தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 186 -

பூசப்பெற்ற) மாக்கோழியின் அழகைக் கண்டு, விரும்பினது அடையப்பட்ட - விரும்பியதாகி அதனுள் அடையப்பட்ட, சாலியின் இடியின் கோழி - நெல்லரிசி மாவினால் செய்த கோழியினது,  அரிந்திட்டது தலை - பலியாக அரிந்திடப்பட்ட தலை, ஓடி - ஓடிச் சென்று, கோல்இயல் - செங்கோல் முறையை யுடையவனான, அரசன் முன்னர் - யசோதரன்முன், கூவுபு குலுங்கி வீழ -கூவித்துடி துடித்து வீழ, மால் இயல் - மயக்கம் பொருந்திய, அரசன் - --, தன் கை வாள் விடுத்து - தன் கையிலிருந்தவாளை எறிந்துவிட்டு, உருகினான் - மனம் உருகினான்.  (எ-று.)

பலியிட்ட மாக்கோழியின் தலை கூவித்துள்ளி  வீழ, அரசன் மனம் உருகினா னென்க.

‘மேலியல் தெய்வங்கண்டே விரும்பினது அடையப்பட்ட, சாலியின் இடியின் கோழி‘  என்பதற்கு, மிக்க அழகுள்ள சித்திரக் கோழியில் தெய்வம் புகுந்து வசித்திருந்தது என்னும் பொருளில், ‘தத்ர க்ருத்ரிம மஸௌ க்ருக வாகும், சித்ர ஸௌஷ்டவ நிவாஸித தைவம்‘  (வாதி. 3,26.)என்பதை நோக்கி, வானுறை தெய்வம் புகுந்துள்ள மாக்கோழி என்று பொருள் கொள்ளப்பட்டது.  மற்றும் இதனை,யசஸ்திலகம் முதலியவற்றுள்ளும் காணலாகும்.  இங்ஙனம் உருவத்துள் தெய்வம் புகுந்து வசித்தலை, ‘பேயுடம்பு பிறிதுடம்பிற் புகல', ‘பிசாசங்கள் ஸ்வசரீதத்தோடும் பிறருடைய சரீரத்துட் புகுவதுங் காணாயோ' (நீல 309) என்னும் நீலகேசியினாலும், ஸ்ரீ புராணம் சாந்திதீர்த்தங்கரர்புராணம் முதலியவற்றாலும் அறியலாகும்.  ‘அரிந்திட்டது' என்னும் செய்வினை, அரிந்து இடப்பட்டது என்னும் செயப்பாட்டு வினைப்பொருளைத் தந்தது.  யசோதரன், இதுகாறும் செங்கோல்முறை தவறாதவனாகலின்,  ‘கோலியல்அரசன' எனப்பட்டான்.  இனி உருவக்கோழியைக் கொலை செய்தது கருதி, (மூடனைச் சமர்த்தன் எனப்துபோல) எதிர் மறை யிலக்கணையாகக் கூறப்பட்டான் எனவுமாம்.  கூவுபு -செய்பு என்னும் வாய்பாட்டு எச்சம்.  குலுங்குதல் - அசைதல், துள்ளுதல். (68)




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:14:38(இந்திய நேரம்)