தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 342 -

           சதையைத் துண்டுதுண்டு ஆக்கினும் உன்எண்ணம்
                சாயுமோ - ஜீவன் - ஓயுமோ
           இதயத் துள்ளே இலங்கு மகாசக்தி
                ஏகுமோ - நெஞ்சம் - வேகுமோ?

என்று சிதம்பரம் பிள்ளை கூறும் சொற்களாக அமைந்தவை பாரதியாரின் உணர்ச்சி மிக்க பாடல்கள்.

குரு கோவிந்தர், லஜபதி, தாதாபாய் நவுரோஜி, திலகர் முதலான தலைவர்களைப்பற்றியும் பாடினார். திலகரிடத்து அவர் பெருமதிப்பு உடையவர். மகாத்மா காந்தியின் பெருமையை முதல்முதல் உணர்ந்து போற்றிய தமிழ்க் கவிஞர் பாரதியாரே. அவருடைய அஹிம்ஸை நெறியைத் தெளிவுற உணர்ந்து போற்றியுள்ளார். ஞானிகளின் நெறியை அரசியலில் பிணைத்திட்ட பெருமான் என்றும், பாரத தேசத்தை வாழ்விக்க வந்த பெருமகன் என்றும் புகழ்ந்துள்ளார். காந்தியடிகளை நாடு நன்றாக உணர்வதற்கு முன்னரே அவருடைய நெறியின் தூய்மையைப் போற்றிப் புகழ்ந்தவர் பாரதியார்.

தெருவிலே பிச்சையெடுத்து, குடு குடு குடு என்று சிறு கருவியை ஒலித்துப் பாடித் திரிவோன் கோணங்கி அல்லது குடுகுடுப்பைக்காரன் என்பவன். எங்கெங்கே ஒலியின் நயம் உண்டோ அங்கெல்லாம் தம் உள்ளத்தைப் பறிகொடுக்கும் கலைஞராகிய பாரதியார், கோணங்கியின் பாட்டிலும் இசையிலும் கலையை உணர்ந்தார்; அவற்றின் சுவையை நுகர்ந்தார். தமிழ்மொழி அந்தக் கலைவடிவத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். கோணங்கி பாடும் முறையிலே நாட்டிற்கு தேவையான நல்ல முன்னேற்றம்பற்றிய கருத்துகளை அமைத்துப் பாடினார். ‘புதிய கோணங்கி’ என்பது அந்தப் பாடலின் பெயர்.

பழமையில் நல்லவற்றைக் கண்டால் அவற்றையும் விடாமல் போற்றும் மனம் படைத்தவர் பாரதியார். அவர் உபநிடதக் கருத்துகளையும் புராண இதிகாசங்கள் புகட்டும் உண்மைகளையும் தம் கட்டுரைகளில் போற்றி விளக்கினார். பாரதத்தில் உள்ள பாஞ்சாலியின் துன்பத்திற்காக உருகி அவளுடைய வீர உணர்ச்சியை வணங்கி, அந்தக் கதையில் பாரதத் தாயின் துன்பத்தையும் வீரப் போராட்டத்தையும் உருவகமாகக் கண்டார்; பாஞ்சாலி சபதம் என்னும் சிறுகாப்பியம் படைத்தார். விவேகாநந்தருடைய மாணவி நிவேதிதாவைக் கண்டு அறவுரை கேட்டுக் குருவாகப் போற்றினார். விவேகாநந்தருடைய உண்மைநெறியை உணர்ந்தார். சக்தி வழிபாட்டில் ஈடுபட்டார். சக்தி சக்தி என்று பல பாட்டுப் பாடினார். வெறும் பக்திப் பாடல்களாக மட்டும் அல்லாமல், வேதாந்தத் தெளிவு அமைந்த ஞானப் பாடல்களாகப் பல கவிதை பாடினார். அவற்றிலும் இந்த நாடு வாழவேண்டும், உலகம் தழைக்கவேண்டும் என்ற பேராசையைப்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 12:43:14(இந்திய நேரம்)