தணிகைப் புராணம் என்னும் இந்நூல் திருத்தணிகையில் 
            கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பரம்பொருளாகிய முருகப் பெருமானின் 
            திருவருட் செயல்களை விளக்கும் முகத்தான் மக்களாகப் பிறந்தாரனைவரும் அடைதற்குரிய 
            அறம் பொருள் இன்பம் வீடுபேறு என்னும் உறுதிப் பொருள்கள் நான்கையும் நன்கு 
            விளக்கிக் கூறும் ஒப்புயர்வற்ற மாண்பு சான்ற ஒரு பெருநூலாகும். இத்தகுசிறப்பு 
            வாய்ந்த நூலைக் கவிஞர் பெருமக்களாகிய விண்மீன்களுக்கிடையே நிறைவெண்மதியெனத் 
            திகழ்ந்த தவத்திரு கச்சியப்ப முனிவர் இயற்றியருளினார். 
         
         
          சங்க நூல்கள், காப்பியங்கள், திருமுறைகள், 
            மெய்கண்ட நூல்கள், ஏனைய திருவூர்ப் புராணங்கள் முதலாகவுள்ள எல்லா நூல்களின் 
            சாரமாகவும் இந்நூல் விளங்குவதால் கற்றுணர்ந்த யாவரானும் நன்கு பாராட்டப்படுகின்றது. 
            பொதுவாகக் கூறு மிடத்து நம் தமிழன்னையும், தமிழ்நாடும் செய்த தவத்தின் 
            பயனே இந்நூலைத் தோற்றுவித்தது என்றே சொல்லுதல் தகும். 
         
         
          இது நாட்டுப் படலம் முதல் நாரதன் 
            அருள் பெறுபடலம் ஈறாக இருபது படலங்களையும், காப்பும், அவையடக்கமும், 
            படலங்கள் இருபதும் சேர்ந்த 3161 செய்யுள்களையும் பெற்று விளங்குகிறது. 
            இந்நூலில் உள்ள செய்யுள்களில் 1976க்குப் பேராசிரியர் திரு. கந்தசாமியாரவர்கள் 
            முன்னரே உரை எழுதி வைத்திருந்தார்கள். அவர்கள் இறைவன் திருவடியில் இரண்டறக் 
            கலந்து விட்டதால் கையெழுத்துப் படியிலிருந்த அதனை அரிதின் முயன்று தேடிப் 
            பெரும் பொருள் கொடுத்துப் பெற்றுப் பதிப்பிக்கத் தொடங்குகையில் எஞ்சியுள்ள 
            பகுதிகளுக்கும் உரையிருந்தால் நலமாயிருக்கு மென எண்ணி உரைகாண வல்லாரை 
            நாடினோம். அவ்வமயம் திருவாளர்கள் செ. ரெ. இராமசாமிப் புலவரவர்களும், 
            பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தர னாரவர்களும் தாமாகவே முன்வந்து உரை 
            எழுதி உதவினார்கள். எவராலும் உரைகாண இயலாது என்று கருதப்பட்டு வந்த தணிகைப் 
            புராணத்திற்கு உரை எழுதி உதவியது மிகமிகப்