பண்டித 
 ஞா.தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் 
 ஆராய்ச்சி பற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு 
 செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு 
 (Trench) எழுதிய ‘சொல்லாராய்ச்சி‘, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய 
 ‘மொழியறிவியல்‘, பேராசிரியர் யாமே பெருவிருப்புடன் படித்துக் கொண்டிருக்கும்போது 
 அந்த முறையில் தமிழ்ச்சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் 
 புலப்படாமல் மறைந்துகிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, 
 பண்டாரகர் கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வு‘ நூலால் 
 புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்ததொரு 
 முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் 
 என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மை தூண்டியது. 
 எனவே ‘ஞானசாகரம்‘ (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் 
 துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், 
 இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சிக் கொண்டிருந்தேம். 
 அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர் தாம் எழுதிய மொழியியல் ஆராய்ச்சி 
 நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் 
 மொழியியல் ஆராய்ச்சித்துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் 
 கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி 
 நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு.தேவநேயனார் 
 யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். 
 அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் 
 அறிஞர்கள் நன்றாக நம்பலாம்.
  
 
  
 	சொல்லாராய்ச்சித் துறையில் திரு.தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் 
 என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே 
 கருதுகின்றேம்.