நெகிழவிடுவதும், எங்கெழிலென்
ஞாயிறெமக் கென்றிருப்பதும், தமிழப் பிறப்பிற்கு முற்றும் தகாத செய்தியாம்.
தமிழையும் பிற திரவிடமொழிகளையும் ஆராய்வதால்
தமிழின் சிறப்பையும் பழந்தமிழரின் பெருமையையு மறிவதுடன், உலக முழுதுந் தழீஇய
குலநூல் (Ethnology), வரலாற்றுநூல் (History), மொழிநூல் (Philology) ஆகிய
முக்கலை களின் திறவுகோலையும் காணப் பெறுவதாயிருத்தலின், இனிமேலாயினுந் தமிழர்
தம் கடமை யுணர்ந்து கடைப்பிடிப்பாராக.
எனது ஒப்பியன் மொழி நூலின் முதன் மடல் 3ஆம்
பாகத்தின் பிற்பகுதி யாய் வெளிவரும் இந் நூல், தமிழே திரவிடத் தாய் என்று
நாட்ட வெழுந்தது. இதை நடுவுநிலையாய்ப் படிப்பார்க்கெல்லாம் இவ்வுண்மை புலனாகுமென்பது
திண்ணம். ஒரு மொழிக்கு அடிப்படையானவும் இன்றியமையாதனவுமான, மூவிடப் பெயர்கள்,
முறைப் பெயர்கள், தட்டுமுட்டுப் பெயர்கள், அக்கம்பக்கப் பொருட் பெயர்கள்,
பேரிடப் பெயர்கள், வா, போ முதலிய முக்கிய வினைகள், பல்வகைப் பண்புப்பெயர்கள்,
கை கால் முதலிய சினைப்பெயர்கள் ஆகிய இவை, இயற்கையான வடிவிலும் வேர்ப்பொருள்
தாங்கியும் எம்மொழியிலுள்ளனவோ, அம் மொழியே அதற்குத் தாய் எனத் துணிதல்
வேண்டும்.
ஆரியவெழுத்துப்போல் எடுத்தும் உரப்பியும் ஒலிக்கும்
மூச்செழுத்துகளும் ஓசையெழுத்துகளும் (Aspirated and voiced letters) தமிழுக்கின்மையின்
தமிழுக்குரிய பொது வெழுத்துகளாலேயே பெரும்பாலும் பிற திரவிடச்சொற்கள் காட்டப்பட்டுள்ளன. பிற திரவிட மொழிகளிலுள்ள தமிழ்ச் சொற்களையெல்லாம் எடுத்தெழுதின் பல அகராதிகளாக
விரியுமாதலின், எடுத்துக்காட்டுக்கு வேண்டிய அளவான சொற்களே இங்குக் காட்டப்படுகின்றன
வென அறிக.
இந் நூலின் திருத்தம்பற்றிய கருத்துகளை அறிஞர்
தெரிவிப்பின், அவற்றை நன்றியறிவுடன் ஏற்றுக்கொண்டு, அடுத்த பதிப்புகளிற்
பயன்படுத்தும் வாய்ப்புடை யேனாவேன்.
"குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள்
குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்