தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 111 -

நடைமுறைகளையும் கைவிட்டாள். கடைசியில் தன்னையே மறந்தாள்; தன் பெயரும் மறந்தாள். தலைவனுடைய திருவடிகளையே சார்ந்துவிட்டாள்.”

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
   மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
  பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
  அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை
தன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள்
  தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

சுந்தரரும் இவ்வாறே காதல்துறை அமைந்த பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். இத்தகைய காதல் பாட்டுகளில் எல்லாம் சங்க இலக்கிய மரபு நன்கு படிந்திருப்பதை உணர்கிறோம்.

திருவாசகம்

எட்டாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பற்றிப் பாடிய பக்திப் பாடல்கள் திருவாசகம் எனப்படும். திருக்கோவையார் என்னும் நூலும் அவர் பாடியது ஆகும். அதில் உள்ள நானூறு பாட்டுகளும் நானூறு காதல்துறைகள் அமைந்தவை. சிவபெருமானை நாயகனாகவும் தம்மை நாயகியாகவும் கொண்டு காதல்துறைகளாகப் பாடிய நூல் அது. ஆயினும் பக்திப் பாடல்களாகப் பெரிய சிறப்புப்பெற்றவை திருவாசகத்தில் உள்ள அவருடைய அறுநூற்றைம்பது பாடல்களே ஆகும். ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழியாகிவிட்டது. கிறிஸ்துவ மதப் பாதிரியாராகத் தமிழ் நாட்டுக்கு வந்து தொண்டு செய்த ஜி.யூ. போப் என்னும் ஆங்கிலேயரின் உள்ளத்தையும் அந்தப் பக்தி நூல் கவர்ந்தது. அதை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். பாண்டிய அரசனிடம் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர், சிவபக்தியில் ஈடுபட்டு நெஞ்சம் நெக்கு உருகிப் பாடிய அப்பாடல்கள் இன்றும் சைவர்களின் வீடுதோறும் வழிபாட்டின்போது பாடப்படுகின்றன. அவற்றுள் ஒன்று வருமாறு: “கங்கை பாயும் சடைகளை உடைய சிவபெருமானே! எருதை வாகனமாகக் கொண்ட தெய்வமே! தேவர்களின் பெருமானே” எனப் பிறர் துதிப்பதைக் கேட்டு ஆர்வமுற்ற நெஞ்சோடு, பள்ளத்தில் பாயும் வெள்ள நீர் போல் கீழ்மேலாய்ப் பதைத்து உருகும் உண்மையான அன்பு உடைய அடியார்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் போது என்னைப் பொருட்படுத்தி ஆட்கொண்டாய். அத்தகைய அருள் நிம்பிய உனக்காக, என் உள்ளங்கால் முதல் உச்சி வரையில் நெஞ்சமாய் நான் உருகவேண்டும்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:38:27(இந்திய நேரம்)