Primary tabs
ஆராய்ச்சி செய்கிறவன் என்ன காணமுடியும்? உள்ளே ஐந்து பசு விருப்பம்போல் மேய்ந்து திரிவதைக் காண்பான். மனம் ஐந்து புலன்களாய் அலைவதைக் காண்பான். மேய்ப்பார் இல்லாமல் வெறிபிடித்துத் திரியும் மாடுகள் அவை. மேய்ப்பவர் ஏற்பட்டு, அவற்றின் வெறி அடங்குமாறு செய்தால் அந்தப் பசு ஐந்தும் ஞானப்பாலைச் சொரியும். பொல்லாதவை நல்லவையாக மாறிப் பயன் தருவதைக் காணலாம்.
வாழ்க்கைக்கு என்று வகுக்கப்பட்ட நல்வழியும் உண்டு. கவர்ச்சி உண்டாக்கிக் கெடுக்கும் இடர்களும் உண்டு. கடவுளே நெறியையும் படைத்தான்; அடுத்து நெறிஞ்சில் முள்ளையும் படைத்தான். நெறிதவறி நடந்தால், காலில் முள் குத்தும். நெறி தவறாமல் நடக்க வல்லவர்களுக்கு அந்த முள் ஒன்றும் இடர் செய்யாது.
மரணம் உணர்த்தும் நிலையாமைபற்றிய உண்மை எவ்வளவு பெரியது! அதைத் திருமூலர் சொல்லும் முறையோ மிக எளியது! ஊரார் எல்லோரும் கூடுகிறார்கள்; ஒலி எழுப்பி அழுகிறார்கள்; பழைய பெயரை விட்டுப் பிணம் என்று பெயர் சொல்கிறார்கள். சுடுகாட்டுக்குக் கொண்டுபோய்ச் சுட்டுவிடுகிறார்கள். பிறகு நீரில் மூழ்கிக் குளித்துவிட்டு அந்த நினைப்பும் இல்லாமல் மறந்து விடுகிறார்கள்.
இவ்வாறு மூவாயிரம் பாடல்களில் அரிய பெரிய உண்மைகளை எல்லாம் தெளிவாக உணர்த்துகிறார். பாடல்கள் மூவாயிரம் ஒரே வகையான செய்யுள்களில் ஒரே வகையான நடையில் அமைந்தவை. ஆனால் பக்தி, யோகம், தவம், ஞானம், மருத்துவம் முதலான பலவகைப் பொருள்களும் அவற்றில் உணர்த்தப்படுகின்றன.