தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalingathuparani


1. நூலின் அமைப்பு முறை

முதலாவதாகக் கலிங்கத்துப்பரணிப் போர்த்தலைவனாகிய
குலோத்துங்கன் நெடிது நின்று நிலவவேண்டிக் கடவுளரைத் துதிக்கின்றார்
புலவர்.

பின், தாம், பரணி நூல் பாடப்புகுதற்கு ஒரு வாய்ப்பாகக்,
கலிங்கத்தின்மேற் சென்ற வீரர் வரக் காலந்தாழ்த்தாராகவும், அது கண்டு
மகளிர் ஊடிக் கதவடைத்தாராகவும் கொண்டு, அம் மகளிர் கேட்டு
மகிழுமாறும், ஊடல் நீங்கிக் கதவைத் திறக்குமாறும், தாம் வெற்றி மிகுந்த
அக் கலிங்கப்போரைப் பாடப் புகுவோராய்த் தொடங்குகின்றார் ஆசிரியர்.

கலிங்கப் போர்க்களத்தே நிணக்கூழ் அட்ட பேய்களின் தலைவியாகிய
காளியை முதலாவதாகக் கூறப்புகுந்து,அவள் உறையும் இடமாகிய பாலையைச்
சார்ந்த காட்டை முன்னர்க் கூறுகின்றார். அங்ஙனம் கூறு மிடத்து, ஆசிரியர்
பாலைநில வெம்மையின் முதிர்ச்சியைத் தோற்றிச் செல்லுந்திறம் பயில்வார்க்கு
வியப்புச் சுவையினை விளைத்து நிற்கின்றது.

காளி உறையும் இடமாகிய காட்டின் இயல்பைக் கூறியபின், அக்காட்டு
நடுவண் அமைந்த காளி கோயிலைக் கூறப்புகுகின்றார். ஈண்டுக்
காளிகோயிலின் அடிப்படையமைத்தது,   சுவரடுக்கியது, தூண்நிறுத்தியது
முதலான செய்திகளைக் கூறுமிடத்துக் குலோத்துங்கன் பல போர்க்களங்களில்
எய்திய வெற்றி மேம்பாடு தொடர்புறுத்தப்பெற்றுக் கூறப்படுவது பெரிதும்
போற்றத்தக்கது. பின், அக் கோயிலின் முன் காணப்படும் பலவகைக்
காட்சிகளை ஆசிரியர் கூறுவது அச்சத்தையும் வியப்பையும் விளைத்து
நிற்கின்றது.

காளிகோயிலைக் கூறியபின் காளியைக் கூறலுறுகின்றார் ஆசிரியர்.
காளியின்     உறுப்புக்கள்    பலவற்றையும்    கூறிச்     செல்லுங்காலும் வியப்புச்சுவையே விஞ்சி நிற்கின்றது.


புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 12:40:52(இந்திய நேரம்)