தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kanavugal + Karpanaigal


ஆராதனை

சாவ தெனில்நான் சாவேன் உன்றன்
   சந்நி தானத்தில்-அங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணீர்ப்
   பூவி மானத்தில்

ஆரா தனையில் ஆருயிர் வாசனை
   அழகுகள் சொரிந்தேனே-தினமும்
பாரா யணமாய் உன்திருப் பெயரைப்
   பாடித் திரிந்தேனே!

வேகம் குறைய வில்லை; மேலும்
   வேதனை கூட்டாதே-என்றன்
பாகம் பிரியா நாயகி யேஉன்
   பக்தனை வாட்டாதே!

முன்போர் சமயம் தீண்டி யவன்என
   முகத்தை வெறுக்காதே-பொங்கும்
அன்போர் சமயமும் அடங்கா(து); உனைச்சரண்
   அடைந்தேன் மறுக்காதே

தேவி, உனதருள் தேடிவந் தேன்;உயிர்த்
   தீர்த்தம் கொடுப்பாயே-இல்லை
‘பாவிஇவன்’ எனப் பட்டால் எனை நீ
   பலியாய் எடுப்பாயே!

சாவ தெனில் நான் சாவேன் உன்றன்
   சந்நி தானத்தில்-அங்கே
போவ தெனில்நான் போவேன் கண்ணீர்ப்
   பூவி மானத்தில்!
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:45:02(இந்திய நேரம்)