தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
51
நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின்,
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு
அவற்று ஓர் அன்ன சினப் போர் வழுதி,
5
'தண் தமிழ் பொது' எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,
கொண்டி வேண்டுவன் ஆயின், 'கொள்க' எனக்
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே;
அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த
10
செம் புற்று ஈயல் போல,
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே!
திணை வாகை; துறை அரச வாகை.
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.

52
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல்,
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து,
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு,
5
வட புல மன்னர் வாட, அடல் குறித்து,
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி!
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி
10
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலி கண் மாறிய பாழ்படு பொதியில்,
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த
15
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக்
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே!
திணையும் துறையும் அவை.
அவனை மருதன் இளநாகனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 23:17:41(இந்திய நேரம்)