தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 117 -

குலசேகரசப் பெருமாள் இராம அவதாரத்தில் ஈடுபாடு மிகுந்தவர் ஆகையால், “கோசலையின் அழகிய வயிற்றில் பிறந்தவனே! இராவணன் முடிகளைச் சிதறச் செய்தவனே! தாடகையின் வலிமையை உருவுமாறு அம்பு தொடுத்தவனே! சனகனின் மருகா! பரதனுக்கு அரசச் செல்வத்தை அளித்துவிட்டு காட்டுக்குச் சென்றவனே!” என்று பலவாறு இராமனுடைய அருஞ்செயல்களை எடுத்துக்கூறி, “இராகவனே தாலேலோ” என்று மகுடம் அமைத்துப் பாடியுள்ளார்

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்துஎன் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ.

ஆழ்வார் இருவருடைய இருவகைப் பாடல்களும் நீலாம்பரி ராகத்தில் இசையோடு பாடப்படும் தாலாட்டுகள் ஆகும்.

பெரியாழ்வார்க்குக் கிருஷ்ண அவதாரத்தில் மிகப்பெரிய ஈடுபாடு இருந்தது. வெண்ணெய் திருடல் முதலிய கண்ணன் விளையாட்டுச் செயல்களை மற்றப் பெண்கள் யசோதையிடம் முறையிடுவதுபற்றியும், “கண்ணா! நீ வந்துவிடு! அவர்கள் சொல்லும் பொல்லாப்புக்கு இடம் தராதே. வந்துவிடு” என்று மகனைத் தாய் அழைப்பதுபற்றியும் நாடகப் பாங்கில் பெரியாழ்வார் பாடியுள்ளார். பன்னிரண்டு பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னே அழகான தமிழ்ப் பாடலில் இவை அவரால் புனையப்பட்டிருக்கின்றன.

“வெண்ணெய் எல்லாம் திருடி உண்டுவிட்டு, வெறுங்கலத்தைப் பாறைமேல் வீசி அதன் ஓசைகேட்டு மகிழ்கிறான் கண்ணபிரான். அவன் கற்ற இந்த விளையாட்டைத் தடுக்க எங்களால் முடியவில்லை. புண்ணில் புளி இடுவதுபோன்ற தீமைச் செய்யவல்ல மகனைப் பெற்றுவிட்ட தாயே! யாசோதை! உன் மகனை உன்னிடம் கூப்பிட்டுக்கொள்” என்று அக்கம்பக்கத்தார் முறையிடுகிறார்கள்.

“வருக, வருக, நம்பி! கண்ணா! வந்துவிடு! அயல்வீட்டார் உன்னைப்பற்றி அவமானமாகப் பேசுவதைக் கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. இங்கே வந்துவிடு” என்று யசோதை கண்ணனை அழைக்கிறாள்.

“யசோதை அம்மா! பாலைக் கறந்து அடுப்பில் ஏற்றி, என் மகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு மேலை வீட்டில் நெருப்புக் கொண்டுவரப் போனேன். சிறிது நேரம் அங்கே பேசி நின்றேன். அதற்குள் உன் கண்ணன் வந்து பால்குடத்தைச் சாய்த்துக் குடித்துப் போய்விட்டான். உன் மகனை உன்னிடம் கூப்பிட்டுக் கொள், அம்மா!” என்பது அயலார் முறையீடு.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:40:08(இந்திய நேரம்)