தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kachchik Kalambagam-மட்டிக்குட் - 15




கட்டளைக் கலித்துறை

மட்டிக்குட் டங்கும் கணுநிகர் கஞ்ச மலரனைய
தட்டிக்குட் டங்கை முருகனத் தாகச்சிச் சங்கரனே
பெட்டிக்குட் டம்பணம் இட்டுவப் பார்குணம் பெட்டுவினை
கட்டிக்குட் டன் றுயர் எல்லாம் அகன்றிடக் கண்டருளே.       (15)

(இ-ள்) மட்டு இக்கு உள் தங்கும்-தேன்போலும் சாற்றையுடைய கரும்பில் தங்கும், கணு நிகர் - கணுவை ஒத்த, கஞ்ச மலரனை - தாமரை மலரில் தங்கிய பிரமனை, அதட்டி குட்டு - அதட்டி அவன் தலையில் குட்டிய, அங்கை முருகன் அத்தா - அழகிய கையையுடைய முருகனுடைய தந்தையே, கச்சிச் சங்கரனே - கச்சியில் எழுந்தருளிய சங்கரன் என்னும் திருப்பெயரை யுடையவனே, பெட்டிக்குள் - பெட்டியிலே, தம் பணம் இட்டு - தம் பணத்தை இட்டு, உவப்பார் குணம் பெட்டு - மகிழ்வாருடைய குணத்தை விரும்பி, வினை கட்டு இக் குட்டன் - (உன்னை அடைதற்குரிய) நல்வினையை விட்டிருக்கின்ற இந்தச் சிறுபிள்ளையினது, துயர் எல்லாம் - துக்கம் முழுமையும், அகன்றிடக் கண்டருள் - நீங்கிடச் செய்தருள்வாய்.

பெட்டிக்குட்டம் பணம் இட்டு - பெட்டிக்குள் தம் பணம் இட்டு. பெட்டி - பெட்டியிலே, பணம் குட்டம் இட்டு - பணத்தின் கூட்டத்தை இட்டு; குட்டம் பெட்டி பணம் இட்டு - பெரிய பெட்டியில் பணம் இட்டு (குட்டம் - ஆழம்) ஈண்டுப் பெருமையை உணர்த்திற்று.

மட்டு - ஆலையிலிட்டு முறிக்கப்பெறும், இக்குள் - கரும்பினுள். மட்டு - சாதி அடை. மட்டு இக்கு ஈண்டு வினைத்தொகை.

தங்கும் கணு நிகர் (கை) வடிவு பற்றி கஞ்ச மலரனை - பிரமனை.

கரும்பின் கணுவை ஒத்த பிரமன் என்பது: சிவப்பிரகாச சுவாமிகள் மறைந்தபோது வேலையசுவாமிகள் கூறிய செய்யுளில், கரும்பு சிவப்பிரகாசர்; கணு: வேலையசுவாமிகள்; பொகுட்டு: கருணைப் பிரகாசர் என்று கூறியுள்ளார். அங்ஙனமே கணுவை நிகர்த்தவன் பிரமன். வினைகட்டு: கட்டு, வினைத்தொகை.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 23:17:36(இந்திய நேரம்)