தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
13
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய,
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்,
மறலி அன்ன களிற்று மிசையோனே;
5
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே;
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
10
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழு மீன், விளைந்த கள்ளின்,
விழு நீர் வேலி நாடு கிழவோனே.
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
சோழன் முடித் தலைக் கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து,உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.

127
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென,
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில்,
கான மஞ்ஞை கணனொடு சேப்ப,
5
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்;
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய
10
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே.
திணை அது; துறை கடைநிலை.
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

128
மன்றப் பலவின் மாச் சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
5
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.
திணை அது; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
அவனை அவர் பாடியது.

129
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்
5
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று,
வானம் மீன் பல பூப்பின், ஆனாது
ஒரு வழிக் கரு வழி இன்றிப்
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே.
திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

130
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு,
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த
5
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்
குட கடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே!
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

131
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன்,
குன்றம் பாடினகொல்லோ
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

132
முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே!
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
5
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்.
தென் திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

133
மெல் இயல் விறலி! நீ நல் இசை செவியின்
கேட்பின் அல்லது, காண்பு அறியலையே;
காண்டல் வேண்டினைஆயின் மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரை வளி உளர,
5
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி,
மாரி அன்ன வண்மைத்
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே!
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
அவனை அவர் பாடியது.

134
'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறி என,
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே.
திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

135
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை,
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி,
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்,
வளைக் கை விறலி என் பின்னள் ஆக,
5
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப,
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ,
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி,
10
வந்தனென் எந்தை! யானே: என்றும்,
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு
கறை அடி யானை இரியல் போக்கும்
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
15
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே;
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர்,
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப்
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு,
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக்
20
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே!
திணை அது; துறை பரிசில் துறை.
அவனை அவர் பாடியது.

241
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார்,
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசம் கறங்க,
5
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே.
திணையும் துறையும் அவை.
அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

374
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன,
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத்
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
5
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என்
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர,
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட,
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர்
10
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை,
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம்,
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும்,
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ,
15
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன்,
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல,
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன் விளங்குதியால் விசும்பினானே!
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

375
அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி,
நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற்
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக,
முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல்
5
நாரும் போழும் கிணையொடு சுருக்கி,
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ,
'ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப்
பிரசம் தூங்கும் அறாஅ யாணர்,
10
பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்!
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது,
பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும்
ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால்
15
புலவர் புக்கில் ஆகி, நிலவரை
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து,
நிலவன்மாரோ, புரவலர்! துன்னி,
பெரிய ஓதினும் சிறிய உணராப்
20
பீடு இன்று பெருகிய திருவின்,
பாடு இல், மன்னரைப் பாடன்மார், எமரே!
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
அவனை அவர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 21:59:57(இந்திய நேரம்)