Primary tabs
பசுவின் கன்றையே சிறு தடியாகக் கொண்டு விளாமரத்திலிருந்து கனிகள் உதிரச்செய்த மாயவன் இன்று நம் பசுக்களின் இடையே வருவானானால், அவனுடைய வாயில் இனிய குழலின் இசையைக் கேளாதிருப்போமா? கேட்போம் அல்லவா, தோழி!
பாம்பையே கயிறாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடையச் செய்த மாயவன் இங்கே நம் பசுக்களின் நடுவே வந்தால், அவனுடைய வாயில் இனிய குழலின் இசையைக் கேளாதிருப்போமா? கேட்போம் அல்லவா, தோழி!
காட்டை அடுத்த சாரலில் மகளிரை மறைப்பதற்காகக் குருந்த மரத்தை வளைத்த மாயவன் இப்பகலில் நம் பசுக்களின் நடுவே வந்தால், அவனுடைய வாயில் இனிய குழலின் இசையைக் கேளாதிருப்போமா? கேட்போம் அல்லவா, தோழி!
இவ்வாறு ஆயர்குலப் பெண்கள் கூடிக் கண்ணனுடைய குழலிசையைப் புகழ்ந்து பாடும் பாடல் இனிய சுவை நிரம்பியது ஆகும். திருமாலின் புகழைக் கேட்காத செவி பயனற்றது, காணாத கண் பயனற்றது, ஏத்தாத நாவும் பயனற்றது என்று பாடும் பாடல்களும் இசையினிமையும் நயமும் வாய்ந்தவை.
இவ்வாறே காட்டுவழியில் காளியை வழிபடும் வேடர்களின் பாடல்கள் உள்ளன; அவற்றில் கொலைக்கு அஞ்சாத முரட்டுத்தன்மையும் இரக்கமற்ற வன்மையும் வீரம்கலந்த பக்தியும் விளங்குகின்றன. மலைநிலத்தில் குன்றவர்கள் முருகனை ஏத்திப் பாடும் பாடல்களில் முருகனிடத்துக் கொண்ட பக்தியும் காதல் சுவையும் விளங்குகின்றன.