Primary tabs
அருட்டிரு ஆசீர்வாதம் அவர்கள் ஆக்கிய 'திருவவதாரம்' எனுங் காப்பியம் தமிழ்க் கிறிஸ்தவ மக்களுக்கு அவர்தம் ஆன்ம ஈடேற்றங் கருதி ஆசிரியர் அளித்த ஓர் அருட்கொடையாகும். எம்பெருமான் இயேசுநாதர் மன்னுயிரை மீட்க இவ்வுலகில் மானிடனாய்ப் பிறந்த வியத்தகு செய்தியையும், மக்களுக்கு அந்தமிலாப் பெருவாழ்வளிக்க விழைந்து அவர் திருவாய் மொழிந்தருளிய நற்செய்திகளையும், துன்பச்சேற்றில் உழந்தவர்க்கு அருள்பாலித்தாற்றிய தொண்டுகளையும், மனுக்குல மீட்பை உறுதிப்படுத்துமாறு சிலுவையில் தம்மைப் பலியாக்கி மகிமையில் வெற்றி வேந்தனாக உயிர்த்தெழுந்த சீர்மிகு செய்தியையும், கிறிஸ்துவ நற்செய்தி நூல்களின் வழிநின்று முறைப்படி திரட்டி, நிரல்பட வகுத்துத் தமிழிலக்கிய மரபுவழியில் கவிதையாக்கித் தந்துள்ளார். திருமறையில் ஆசிரியருக்கிருந்த பயிற்சியும், தமிழில் கொண்டுள்ள பற்றும் இணைந்து திருவவதாரமாக உருவாகியுள்ளது என்பது வெளிப்படை,
காப்பிய இலக்கண விதிப்படி இந்நூல் காண்டங்களாகவும், படலங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளது. இந்நூலில் கடவுள் வாழ்த்து, பாயிரங்கள் தவிர்த்து 2286 விருத்தப்பாக்கள் உள்ளன.
பொழுது போக்கிற்காகவோ இலக்கியச் சுவைக்காகவோ இந் நூலை யெழுதாமல் ஆன்ம ஈடேற்றங் கருதி எழுதியமையால் சுவைக்காக எடுத்தாளப்பெறும் உவமைகளும் அணிகளும், நற்செய்தி தரும் கருத்துக்களையும், அக்கருத்துக்களால் பெறப்படும் தெய்வீக உணர்வுகளையும் சிதைத்துவிடலாம் என்னும் அச்சங் காரணமாக ஆசிரியர் அவைகளை வேண்டுமெனவே தவிர்த்திருப்பது உணரப்படுகிறது.
"நீதியின் மேற்ப சித்தோர் நிதமுமே பாக்யர்
ஆவார்
நீதிபன் மீட்ப ராலே நிதமுமே திர்ப்தி
யாவார்
பேதியா தீவி ரக்கம் உளர்பெரும்
பாக்யர் ஆவார்
ஈதிவர் பங்கே யாகும் பெறுவரி ரக்கம்
என்றும்"
என்னும் பாவால் இயேசு பெருமானின் திருவாய் மொழிகளைக் கூறுமிடத்தில்