்
197. பாலை
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்,
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்,
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம்
5
இனையல் வாழி, தோழி! முனை எழ
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்,
மறம் மிகு தானை, கண்ணன் எழினி
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்,
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ
10
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல்
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு,
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர,
15
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி,
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம்
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -மாமூலனார்
199. பாலை
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன்,
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர,
5
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல்
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ,
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன,
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்,
10
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல்
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும்
15
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல்
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது,
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
20
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய,
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்,
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார்
201. பாலை
அம்ம, வாழி தோழி! 'பொன்னின்
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
5
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ,
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை,
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
10
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும்
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்' என்று
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும்,
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது
15
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன்,
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத்
தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
203. பாலை
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும்,
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்,
'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள்
5
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,
'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும்
யான் இவ் வறு மனை ஒழிய, தானே,
'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால்
10
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற,
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன் வாயாக,
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
15
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த,
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே!
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர்
205. பாலை
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின்
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல,
தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப்
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி,
5
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர,
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி,
10
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி,
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல
15
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி,
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில்,
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி,
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,
20
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர,
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர்
207. பாலை
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர்
5
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக்
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்,
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை,
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள,
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல்
10
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல்
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை,
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து,
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
15
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்,
மறுத்த சொல்லள் ஆகி,
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?
மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்
209. பாலை
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான்,
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
5
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என,
ஆழல் வாழி, தோழி! அவரே,
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
10
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
15
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார்
211. பாலை
கேளாய், எல்ல! தோழி! வாலிய
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும்,
5
தண் மழை ஆலியின் தாஅய், உழவர்
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
10
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
15
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார்
213. பாலை
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்,
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி
5
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி,
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும்
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
10
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது,
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப்
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப்
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து,
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
15
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள்
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
சென்று, தாம் நீடலோஇலரே என்றும்
20
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை,
வலம் படு வென்றி வாய் வாள், சோழர்
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த
அறல் என நெறிந்த கூந்தல்,
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார்
215. பாலை
'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
வேறு பல் மொழிய தேஎம் முன்னி,
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி,
5
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே,
வலன் ஆக!' என்றலும் நன்றுமன் தில்ல
கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி,
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்,
10
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்,
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை,
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல்
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ,
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு,
15
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்,
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.
செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன்
217. பாலை
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,
துவலை தூவல் கழிய, அகல் வயல்
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்
5
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர,
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர,
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ,
10
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட,
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க,
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என,
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச்
15
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே;
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர,
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
எயிறு தீப் பிறப்பத் திருகி,
20
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே.
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்
219. பாலை
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி,
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்,
'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப்
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல்
5
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி,
'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால்,
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி,
'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள்
10
அறனிலாளனொடு இறந்தனள், இனி' என,
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்,
15
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர்
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை,
மடத் தகை மெலியச் சாஅய்,
நடக்கும்கொல்? என, நோவல் யானே.
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
221. பாலை
நனை விளை நறவின் தேறல் மாந்தி,
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ,
'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என,
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்,
5
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல்,
மதி உடம்பட்ட மை அணற் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து,
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின்
தண் நறு முச்சி புனைய, அவனொடு
10
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை,
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ,
இரும் பிடி இரியும் சோலை
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.
தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார்
223. பாலை
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர்
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி,
ஆழல் வாழி, தோழி! கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய்
5
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர்,
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை,
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின்
10
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட,
நன் முகை அதிரல் போதொடு, குவளைத்
15
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின்
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே?
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
225. பாலை
அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
இன்றே இவணம் ஆகி, நாளை,
5
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற
அகலா அம் துளை, கோடை முகத்தலின்,
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்,
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து,
10
யாத்த தூணித் தலை திறந்தவைபோல்,
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர,
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை
15
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
செறி தொடி முன்கை, நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
227. பாலை
'நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே;
திதலை அல்குல் வரியும் வாடின;
என் ஆகுவள்கொல் இவள்?' என, பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி,
5
இனையல் வாழி, தோழி! நனை கவுள்
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப்
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப,
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
10
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து,
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,
நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள்,
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்,
15
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை,
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப்
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்,
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்,
20
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து,
எல் உமிழ் ஆவணத்து அன்ன,
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே!
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்
229. பாலை
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
5
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி,
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென,
10
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்!
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப,
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி
நல் மா மேனி தொலைதல் நோக்கி,
15
இனையல் என்றி; தோழி! சினைய
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப்
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து,
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை,
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம்
20
இன் இளவேனிலும் வாரார்,
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
231. பாலை
'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி,
நல் இசை வலித்த நாணுடை மனத்தர்
5
கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர்,
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக்
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக
10
வருவர் வாழி, தோழி! பொருவர்
செல் சமம் கடந்த செல்லா நல் இசை,
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
ஆடு வண்டு அரற்றும் முச்சித்
15
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
233. பாலை
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின்
அலர் முலை நனைய, அழாஅல் தோழி!
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம்
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென,
5
ஊன் இல் யானை உயங்கும் வேனில்,
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின்,
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல்
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல்
10
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு,
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ,
பொருள்வயின் நீடலோஇலர் நின்
15
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே.
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார்
235. பாலை
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும்,
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ?
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து,
5
விண்டு முன்னிய கொண்டல் மா மழை
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ,
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
10
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய,
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்க,
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி,
15
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய,
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதையச் சாஅய்,
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்
237.பாலை
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப,
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ,
5
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து
இன்னா கழியும் கங்குல்' என்று நின்
நல் மா மேனி அணி நலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல்
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை
10
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு,
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு,
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும்,
15
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து
ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார்
239. பாலை
அளிதோதானே; எவன் ஆவதுகொல்?
மன்றும் தோன்றாது; மரனும் மாயும்
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர்,
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்,
5
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும்
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி,
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின்,
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
10
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய,
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே,
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என,
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த
15
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே!
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
241. பாலை
'துனி இன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம, அவர்' என முனியாது
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்,
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
5
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை
மூங்கில் இள முளை திரங்க, காம்பின்
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை,
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி,
10
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய்
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச்
15
செம் முக மந்தி ஆடும்
நல் மர மருங்கின் மலை இறந்தோரே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்
243. பாலை
அவரை ஆய் மலர் உதிர, துவரின
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக்
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய,
5
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக்
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை!
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப்
10
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்று;
15
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே!
தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் 'ஆற்றேன்' என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
245. பாலை
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி,
5
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்,
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல் வில் இளையர் தலைவர், எல் உற,
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
10
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள்
கான யானை வெண் கோடு சுட்டி,
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து
15
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக்
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
20
அம் மா அரிவை ஒழிய,
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
247. பாலை
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து,
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை,
5
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின்,
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகை பட
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக்
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
10
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி,
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
249. பாலை
அம்ம வாழி, தோழி! பல் நாள்
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும்
5
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி,
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ,
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
10
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார்
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ,
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை
15
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து,
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி,
உழை மான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார்
251. பாலை
தூதும் சென்றன; தோளும் செற்றும்;
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்;
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
5
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
10
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
பணியாமையின், பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்,
15
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி
மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
நிரம்பா நீள் இடைப் போகி,
20
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார்
253. பாலை
'வைகல்தோறும் பசலை பாய, என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென;
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி,
5
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன்
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல நினைந்து,
ஆழல் வாழி, தோழி! வடாஅது,
10
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய,
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து,
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
15
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன்,
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
20
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள்,
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின்,
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
மாக விசும்பின் திலகமொடு பதித்த
25
திங்கள் அன்ன நின் திரு முகத்து,
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - நக்கீரர்
255. பாலை
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
5
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே, அழி படர் அகல,
வருவர்மன்னால் தோழி! தண் பணைப்
10
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெரு வளம் மலர அல்லி தீண்டி,
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க,
15
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
கடி மனை மாடத்துக் கங்குல் வீச,
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய,
நிரை வளை ஊருந் தோள்' என,
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்
257. பாலை
வேனிற் பாதிரிக் கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம்,
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
5
பொம்மல் ஓதி பொதுள வாரி,
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
10
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி,
வல்லுவைமன்னால் நடையே கள்வர்
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்,
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து,
15
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து,
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
20
வெள் அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலைவயினானே.
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
259. பாலை
வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;
தாரும் தையின; தழையும் தொடுத்தன;
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக்
5
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர்
வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன்
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும்,
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்,
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
10
போது வந்தன்று, தூதே; நீயும்
கலங்கா மனத்தை ஆகி, என் சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி!
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்,
15
நின்னினும் மடவள் நனி நின் நயந்த
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி,
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே!
உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - கயமனார்
261. பாலை
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர,
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த்
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
5
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச்
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்,
10
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு,
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு
வில்லோர் குறும்பில் ததும்பும்,
15
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே.
புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
263. பாலை
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி,
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
பயம் கெடத் திருகிய பைது அறு காலை,
5
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு,
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்,
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி,
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
10
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ!
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
15
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே!
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார்
265. பாலை
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து,
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ் வரை மானும்கொல்லோ?
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
5
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்,
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து,
10
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து,
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து,
அணங்கு அரு மரபின் பேஎய் போல
15
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க,
துகள் அற விளைந்த தோப்பி பருகி,
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர், பூசா வாயர்,
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு
20
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ,
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார்
267. பாலை
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து,
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து,
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி,
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து,
5
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை,
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை,
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர,
மை பட்டன்ன மா முக முசுவினம்
10
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய்,
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர்அல்லர்; நாளும்
15
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு வினை
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த,
தோளே தோழி! தவறு உடையவ்வே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
269. பாலை
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
5
தறுகணாளர் நல் இசை நிறுமார்,
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
10
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர்,
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
15
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப,
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
20
திரு நுதல் மகளிர் குரவை அயரும்
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
25
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார்
271. பாலை
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி,
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு,
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக்
5
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி,
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர்
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு
10
நிலை அரும் பொருட் பிணி நினைந்தனிர்எனினே,
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே,
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும்
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
15
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள்,
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்,
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே?
செலவு உணர்த்திய தோழி, தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
273. பாலை
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்,
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ,
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப,
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்,
5
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர்
அறியார்கொல்லோ, தாமே? அறியினும்,
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்,
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ?
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு
10
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி,
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை,
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி,
15
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம்
நில வரை எல்லாம் நிழற்றி,
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.
பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது.-ஒளவையார்
275. பாலை
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
5
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என,
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
மழலை இன் சொல், கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
10
ஏதிலாளன் காதல் நம்பி,
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
15
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
277. பாலை
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப்
பகல் அழி தோற்றம் போல, பையென
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக,
5
கடையல்அம் குரல வாள் வரி உழுவை
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்,
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
10
பொத்துடை மரத்த புகர் படு நீழல்,
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின்
வாரா அளவை ஆயிழை! கூர் வாய்
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
15
மனை உறை கோழி மறனுடைச் சேவல்
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம, தானே;
20
வாரார் தோழி! நம் காதலோரே.
தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன்
279. பாலை
'நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்,
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ,
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
5
மென் முலை முற்றம் கடவாதோர்' என,
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து
10
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை
15
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி,
கையறு நெஞ்சினள், அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே?
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்
281. பாலை
 
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்,
 
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
 
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
 
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி,
5
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை
 
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
 
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை
 
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
 
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
10
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
 
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
 
அறை இறந்து, அவரோ சென்றனர்
 
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.
 
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
 
283. பாலை
 
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
 
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்,
 
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
 
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி,
5
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர்
 
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப்
 
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும்,
 
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
 
அரிய ஆகும் என்னாமை, கரி மரம்
10
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி,
 
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க,
 
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென,
 
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து,
 
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன
15
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப,
 
இனிய ஆகுக தணிந்தே
 
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே.
 
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
 
285. பாலை
 
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம்
 
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
 
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று
 
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர்,
5
காடு தேர் மடப் பிணை அலற, கலையின்
 
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
 
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி
 
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன
 
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
10
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி,
 
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
 
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள்
 
குவளை உண்கண் இவளும் நம்மொடு
 
வரூஉம் என்றனரே, காதலர்;
15
வாராய் தோழி! முயங்குகம், பலவே.
 
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
 
287. பாலை
 
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ,
 
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக,
 
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை,
 
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின்
5
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்
 
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை,
 
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
 
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
 
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை,
10
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க,
 
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
 
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க,
 
அரம்பு வந்து அலைக்கும் மாலை,
 
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.
 
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார்
 
289. பாலை
 
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
 
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
 
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும்
 
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்,
5
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும்,
 
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
 
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
 
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி
 
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
10
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி,
 
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப,
 
மை அற விரிந்த படை அமை சேக்கை
 
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ,
 
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
15
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி,
 
'நல்ல கூறு' என நடுங்கி,
 
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?
 
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்
 
291. பாலை
 
வானம் பெயல் வளம் கரப்ப, கானம்
 
உலறி இலை இலவாக, பல உடன்
 
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப,
 
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
5
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப்
 
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு
 
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல்,
 
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும்
 
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
10
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த்
 
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப,
 
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
 
உவலை சூடிய தலையர், கவலை
 
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும்
15
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர
 
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய்
 
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று,
 
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி,
 
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி,
20
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம்
 
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு
 
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப்
 
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்,
 
நல் எழில், மழைக் கண், நம் காதலி
25
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே.
 
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ
293. பாலை
 
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
 
வலை வலந்தனைய ஆக, பல உடன்
 
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்,
 
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன
5
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி,
 
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி,
 
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி,
 
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும்
 
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே,
10
செல்ப என்ப தோழி! யாமே,
 
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
 
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து,
 
இன்னா மொழிதும் என்ப;
 
என் மயங்கினர்கொல், நம் காதலோரே?
 
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார்
295. பாலை
 
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப,
 
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின்,
 
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை,
 
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி,
5
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள்
 
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி,
 
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும்
 
கல்லுடை அதர கானம் நீந்தி,
 
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
10
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து
 
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
 
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்,
 
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து,
 
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத்
15
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்,
 
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும்
 
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும்,
 
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ
 
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
20
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண்,
 
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின்
 
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
297. பாலை
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி,
 
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும்,
 
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி,
 
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
 
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்
5
 
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
 
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
 
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
 
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன்
10
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்
 
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்,
 
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
 
எழுதியன்ன கொடி படு வெருகின்
 
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை,
15
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம்
 
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
 
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும்
 
வெரு வரு கானம், நம்மொடு,
 
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே?
 
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
299. பாலை
 
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
 
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய
 
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும்,
 
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
5
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை
 
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
 
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன்
 
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்,
 
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
10
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென,
 
வைகு நிலை மதியம் போல, பையென,
 
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த
 
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
 
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
15
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப,
 
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி,
 
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு,
 
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல் மாண்டு
 
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா,
20
பருவரல் எவ்வமொடு அழிந்த
 
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே.
 
இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார்
301. பாலை
 
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி,
 
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
 
சிறு நனி ஆன்றிகம்' என்றி தோழி!
 
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம்
5
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு,
 
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
 
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து,
 
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை,
 
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி,
10
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர,
 
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி
 
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ,
 
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
 
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை,
15
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர,
 
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக்
 
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப,
 
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
 
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து,
20
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு
 
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென,
 
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர்,
 
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
 
புன் தலை மன்றம் காணின், வழி நாள்,
25
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்;
 
அதுவே மருவினம், மாலை; அதனால்,
 
காதலர் செய்த காதல்
 
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே?
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - அதியன் விண்ணத்தனார்
303. பாலை
 
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
 
பேஎய் கண்ட கனவின், பல் மாண்
 
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்,
 
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்
5
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை
 
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்,
 
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
 
புலம் கந்தாக இரவலர் செலினே,
 
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
10
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்
 
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
 
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
 
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
 
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
15
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்!
 
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன்
 
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
 
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து,
 
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
20
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே.
 
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார்
 
305. பாலை
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை,
 
பகலினும் அகலாதாகி, யாமம்
 
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய,
 
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
 
பனி மீக்கூரும் பைதல் பானாள்,
5
 
பருகுவன்ன காதலொடு திருகி,
 
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து,
 
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ;
 
அருளிலாளர் பொருள்வயின் அகல,
10
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
 
யான் எவன் உளெனோ தோழி! தானே
 
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய்,
 
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய,
 
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
15
கனை எரி பிறப்ப ஊதும்
 
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே?
 
பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
 
307. பாலை
 
'சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய்,
 
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட,
 
பகலும் கங்குலும் மயங்கி, பையென,
 
பெயல் உறு மலரின் கண் பனி வார,
5
ஈங்கு இவள் உழக்கும்' என்னாது, வினை நயந்து,
 
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை
 
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை
 
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து,
 
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை,
10
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும்
 
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில்,
 
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து
 
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது,
 
இரும் புறாப் பெடையொடு பயிரும்
15
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே?
 
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
 
309. பாலை
 
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
 
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
 
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
 
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
5
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
 
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
 
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
 
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
 
காடு மிக நெடிய என்னார், கோடியர்
10
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன்
 
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
 
நாம் செலின், எவனோ தோழி! காம்பின்
 
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
 
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
15
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம்
 
தண் பெரு படாஅர் வெரூஉம்
 
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்
 
311. பாலை
 
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று,
 
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை,
 
எழுதியன்ன திண் நிலைக் கதவம்
 
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென,
5
திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர்
 
இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள்
 
பொம்மல் ஓதி நீவிய காதலொடு,
 
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப,
 
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர்
10
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி
 
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
 
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ்
 
சுரம் இறந்து ஏகினும், நீடலர்
 
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே.
 
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
 
313. பாலை
 
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என
 
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம்
 
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும்,
 
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க,
5
ஐய ஆக வெய்ய உயிரா,
 
இரவும் எல்லையும் படர் அட வருந்தி,
 
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப,
 
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய,
 
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து,
10
வருவர் வாழி, தோழி! பெரிய
 
நிதியம் சொரிந்த நீவி போலப்
 
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை,
 
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர்
 
வசி படு புண்ணின் குருதி மாந்தி,
15
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல,
 
இல் வழிப் படூஉம் காக்கைக்
 
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
 
315. பாலை
 
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும்
 
சூழி மென் முகம் செப்புடன் எதிரின;
 
பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண்
 
கண் துணை ஆக நோக்கி, நெருநையும்,
5
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும்,
 
அறியாமையின் செறியேன், யானே;
 
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
 
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள்,
 
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி,
10
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக்
 
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய்,
 
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப,
 
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென,
 
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி,
15
சேக்குவள் கொல்லோதானே தேக்கின்
 
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை,
 
ஊன் புழுக்கு அயரும் முன்றில்,
 
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.
 
மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார்
 
317. பாலை
 
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென,
 
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி,
 
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க,
 
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
5
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்
 
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன்
 
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப,
 
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி
 
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல,
10
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
 
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப,
 
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி
 
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும்
 
ஆன் ஏமுற்ற காமர் வேனில்,
15
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்
 
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
 
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
 
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி,
 
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு
20
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,
 
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து
 
என்னுழியதுகொல் தானே பல் நாள்
 
அன்னையும் அறிவுற அணங்கி,
 
நல் நுதல் பாஅய பசலை நோயே?
 
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார்
 
319. பாலை
 
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை
 
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி,
 
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
 
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
5
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை,
 
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென
 
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை,
 
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
 
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை,
10
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின்
 
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள்
 
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத்
 
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள்,
 
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள்,
15
'செல்வேம்' என்னும் நும் எதிர்,
 
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே!
 
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
 
321. பாலை
 
பசித்த யானைப் பழங்கண் அன்ன
 
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி
 
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப,
 
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு
5
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது,
 
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்
 
படு மணி இன நிரை உணீஇய, கோவலர்
 
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்,
 
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
10
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர்,
 
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ?
 
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
 
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ?
 
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே!
15
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ,
 
யாய் அறிவுறுதல் அஞ்சி,
 
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.
 
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார்
 
323. பாலை
 
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின்
 
செய்வோர் ஏச் சொல் வாட, காதலர்
 
வருவர் என்பது வாய்வதாக,
 
ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின்
5
அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத்
 
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி,
 
காணிய வம்மோ? கற்பு மேம்படுவி!
 
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து,
 
யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து
10
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின்
 
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு
 
ஆலி அழி துளி தலைஇக்
 
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே!
 
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பறநாட்டுப் பெருங்கொற்றனார்
 
325. பாலை
 
அம்ம! வாழி, தோழி! காதலர்,
 
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர்,
 
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த
 
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும்
5
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது
 
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி,
 
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள்
 
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை,
 
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு,
10
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம்
 
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய,
 
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல்,
 
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்;
 
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள்,
15
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ,
 
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது,
 
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை,
 
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை,
 
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
20
சோலை அத்தம் மாலைப் போகி,
 
ஒழியச் சென்றோர்மன்ற;
 
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே?
 
கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்
 
327. பாலை
 
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்,
 
நன்பகல் அமையமும் இரவும் போல,
 
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து,
 
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம்
5
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப,
 
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே!
 
நீ செல வலித்தனைஆயின், யாவதும்
 
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்
 
ஆவி அவ் வரி நீர் என நசைஇ,
10
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை,
 
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்
 
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின்
 
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின்,
 
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த,
15
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை
 
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச்
 
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர்,
 
கோல் கழிபு இரங்கும் அதர,
 
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?
 
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்
 
329. பாலை
 
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து,
 
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து,
 
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர்
 
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்,
5
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர்
 
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப்
 
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து,
 
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து,
 
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு,
10
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருை
 
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
 
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்,
 
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை,
 
பனி படு சிமையப் பல் மலை இறந்தே?
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார்
 
331. பாலை
 
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை,
 
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ,
 
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின்
 
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
5
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர்
 
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
 
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
 
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய,
 
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும்,
10
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப்
 
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி,
 
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன்,
 
வேளிரொடு பொரீஇய, கழித்த
 
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!
 
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
 
333. பாலை
 
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின்
 
ஆக மேனி அம் பசப்பு ஊர,
 
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின்
 
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு
5
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின்
 
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள்
 
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி,
 
நீடலர் வாழி, தோழி! கோடையில்,
 
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது,
10
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய,
 
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து,
 
யானைப் பெரு நிரை வானம் பயிரும்
 
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து,
 
நாள் இடைப்படாமை வருவர், நமர்' என,
15
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா
 
நின் வாய் இன் மொழி நல் வாயாக
 
வருவர் ஆயினோ நன்றே; வாராது,
 
அவணர் காதலர்ஆயினும், இவண் நம்
 
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல
20
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி,
 
மறுதரல் உள்ளத்தர்எனினும்,
 
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே.
 
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கல்லாடனார்
 
335. பாலை
 
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
 
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல்
 
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல்
 
யானும் அறிவென்மன்னே; யானை தன்
5
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து,
 
இன்னா வேனில் இன் துணை ஆர,
 
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட,
 
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம்
 
அரிய அல்லமன், நமக்கே விரி தார்
10
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன்
 
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ,
 
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால்,
 
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த
 
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின்
15
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு,
 
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய,
 
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்,
 
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
 
வார் உறு கவரியின் வண்டு உண விரிய,
20
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,
 
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
 
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப்
 
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய்
 
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று
25
அமிழ்தம் ஊறும் செவ் வாய்,
 
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!
 
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார்
 
337. பாலை
 
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
 
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி,
 
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய,
 
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின்
5
அவணது ஆக, பொருள்' என்று, உமணர்
 
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை,
 
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
 
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி,
 
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
10
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே
 
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
 
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி,
 
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர,
 
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ,
15
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை,
 
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை,
 
கள்ளி நீழல் கதறுபு வதிய,
 
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை,
 
எமியம் கழிதந்தோயே பனி இருள்
20
பெருங் கலி வானம் தலைஇய
 
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே!
 
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
 
339. பாலை
 
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர்
 
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்,
 
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப்
 
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப,
5
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட
 
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
 
ஆண்மை வாங்க, காமம் தட்ப,
 
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய,
 
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி,
10
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்;
 
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு
 
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர்
 
வாழ்தல் அன்ன காதல்,
 
சாதல் அன்ன பிரிவு அரியோளே!
 
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி நெட்டையார்
 
341. பாலை
 
உய் தகை இன்றால் தோழி! பைபய,
 
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும்
 
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்;
 
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக்
5
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்,
 
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல்,
 
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு,
 
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி,
 
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
10
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன்,
 
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்,
 
யாணர் வேனில்மன், இது
 
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே?
 
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார்
343. பாலை
 
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள்,
 
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை,
 
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து,
 
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப்
5
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்
 
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்,
 
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ்
 
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
 
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்,
10
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை,
 
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்,
 
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப்
 
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த
 
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி,
15
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று
 
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண்,
 
சில் மொழிப் பொலிந்த துவர் வாய்,
 
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே.
 
தலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை மருதன் இளநாகனார்
 
345. பாலை
 
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி,
 
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண்
 
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க்
 
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால்,
5
பல் படைப் புரவி எய்திய தொல் இசை
 
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய
 
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து,
 
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல்
 
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
10
சில் நாள் கழிக!' என்று முன் நாள்
 
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு
 
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார்,
 
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப,
 
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய
15
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த
 
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச்
 
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப,
 
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு
 
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
20
கல் கண் சீக்கும் அத்தம்,
 
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே!
 
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
 
347. பாலை
 
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
 
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
 
சால் பெருந் தானைச் சேரலாதன்
 
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
5
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,
 
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
 
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய,
 
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
 
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது,
10
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,
 
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி
 
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ,
 
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி
 
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
15
கெடு மகப் பெண்டிரின் தேரும்
 
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
 
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்
 
349. பாலை
 
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை
 
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
 
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன்
 
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி,
5
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே,
 
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக,
 
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை
 
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு,
 
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள,
10
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை
 
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன்
 
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை
 
கல் ஊர் பாம்பின் தோன்றும்
 
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?
 
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
 
351. பாலை
 
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
 
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப,
 
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
 
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
5
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற,
 
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை,
 
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
 
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
 
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
10
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி,
 
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
 
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப,
 
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,
 
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,
15
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என
 
உள்ளுதொறு படூஉம் பல்லி,
 
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?
 
பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார்
 
353. பாலை
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,
 
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
 
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
 
கனவுக் கழிந்தனையவாகி, நனவின்,
 
நாளது செலவும், மூப்பினது வரவும்,
5
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்,
 
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை
 
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
 
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
 
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
10
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு,
 
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
 
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
 
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
 
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
15
 
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
 
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
 
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
 
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
20
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி,
 
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
 
நம்மொடு நன் மொழி நவிலும்
 
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?
 
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
 
355. பாலை
 
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும்
 
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்;
 
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை,
 
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
5
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்;
 
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்,
 
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர்
 
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
 
தானே வந்தன்றுஆயின், ஆனாது
10
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்
 
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி!
 
'யாமே எமியம் ஆக, நீயே
 
பொன் நயந்து அருள் இலையாகி,
 
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே.
 
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்
 
357. பாலை
 
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த
 
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
 
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய,
 
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி,
5
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து,
 
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
 
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது,
 
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும்,
 
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற்
10
பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின்
 
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி,
 
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர்
 
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை
 
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
15
காலொடு துயல்வந்தன்ன, நின்
 
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே.
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
 
359. பாலை
 
'பனி வார் உண்கணும், பசந்த தோளும்,
 
நனி பிறர் அறியச் சாஅய், நாளும்,
 
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
 
நீடினர்மன்னோ, காதலர்' என நீ
5
எவன் கையற்றனை? இகுளை! அவரே
 
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
 
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது,
 
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர்,
 
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு,
10
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை
 
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
 
பொய்யா நல் இசை மா வண் புல்லி,
 
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
 
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
15
அருவித் துவலையொடு மயங்கும்
 
பெரு வரை அத்தம் இயங்கியோரே!
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார்
 
361. பாலை
 
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
 
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
 
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
 
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
5
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,
 
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
 
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என
 
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
 
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
10
கரியாப் பூவின் பெரியோர் ஆர,
 
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
 
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
 
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
 
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
15
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,
 
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.
 
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
 
363. பாலை
 
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ,
 
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று,
 
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய,
 
பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய்,
5
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப்
 
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய்
 
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப,
 
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம்
 
அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த
10
கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர்
 
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
 
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய,
 
வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல்
 
கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும்
15
 
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து,
 
எய்த வந்தனரே தோழி! மை எழில்
 
துணை ஏர் எதிர் மலர் உண்கண்
 
பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே.
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
 
365. பாலை
 
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப,
 
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
 
சினவல் போகிய புன்கண் மாலை,
 
அத்த நடுகல் ஆள் என உதைத்த
5
கான யானைக் கதுவாய் வள் உகிர்,
 
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண்,
 
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை,
 
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
 
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே
10
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு
 
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல்
 
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்,
 
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
 
தண் கமழ் புது மலர் நாறும்
15
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே.
 
தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
 
367. பாலை
 
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து,
 
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து,
 
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப,
 
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய,
5
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர்,
 
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின்
 
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை,
 
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை
 
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
10
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின்,
 
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
 
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
 
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம
 
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும்
15
உயிர் குழைப்பன்ன சாயல்,
 
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே.
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர்
 
369. பாலை
 
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
 
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
 
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
 
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
5
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;
 
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
 
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்
 
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
 
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன்,
10
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்!
 
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு,
 
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக்
 
கடல்அம் தானை கை வண் சோழர்,
 
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
15
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,
 
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
 
ஓமை நீடிய உலவை நீள் இடை,
 
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
 
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
20
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த
 
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
 
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
 
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
 
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
25
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
 
மேயினள்கொல்?' என நோவல் யானே.
 
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - நக்கீரர்
 

371. பாலை
 
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை,
 
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர்
 
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி,
 
குறு நெடுந் துணைய மறி புடை ஆட,
5
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
 
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
 
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது,
 
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்,
 
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
10
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து,
 
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர்
 
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ
 
வீ தேர் பறவை விழையும்
 
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?
 
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
373. பாலை
 
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து,
 
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து,
 
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி,
 
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில்,
5
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று,
 
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
 
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப,
 
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு,
 
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்;
10
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை,
 
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி,
 
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா,
 
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து,
 
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி
15
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல்
 
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
 
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
 
ஓர் எயில் மன்னன் போல,
 
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே!
 
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
 
375. பாலை
 
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின்
 
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
 
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
 
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
5
கல்லா இளையர் கலித்த கவலை,
 
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
 
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
 
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
 
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
10
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன்
 
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
 
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
 
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
 
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
15
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்,
 
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
 
நோய் இலர் பெயர்தல் அறியின்,
 
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - இடையன் சேந்தங் கொற்றனார்
 
377. பாலை
 
கோடை நீடலின், வாடு புலத்து உக்க
 
சிறு புல் உணவு, நெறி பட மறுகி,
 
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
 
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்
5
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர,
 
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
 
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
 
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
 
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று,
10
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்
 
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச்
 
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி,
 
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
 
நசை தர வந்தோர் இரந்தவை
15
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே!
 
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்
 
379. பாலை
 
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய,
 
தெருளாமையின் தீதொடு கெழீஇ,
 
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து,
 
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே!
5
நினையினைஆயின், எனவ கேண்மதி!
 
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை,
 
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி,
 
நனவின் இயன்றதுஆயினும், கங்குல்
 
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால்,
10
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி,
 
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
 
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப,
 
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு,
 
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி,
15
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின்
 
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின்
 
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி,
 
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு
 
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு,
20
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல்,
 
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள்
 
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர,
 
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று,
 
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
25
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த
 
நிரம்பா நீள் இடைத் தூங்கி,
 
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே?
 
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
 

381. பாலை
 
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
 
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
 
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
 
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
5
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
 
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
 
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
 
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
 
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
10
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
 
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
 
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
 
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
 
முனை அரண் கடந்த வினை வல் தானை,
15
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய
 
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
 
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து,
 
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
 
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
20
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன்
 
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!
 
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார்
 
383. பாலை
 
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள்,
 
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ,
 
காடும் கானமும் அவனொடு துணிந்து,
 
நாடும் தேயமும் நனி பல இறந்த
5
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என,
 
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும்,
 
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த
 
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய,
 
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக்
10
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு,
 
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி,
 
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்,
 
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
 
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே!
 
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
 
385. பாலை
 
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல்
 
என் ஓரன்ன தாயரும், காண,
 
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர்
 
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
5
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர,
 
நல் மாண் விழவில் தகரம் மண்ணி,
 
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு
 
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன்,
 
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
10
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ,
 
வளையுடை முன்கை அளைஇ, கிளைய
 
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை
 
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல்
 
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும்,
15
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி,
 
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச்
 
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ,
 
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.
 
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
 
387. பாலை
 
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய்,
 
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்!
 
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
 
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு
5
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப்
 
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
 
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல்,
 
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப்
 
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ,
10
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை
 
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட்
 
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண்,
 
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி,
 
நல் இசை நிறுத்த நாணுடை மறவர்
15
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது,
 
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி
 
சிறிய தெற்றுவதுஆயின், 'பெரிய
 
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும்,
 
நின்றாங்குப் பெயரும் கானம்
20
சென்றோர்மன்' என இருக்கிற்போர்க்கே.
 
தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
 
389. பாலை
 
அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
 
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
 
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
 
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
5
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்,
 
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு
 
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
 
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
 
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
10
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து,
 
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர்
 
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
 
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
 
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட,
15
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல்
 
வான வரம்பன் நல் நாட்டு உம்பர்,
 
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல்,
 
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற,
 
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
20
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை
 
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி,
 
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப,
 
படு மழை உருமின் முழங்கும்
 
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரனார்
 
391. பாலை
 
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
 
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
 
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர்
 
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர்
5
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி,
 
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்
 
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப்
 
பழ அணி உள்ளப்படுமால் தோழி!
 
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி
10
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ
 
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன்
 
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை
 
குன்று புகு பாம்பின் தோன்றும்,
 
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே!
 
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்
 
393. பாலை
 
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி,
 
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
 
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,
 
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக்
5
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி,
 
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
 
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,
 
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர்
 
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப,
10
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
 
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி,
 
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை,
 
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா,
 
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி,
15
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்,
 
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
 
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும்
 
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
 
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,
20
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர்
 
நீடலர் வாழி, தோழி! தோடு கொள்
 
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப,
 
தகரம் மண்ணிய தண் நறு முச்சி,
 
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ்
25
வேனில் அதிரல் வேய்ந்த நின்
 
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே.
 
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
 
395. பாலை
 
தண் கயம் பயந்த வண் காற் குவளை
 
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன,
 
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண்
 
பனி வார் எவ்வம் தீர, இனி வரின்,
5
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர்
 
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
 
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்,
 
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை,
 
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி,
10
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு,
 
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல்
 
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
 
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து,
 
ஆடு கழை இரு வெதிர் நரலும்
15
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே!
 
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
 
397. பாலை
 
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட,
 
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப,
 
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
 
மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக்
5
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்
 
எளியவாக, ஏந்து கொடி பரந்த
 
பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத்
 
தணிந்த பருவம் செல்லான், படர்தரத்
 
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை
10
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி,
 
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப்
 
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து,
 
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும்
 
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக்
15
கோடை வெவ் வளிக்கு உலமரும்
 
புல் இலை வெதிர நெல் விளை காடே.
 
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
 
399. பாலை
 
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி,
 
இமையக் கானம் நாறும் கூந்தல்,
 
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம்
 
பருகுவன்ன காதல் உள்ளமொடு,
5
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார்
 
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
 
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட,
 
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை
 
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி,
10
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ,
 
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
 
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி,
 
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்
 
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி,
15
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்,
 
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்,
 
வேய் கண் உடைந்த சிமைய,
 
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே.
 
தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 20:59:07(இந்திய நேரம்)