தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலவம் (இரத்தி)

இலவம் (இரத்தி)
34
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என,
5
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
'காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கரு அன்ன புன் புல வரகின்
10
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி,
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து,
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு
15
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின்
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்,
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து,
20
சான்றோர் செய்த நன்று உண்டாயின்,
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி,
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய, பலவே!
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

325
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின்,
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென,
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின்,
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல்
5
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை,
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார்,
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
10
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து,
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும்
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
வேந்து தலைவரினும் தாங்கும்,
15
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே.
திணையும் துறையும் அவை.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:05:26(இந்திய நேரம்)