தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai


வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரு மொக்குமெனக்
கொள்ளத் தருங்குணத்தைக் கண்டு.

(பொ-ரை.) நெஞ்சத் தாமரையை விரியச் செய்து அகவிருளை நீக்குந் திருக்குறளும், நீர்த்தாமரையை விரியச் செய்து புறவிருளை நீக்கும் கதிரவனும், குணத்தால் ஒக்குமென்று கொள்ளத்தகும்.

தேனீக் குடிக்கீரனார்

49. பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலில்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.

(பொ-ரை.) தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரின் திருக்குறளைக் கற்று அல்லது கேட்டு அறிந்ததனால், மக்கள் மனத்தில் மெய்த் தன்மையான வெல்லாம் மெய்யாகவும் பொய்த்தன்மையான வெல்லாம் பொய்யாகவும் விளங்கிவிட்டன.

கொடிஞாழன் மாணிபூதனார்

50. அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தேம்- மறனெறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற்
கேளா தனவெல்லாங் கேட்டு.

(பொ-ரை.) பகைவென்ற பாண்டிய! திருவள்ளுவர் வாயினின்று, இதற்குமுன் கேட்டிராதவையெல்லாம் கேட்டு நாற்பொருளின் இயல்பையும் நன்றாய் அறிந்தேம்.

கவுணியனார்

51. சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த விருவினைக்கு மாமருந்து-முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய வின்குறள்வெண் பா.

(பொ-ரை.) நாம் நல்லொழுக்க வழியை அறிதற்பொருட்டுப் புலமை மிக்க திருவள்ளுவர் இயற்றிய இனிய குறள்வெண்பாக்கள் ஆராய்ந்தால் மனத்திற்கும் கேட்டாற் செவிக்கும் ஓதினால் நாவிற்கும் இன்பந்தருவன; தொன்றுதொட்டு வரும் இருவினைகளாகிய நோய்கட்குச் சிறந்த மருந்தாவன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:16:12(இந்திய நேரம்)