தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 93 -

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ
கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ

பசுவின் கன்றையே சிறு தடியாகக் கொண்டு விளாமரத்திலிருந்து கனிகள் உதிரச்செய்த மாயவன் இன்று நம் பசுக்களின் இடையே வருவானானால், அவனுடைய வாயில் இனிய குழலின் இசையைக் கேளாதிருப்போமா? கேட்போம் அல்லவா, தோழி!

பாம்பையே கயிறாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடையச் செய்த மாயவன் இங்கே நம் பசுக்களின் நடுவே வந்தால், அவனுடைய வாயில் இனிய குழலின் இசையைக் கேளாதிருப்போமா? கேட்போம் அல்லவா, தோழி!

காட்டை அடுத்த சாரலில் மகளிரை மறைப்பதற்காகக் குருந்த மரத்தை வளைத்த மாயவன் இப்பகலில் நம் பசுக்களின் நடுவே வந்தால், அவனுடைய வாயில் இனிய குழலின் இசையைக் கேளாதிருப்போமா? கேட்போம் அல்லவா, தோழி!

இவ்வாறு ஆயர்குலப் பெண்கள் கூடிக் கண்ணனுடைய குழலிசையைப் புகழ்ந்து பாடும் பாடல் இனிய சுவை நிரம்பியது ஆகும். திருமாலின் புகழைக் கேட்காத செவி பயனற்றது, காணாத கண் பயனற்றது, ஏத்தாத நாவும் பயனற்றது என்று பாடும் பாடல்களும் இசையினிமையும் நயமும் வாய்ந்தவை.

சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே
திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே
(தூது) நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே
நாராயணா என்னா நாஎன்ன நாவே.

இவ்வாறே காட்டுவழியில் காளியை வழிபடும் வேடர்களின் பாடல்கள் உள்ளன; அவற்றில் கொலைக்கு அஞ்சாத முரட்டுத்தன்மையும் இரக்கமற்ற வன்மையும் வீரம்கலந்த பக்தியும் விளங்குகின்றன. மலைநிலத்தில் குன்றவர்கள் முருகனை ஏத்திப் பாடும் பாடல்களில் முருகனிடத்துக் கொண்ட பக்தியும் காதல் சுவையும் விளங்குகின்றன.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:33:25(இந்திய நேரம்)