தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanchi Puranam


>
திருத்தல விளக்கம்
813

     சுக்கிரன் உணர்ந்து போந்து உடலைப் பிணைத்து ததீசியை உயிர்ப்பித்தனன். உயிர்பெற்ற ததீசியை நோக்கி ‘இறைவனை வழிபடின் எங்கும் எவரானும் அழிவுறாத யாக்கையைப் பெறல் கூடும். வழிபாட்டிற்குரிய சிறந்த இடம் காஞ்சியே ஆகும். அங்கு, இட்ட சித்தீசப் பெருமானை வணங்கியே மிருதசஞ்சீவினி என்னும் இறந்தோரை உயிர்பெறச் செய்யும் மந்திரத்தைப் பெற்றேன். அந்த இட்ட சித்தீசப் பெருமானுக்கு தென்பால் இட்டசித்தித் தீர்த்தம் உள்ளது, காணினும், கேட்பினும், கருதினும், தீண்டினும், மூழ்கினும் நாற்பொருளையும் பயக்கும் அத்தீர்த்தத்தின் சிறப்பைக் கூறவும் கூடுமோ? அத்தீர்த்தத்தால் பெறாத பேறொன்றில்லை. முதல் யுகத்தில் பிரமன் மனைவியொடும் மூழ்கிச் சத்தியலோகப் பதவியையும் படைத்தற்றொழிலையும் பெற்றனன். இரண்டாம் யுகத்தில் சூரியன் மூழ்கி வேத வடிவமாம் உடலையும் ஆயிரங் கிரணங்களையும் பெற்றனன். துவாபரத்தில் திருமால் இலக்குமியொடும் முழுகிக் காத்தற் றொழிலையும் வைகுந்த வாழ்க்கையையும் பெற்றார்.

     கலியுகத்தில் உமையம்மையார் முழுகி இறைவனது திருமேனியில் இடப்பாதியிற் கலந்தனர். சூரியன், பகன் என்பவர் முழுகித் தக்கன் வேள்வியில் இழந்த பற்களையும் கண்களையும் முறையே பெற்றனர். குபேரன் அம்மையை நோக்கி இழந்த கண்ணையும் இறைவனுக்கு நண்பன் ஆதலையும் அத்தீர்த்தத்தால் எய்தினன். துச்சருமேளன் ஊர்வசியையும் கண்ணன் புதல்வன் சாம்பன் குட்டநோய் நீக்கமும் பெற்றனர். நளனும் பஞ்ச பாண்டவரும் முழுகிப் பகையை வென்று இழந்த நாட்டைக் கைப்பற்றினர். இத்தீர்த்தத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்னும் நாற்றிசையினும் முறையே அறம், பொருள், இன்பம், வீடென்னும் நாற்பொருளையும் பயக்கும் நான்கு தீர்த்தங்கள் அடங்கியுள்ளன. எல்லா மாதங்களிலும் முழுகுதல் சிறப்புடையதாயினும் வைகாசி, மாசி, கார்த்திகை, ஆடி மாதங்களில் மூழ்குதல் முறையே ஒன்றற்கொன் றேற்றமுடையவாகும். கார்த்திகை மாதத்து ஞாயிறு சாலச் சிறப்புடையதாகும்.

     முழுகுதல், மந்திரம் கணித்தல் இவைகளை அங்குச் செயின் ஒன்று பலவாகும். இவ்வாறு விரித்துக் கூறிய சுக்கிரன் ததீசிக்கு மிருத சஞ்சீவினி மந்திரத்தையும் செவி அறிவுறுத்தனர்.

     பின்பு ததீச முனிவர் காஞ்சியை அடைந்து இட்டசித்தித் தீர்த்தத்தில் முழுகி இட்டசித்தீசரைப் போற்றப் பெருமான் எழுந்தருளி வந்து யாண்டுங் கொலையுறாதவச்சிரயாக்கையைத் தந்தருளப்பெற்றனர். பின்பு, முனிவர் அரசவையைச் சார்ந்து குபன் என்னும் அரசனைத் தலைமேல் உதைத்தனர்; அரசனுக்கு உதவவந்த திருமாலைப் புறங்கண்டனர். இத்தலமும் தீர்த்தமும் கச்சபேசர் திருக்கோயிலில் உள்ளன.

     சிவபெருமான் ஓர் கற்பகாலத்தில் ஐம்பெரும் பூதங்களையும் அவற்றிடைத் திருமால் முதலாம் தேவர் பிறர் பிறவாம் சராசரங்களையும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 13:17:20(இந்திய நேரம்)