தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thinaimalai Nootri Iympathu


ஆண்டான் அரு வரை ஆளியன்னானைக் கண்டேன்: அயலே
தூண்டா விளக்கு அனையாய்! என்னையோ, அன்னை சொல்லியதே?

என்னும் திருக்கோவையார்ச் செய்யுட்பகுதி (244) அமைந்துள்ளது.

எண்ணாது, சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளைக்
காவார் கயிறுரீஇ விட்டார் (47)

என்னும் திணைமாலைக் கருத்தும்,

வண்டு அலர் கோதை வாட் கண் வனமுலை வளர்த்த தாயர்
கண்டு உயிர் உண்ணும் கூற்றம் கயிறுரீஇக் காட்டியிட்டார்

என்னும் சீவகசிந்தாமணிக் (இலக்கணை. 80) கருத்தும் ஒப்புமையுடையன. இரு நூல்களிலும், 'கயிறுரீஇவிடுதல்' என்னும் மரபுத் தொடர் பயின்று வருதலும் நோக்கத்தக்கது. இங்ஙனமாக, இடைக்கால நூல்களோடு ஒத்த பகுதிகள் சிலசில காணப் பெறுதலின், இதுவும் இடைக்காலத்து எழுந்த நூல் என்றே கொள்ளலாம்.

திருக்குறளில் பயின்றுள்ள செம்பாகம் (குறள் 1092:திணைமாலை 9), ஒருவந்தம் (குறள் 563, 593 : திணைமாலை 103) என்ற சொல் வழக்குகள் இந் நூலிலும் உள்ளன.

நிரை திமில் களிறு ஆக, திரை ஒலி பறை ஆக,
கரை சேர் புள்ளினத்து அம் சிறை படை ஆக,
அரைசு கால்கிளர்ந்தன்ன உரவுநீர்ச் சேர்ப்ப! கேள்:

என்னும் கலித்தொகையின் (149) தரவுப் பகுதியை அடியொற்றி, இந் நூலின் 52,53-ஆம் பாடல்கள் அமைந்துள்ளன. அன்றியும், கலித்தொகையில் வரும் வயந்தகம் (கலி. 79: திணைமாலை 128), வந்தையா (கலி. 63: திணைமாலை 138) என்னும் சொற்கள் இரு நூல்களிலும் உள்ளன. இவற்றால் திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், கலித்தொகை நூல்களுக்குப் பின்னர்த் தோன்றியது என ஆராய்ச்சியாளருள் சிலர் கருதுகின்றனர்.

மேலும், காம வேளின் ஐந்து அம்புகளைப் பற்றிய குறிப்பு ஒரு பாடலில் உள்ளது (8). இந் நூலிற் காணும் 'தாரா' (திணைமாலை 139: கைந்நிலை 40) என்னும் பறவை பழந் தமிழ் நூல்களில் காணப்பெறாதது. 'விருத்தி' என்னும் சொல் சாசனங்களில் வழங்கும் பொருளில் இந் நூலில் பயின்றுள்ளது (121). 'ஆடா அடகு' (4) 'தீத் தீண்டு கையார்' (5) என்னும் குறிப்பு மொழிகளும் இந் நூலுள் இடம் பெற்றுள்ளன. தவிரவும் அளகம் (2), வகுளம் (24), பாலிகை, சாலிகை (51), சுவர்க்கம் (62), அலங்காரம் (127) நாய்கர் (134), ஆட்டை (141), சிரம் (144) என வரும் பிற்காலச் சொற்களும் வடசொற்களும் இதில் பயின்று வந்துள்ளன. இவைகள் எல்லாம், இந் நூல் சங்க காலத்திற்குப் பிற்பட்டு, தேவாரம், சிந்தாமணி முதலிய இடைக் கால நூல்களின் காலத்தை ஒட்டித் தோன்றியதே என்பதைப் புலப்படுத்துவனவாம்.

இந் நூலைக் குறித்துப் பாடப்பெற்ற 'முனிந்தார் முனிவு ஒழிய' என்னும் சிறப்புப்பாயிரச் செய்யுளை நூல் இறுதியில் காணலாம். இப்பாடல் அகப்பொருளை வெறுத்த சிலர் விரும்பி ஏற்றுக் கற்றுப் புலமை எய்தும் வண்ணம் ஆசிரியர் இந் நூலை ஆக்கினார் என்பதைத் தெரிவிக்கிறது. பிற்காலத்து எழுந்த அகப்பொருள் நூல்களுள் இது சிறப்புவாய்ந்தது. சங்க நூல்களில் விரிவாகச் சிறப்பித்துப் பாடப் பெறுகின்ற அகப்பொருள் நிகழ்ச்சிகளை எல்லாம் சுருக்கமாய் எளிய வெண்பாக்களில் இந் நூல் அமைத்துள்ளது. ஐந்திணை இயற்கைக் காட்சிகளை எடுத்துக் கூறுவதில் இவ் ஆசிரியர் வல்லவர்.

இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலியோர் தம் உரையுள் இந்நூற் பாடல்களை மிகுதியாக மேற்கோள் காட்டியுள்ளனர். இந் நூலின் 127-ஆம் பாடல் வரையே பழைய உரை உள்ளது. அதற்கு மேலுள்ள பகுதிக்கு உரை கிடைக்கவில்லை. உரையுள்ள பகுதி வரையில் எல்லாப் பாடல்களுக்கும் பழைய துறைக் குறிப்புகளும் காணப்படுகின்றன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:07:39(இந்திய நேரம்)