Primary tabs
நிக்கந்த
வேடத்து இருடி கணங்களை
ஒக்க அடி வீழ்ந்து உலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்டு அமைவரப் பண்ணி.
(இ-ள்.)
துக்கந் துடைக்கும் துகள் அறு காட்சிய - பிறவிப்
பெருந்துன்பத்தைத் துவரப் போக்குதற்குக் காரணமான குற்ற மற்ற
மெய்க்காட்சியையுடைய ; நிக்கந்த வேடத்து இருடிகணங்களை -
பதினோராங்குணத்தானத்து நிற்கு நிக்கந்த குல்லகர் என்னும்
துறவோர் குழுவினை, ஒக்க அடிவீழ்ந்து - மன மொழி மெய்கள்
ஒருசேரத் திருவடிகளிலே வீழ்ந்து ; உலகியல் செய்தபின் -
வணங்கி, உலகத்துச் சான்றோர் செய்யும். கடவுள் வாழ்த்து
வகையினைச் செய்தபின்னர; யாழ் கொண்டு - யாழினைக்
கைக்கொண்டு; அமைவரப் பண்ணி - அதனை ஆராய்ந்து சுதி
கூட்டிய பின்னர் என்க.
(வி-ம்.)
இச் செய்யுள் சிலப்பதிகார வுரையிற் காணப்பட்டது.
(சிலப் - 9 ; 13. அடியார்க்கு நல்லார் உரைமேற்கோள்.) துக்கம் -
பிறவித்துயர். துகள் . அழுக்கு ; அவை, காமவெகுளி மயக்கம்,
காட்சி. மெய்க்காட்சி. இருடிகணம் - துறவோர் குழு. உலகியல்,
உலகோர் செய்யும் முறைமை. இச் செய்யுள் யாழிசைக்கும்
ஒருத்தியின் செயலைக் கூறுகின்றது. இவள் வரலாறு யாதும்
தெரிந்திலது. அக்கதை என்று ஆசிரியர் சுட்டும் கதையும்
இன்னதென்று தெரிந்திலது. யாழைக் கைக் கொண்டு அமைவரப்
பண்ணி என்க. அமைவரப் பண்ணுதலாவது, சுதி கூட்டுதல்.
இதனை,
“....
குற்றநீங்கிய யாழ்கையிற் றொழுது வாங்கிப்
பண்ணல் பரிவட்டணை யாராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய
எண்வகையா லிசையெழீஇப்
பண்வகையாற் பரிவு தீர்ந்து
மரகத மணித்தாள்செறிந்த மணிக்காந்தண் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்த லுந்த லுறழ்தல்
சீருட னுருட்ட றெருட்ட லள்ளல்
ஏருடைப் பட்டடையென விசையோர் வகுத்த
எட்டுவகையி னிசைக்கர ணத்துப்
பட்ட வகைதன் செவியி னோர்த்து.
எனவரும் சிலப்பதிகாரத்தானும்
உணர்க. (7 : 4 - 19) இனி,
இச்சாதுக்களை, “பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக்
கேற்ற, கோதறு குணங்கள் பெய்த கொள்கலம் அனைய ராகிச்,
சேதியின் நெறியின் வேறு சிறந்தது சிந்தை செய்யாச், சாதுவர்
அன்றி யாரே சரணமக் குலகி னாவார்” என்று யசோதர
காவியமுடையாரும் (59) பாடிப் பரவுதல் உணர்க. (கீழ்வருஞ்
செய்யுளிரண்டும் யாப்பருங்கல விருத்தியிற் காணப்பட்டன.)