தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 331 -

கம்ப ராமாயணத்தையும் மற்றச் சிறந்த கவிதைகளையும் சுவைத்துச் திறனாய்வு செய்து விளக்குவதில் டி. கே. சிதம்பரநாத முதலியார் தன்னிகரற்றவர். அவரால் ஊக்கப்பெற்றுத் தமிழ் ஆராய்ந்து நூல்கள் எழுதினோர் பலர். பி. ஸ்ரீ., அ. சீநிவாசராகவன், அ. ச. ஞானசம்பந்தன், கி. வா. ஜகந்நாதன், மகராசன், சுப்பு ரெட்டியார், ராமகிருஷ்ணன் முதலிய அறிஞர்கள் கம்பரைச் சுவைத்து அழகிய நூல்கள் இயற்றித் தந்துள்ளனர்.

திருக்குறளைப்பற்றிக் கணக்கற்ற நூல்கள் வெளிவந்துள்ளன; திரு. வி. க., நாமக்கல் கவிஞர், பாரதிதாசன் முதலியோரின் புதிய உரைகளும் வெளியாகிவுள்ளன. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசன், கோதண்டபாணி பிள்ளை முதலியோரின் ஆராய்ச்சி நூல்களும் இங்குக் குறிப்பிடத்தகுந்தவை. கி. ஆ. பெ. விசுவநாதர் சுவையான கட்டுரைகள் திருக்குறளைப்பற்றி எழுதியுள்ளார்; அவை மூன்று நூல்களாக உள்ளன.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் மிகப் பழைய தொகை நூல்களின் பாடல்களைப்பற்றி ஆராய்ந்து ஆழ்ந்த நுட்பங்களையும் நயமான கருத்துகளையும் விளக்கி நூல்களை எழுதியவர்கள் கி. வா. ஜகந்நாதன், தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், இலக்குவனார், வேங்கடராம செட்டியார், கு. ராஜவேலு, அ. ச. ஞானசம்பந்தன், மு. வரதராசன், போ. குருசாமி, ந. சஞ்சீவி முதலானோர். இடைக்காலத்துக் காப்பியங்களையும் பக்திநூல்களையும் ஆராய்ந்து கட்டுரைகளும் நூல்களும் தந்தவர்கள் பரமசிவானந்தம், ஞானசம்பந்தம், ஞானமூர்த்தி, பாலசுப்பிரமணியன், வெள்ளைவாரணர் முதலானோர்.

பழைய இலக்கியங்களிலிருந்து சிற்சில பகுதிகளை எடுத்து அவற்றை அமைத்துக் கட்டுரைகள் எழுதுவோர் பாலசுப்பிரமணியன், காமாட்சி அம்மையார், ஆறுமுகனார், அன்பு கணபதி, சீனிவாசன் முதலிய பலர். இக்கால வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து சிற்சில பகுதிகளை எடுத்து அமைத்துக் கட்டுரைகள் எழுதுவோர் சிலர். அவர்களுள் சுகி சுப்பிரமணியத்தின் எழுத்துகள் குறிப்பிடத் தகுந்தவை.

இக்காலத்துக் கவிஞர்களாகிய பாரதியார், பாரதிதாசன் முதலானோரின் கவிதைகளை ஆராய்ந்து தரம் உள்ள நூல்கள் தந்தவர்கள் சாலை இளந்திரையன், கோவிந்தசாமி, விமலானந்தம், வீராசாமி முதலானவர்கள்.

விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறுபற்றி ம. பொ. சிவஞானம் அளித்துள்ள அரிய ஆராய்ச்சி நூல் மிகப் போற்றத்தக்கதாகும்.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களின் அமைப்பு, வளம், மக்கள் வாழ்க்கை, வட்டாரப் பேச்சு வழக்குகள், முதலியவற்றை ஆராய்ந்து நூல்கள்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:40:09(இந்திய நேரம்)