தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆமை

ஆமை
42
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து
5
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின்,
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே;
தண் புனல் பூசல் அல்லது, நொந்து,
'களைக, வாழி, வளவ!' என்று, நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
10
புலி புறங்காக்கும் குருளை போல,
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப,
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர்
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர்
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்
15
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை
நீர் தரு மகளிர் குற்ற குவளையும்,
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும்
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி,
20
நில வரை இழிதரும் பல் யாறு போல,
புலவர் எல்லாம் நின் நோக்கினரே;
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்று வெகுண்டன்ன முன்பொடு,
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே.
திணை வாகை; துறை அரசவாகை.
அவனை இடைக்காடனார் பாடியது.

70
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண!
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி;
5
வினவல் ஆனா முது வாய் இரவல!
தைஇத் திங்கள் தண் கயம் போல,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்,
10
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி,
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல்,
15
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச்
செல்வைஆயின், செல்வை ஆகுவை;
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!
திணையும் துறையும் அவை.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

176
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத்
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,
5
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்,
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ்
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர்
10
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல,
காணாது கழிந்த வைகல், காணா
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன்
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே.
திணையும் துறையும் அவை.
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

212
'நும் கோ யார்?' என வினவின், எம் கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா,
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ,
5
வைகு தொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி,
கோழியோனே, கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
10
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே.
திணை அது; துறை இயன்மொழி.
கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

249
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,
5
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு,
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.
திணையும் துறையும் அவை.
....................தும்பி சேர் கீரனார் பாடியது.

379
யானே பெறுக, அவன் தாள் நிழல் வாழ்க்கை;
அவனே பெறுக, என் நா இசை நுவறல்;
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின்,
பின்னை மறத்தோடு அரிய, கல் செத்து,
5
அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும்
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லியாதன் கிணையேம்; பெரும!
'குறுந் தாள் ஏற்றைக் கொழுங் கண் அவ் விளர்
நறு நெய் உருக்கி, நாட் சோறு ஈயா,
10
வல்லன், எந்தை, பசி தீர்த்தல்' என,
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற,
கேட்டதற்கொண்டும் வேட்கை தண்டாது,
விண் தோய் தலைய குன்றம் பின்பட,
......................................ர வந்தனென், யானே
15
தாய் இல் தூவாக் குழவி போல, ஆங்கு அத்
திருவுடைத் திரு மனை, ஐது தோன்று கமழ் புகை
வரு மழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே.
திணை அது; துறை பரிசில் துறை.
ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

387
வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண்டன்ன,
வீங்கு விசிப் புதுப் போர்வைத்
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும்
5
மாறு கொண்டோர் மதில் இடறி,
நீறு ஆடிய நறுங் கவுள,
பூம் பொறிப் பணை எருத்தின,
வேறு வேறு பரந்து இயங்கி,
வேந்துடை மிளை அயல் பரக்கும்
10
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை,
திருந்து தொழில் பல பகடு
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின்
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி,
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று,
15
யான் இசைப்பின், நனி நன்று எனா,
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?.........
மருவ இன் நகர் அகன்.................................
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி,
வென்று இரங்கும் விறல் முரசினோன்,
20
என் சிறுமையின், இழித்து நோக்கான்,
தன் பெருமையின் தகவு நோக்கி,
குன்று உறழ்ந்த களிறு என்கோ?
கொய் உளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
25
மனைக் களமரொடு களம் என்கோ?
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின்
நல்கியோனே, நசைசால் தோன்றல்,
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்!
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள்
30
செல்வக் கடுங்கோ வாழியாதன்
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண்
விடுவர் மாதோ நெடிதே நி
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்
35
பல் ஊர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.
திணையும் துறையும் அவை.
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:41:55(இந்திய நேரம்)