தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aramum Araciyalum


i

முன்னுரை

அறமாவது, அரசியலில் அதற்கு இடமாவது என்று சிலர்
தள்ளுகிறார்கள். அறம் தனி வாழ்க்கையிலேயே உதவாதபோது அரசியலுக்கு
எப்படிப் பொருந்தும் என்று சிலர் மறுக்கிறார்கள். உலகம் இப்படித்தான்
இருக்கும், நம் நாளைக் கழித்துவிட்டு நாம் சொல்லாமல் போகவேண்டும்
என்று சிலர் அமைதி அடைகிறார்கள்.

தனிமனிதன் வாழ்க்கைக்கு உணவும் உறக்கமும் இருந்தால் போதும்.
மக்கள் பலர் கூடி வாழும் சமுதாய வாழ்க்கைக்கே அறம் கட்டாயம்
வேண்டும். மக்கள் எல்லோரும் கூடி நடத்தும் அரசியலுக்கே அறம் சிறப்பாக
வேண்டும். உடம்பின் நன்மைக்கு இரத்த ஓட்டம் எப்படிக் கட்டாயம்
வேண்டுமோ, அதுபோல உலக நன்மைக்கு அறத்தின் அடிப்படை கட்டாயம்
வேண்டும். அறம், யாரோ சில துறவிகளின் பேச்சு என்பது போய், வாழ்க்கைச்
சட்டம் என்னும் தெளிவு வேண்டும். அரசியல் அல்லல் விளைப்பதற்கெல்லாம்
முதல்காரணம் அறமாகிய அடிப்படையைப் புறக்கணிப்பது தான் என்று உணர
வேண்டும்.

காற்று ஊரெல்லாம் கெட்டிருக்கும்போது, நம் நுரையீரலில் மட்டும்
தூய்மை நிலவவேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? பொது வாழ்க்கையாகிய
அரசியலில் அறத்தைப் புறக்கணித்த பிறகு தனி வாழ்க்கையில் மட்டும்
அறத்தைப் போற்ற முடியுமா? வெளிக்காற்றின் தூய்மையைக் கெடுக்காமல்
காப்பது முதல் கடமை. அதை விட்டு மூச்சைப் பிடித்துத் திணறிப் பயன்
என்ன? ஆகவே அரசியலில் அறம் வாழப் பாடுபடாமல் தனிவாழ்க்கையில்
திணறித் திண்டாடிவிட்டு, “அறமாவது, நடப்பதாவது, எல்லாம் ஏட்டுச்
சுரைக்காய்” என்று ஏங்குவதால் பயன் என்ன?

இவற்றை எண்ணிப் பார்க்க இந்த நூல் துணை செய்யும் என்று
நம்புகிறேன்.

மு.வ


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-03-2017 18:18:02(இந்திய நேரம்)