Primary tabs
முன்னுரை
கட்டபொம்மன் காலந்தொடங்கி, காந்தியடிகள் காலம் வரையுள்ள
சுமார் ஒன்றரை நூற்றாண்டினை , " இந்திய விடுதலைப் போர் சகாப்தம் "
என்று சொல்லலாம். இந்த நீண்ட காலத்திலே, மொழி - சமயம் - கலை -
பொருளாதாரம் - சமூகம் ஆகிய பல்வேறு துறைகளிலே நாடு மறுமலர்ச்சி
அடைந்தது . ஆனால் , இவற்றைப் பற்றியெல்லாம் தொகுப்பாகக் கூறும்
வரலாற்று நூல் எதுவும் இதுவரை முழு அளவில் வெளிவந்திருப்பதாகத்
தெரியவில்லை . இங்குமங்குமாகச் சில செய்திகளைத் தரும் நூல்கள்
ஆங்கிலத்தில் மட்டு்மே வெளியாகியுள்ளன .அந்த அரைகுறைச் செய்திகள்
கூடத் தமிழ்மொழியில் இதுவரை நூல் வடிவம் பெறவில்லை. விடுதலைப்
போர் தமிழகத்திலும் நடந்த தென்றாலும் , அந்தப் போரைப்பற்றி இதுவரை
வெளியாகியுள்ள ஆங்கில நூல்களிலே , தமிழகம் நியாயமான அளவில்
இடம் பெற்றிருக்கிறதென்று சொல்வதற்கில்லை.
இதனால் , இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலே, தமிழினத்தார்
நிகழ்த்தியுள்ள புரட்சிகளை - ஆற்றியுள்ள தியாகங்களை ஓரளவு கூட
அறிந்து கொள்வதற்கு இயலாத நிலை இன்னமும் நீடித்து வருகிறது.
நிச்சயமாக விடுதலைப் போராட்ட காலத்திலே , தமிழ்மொழியும் அதன்
வழிப்பட்ட கலைகளும் அடைந்த மறுமலர்ச்சியினை, அந்த மறுமலர்ச்சியைக்
காணத் தமிழரிலே ஆன்றோர் பலர் ஆற்றியுள்ள அருந்தொண்டுகளை
ஒரு நூல் வழியாக அறிந்து கொள்ள தமிழக மக்களுக்கு வாய்ப்பில்லை.
இந்தக் குறையை அகற்றக் கருதியே , "விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த
வரலாறு" என்னும் இந்நூலை எழுதி வெளியிட்டிருக்கிறேன்.
இந்நூலை உருவாக்குவதற்கு மகாகவி பாரதியாரின் கட்டுரை
களிலிருந்து இங்குமங்குமாக சில செய்திகள் கிடைத்தன . அப்படியே,
'திரு.வி.க.வின் வாழக்கை குறிப்புக்கள்' என்னும் நூலிலிருந்து சில தகவல்
களைப் பெற்றேன் . வ.வே.சு.ஐயரவர்கள் ஓராண்டு காலமே நடத்திய
' பால பாரதி ' என்னும் மாத வெளியீட்டுப் பிரதிகளிலிருந்து அவரைப்
பற்றிய தகவல்கள் சிலவற்றைச் சேகரித்துக் கொண்டேன். நாடு விடுதலை
பெற்றதை அடுத்து வெளியான ' மதுரை மாவட்ட தியாகிகள் மலர்'
என்னும் நூலிலிருந்தும் அந்த மாவட்டத்தைப் பற்றிய செய்திகள்
சிலவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது.