தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கபிலன்

கபிலன்
53
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
5
களம் கொள் யானை, கடு மான், பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல, நின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து
10
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது
செறுத்த செய்யுள் செய் செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப,
15
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே.
திணையும் துறையும் அவை.
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது.

174
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்
5
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,
அரசு இழந்திருந்த அல்லல் காலை,
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,
10
பொய்யா நாவின் கபிலன் பாடிய,
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
15
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,
20
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர,
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
கல் கண் பொடிய, கானம் வெம்ப,
25
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,
கோடை நீடிய பைது அறு காலை,
இரு நிலம் நெளிய ஈண்டி,
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.
திணை வாகை; துறை அரச வாகை.
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 22:55:42(இந்திய நேரம்)