Primary tabs
ஆருகதம் என்னும் சமணமதம் புத்தமதத்திற்குப் பின்னரே தமிழகத்துட் புகுந்தது.
மேற்காட்டிய இருவகைச் சான்றுகளால், திருவள்ளுவர் காலம் கி. மு. 2-ஆம் நூற்றாண்டென்று கொள்வதே பொருத்தமாம் எனினும், 5-ஆம் நூற்றாண்டு வரை கொள்ளவும் இடமுண்டாம்.
பிறந்தவூர் : இது இன்னதென்று தெரியவில்லை.
பெற்றோர் : இவர் இன்னாரென்று தெரியவில்லை. திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி. 6-ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதி யென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக் கதைகளாகும்.
திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக்கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதற் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதேசமையத்தில் ஒர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.
முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல்
பிற்காலத்திற் பெருந்தேவர்க்கும் சிறு தெய்வங்கட்கும்
முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத்
தன் முதற்பெருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு
ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதா
யிற்று. இதை ஆதிசங்கராச்சரியார் என்பது போலக் கொள்க. முதற் சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை
மணந்தவரல்லர்.
ஆதிபகவன் என்பது, ஆதியாகிய பகவன் என்றாவது ஆதிப்பகவன் என்றாவது விரியும்.
யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஒர் அறிவில்லாத சண்டாளப்பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக்கொண்டுபோய் உத்தர தேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும். கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதி யென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட்பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந்