தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kainilai


கைந்நிலை

'கை' என்பது இங்கே ஒழுக்கம் என்று பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு ஒழுகலாறு பற்றியது என்று பொருள் உரைக்கலாம். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந் நூலும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. பாடல் அளவைக் கொண்டும், நூற் பொருளை ஒட்டியும் இதனை 'ஐந்திணை அறுபது' என்று வழங்குதல் பொருத்தமாகலாம். ஆயினும், இவ்வாறு இதனை வழங்குவது இல்லை. 'கைந்நிலையும் ஆம்கீழ்க்கணக்கு' எனப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்து உரைக்கும் பழம் பாடலிலும், 'சிறு கைந்நிலை அறுபது ஆகும்' என்று பிரபந்த தீபிகையிலும், இந் நூல்சுட்டப் பெறுகிறது. ஐந்திணை பற்றிய வெண்பா நூல்கள் வேறு இருத்தலின், அவற்றினும் வேற்றுமை தெரிதற்பொருட்டு, ஆசிரியரே 'கைந்நிலை' என்று இந் நூற்குப் பெயர் சூட்டியும் இருக்கலாம்.

இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. திணைமொழி ஐம்பதும் இவ் வகை வரிசைமுறையிலே அமைந்திருத்தல் கவனித்தற்கு உரியது. இந்நூற் செய்யுட்களில் 18 பாடல்கள சிதைந்துள்ளன (1, 8,14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைவுபட்டவை. ஏனைய பதினைந்தும் அடிகளும் சொற்களும் பல வேறு வகையில் சிதைந்து காண்கின்றன. எவ்வகையான சிதைவும் இன்றி உள்ளவை இறுதியிலுள்ள நெய்தல் திணைப் பகுதியில் அமைந்துள்ள பாடல்களே.

இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பது நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. எனவே, நூலாசிரியர் பெயர் புல்லங்காடனார் என்பதாம். இவர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப் பெற்றவர்போலும்! மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.

பொன்னம் பசலையும் தீர்ந்தது ;- பூங்கொடி!-
தென்னவன் கொற்கைக் குருகு இரிய, மன்னரை
ஓடு புறங்கண்ட ஒண் தாரான் தேர் இதோ,
கூடல் அணைய வரவு

என்ற இந்நூல் இறுதிப் பாடலில் (60) பாண்டியனையும் கொற்கை நகரையும் இவர் குறிப்பிடுவதும் சிந்தித்தற்குரியது.

இந் நூற் பாடல்களும் பிற அகப் பொருள்நூற் பாடல்களை ஒத்த சிறப்புடையனவே. திணைமாலை நூற்றைம்பதில்போலத் 'தாரா' (40) என்ற பறவைப் பெயர் வந்துள்ளது. பாசம் (3), ஆசை (3), இரசம் (5), கேசம் (12), இடபம் (36),உத்தரம் (48), முதலிய வடசொற்களையும் இதன்கண் காணலாம். ஐந்திணை அடைவில்
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:16:44(இந்திய நேரம்)