தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   105


 

மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச்
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய்வருத் துறாஅ
அவிழ்பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்தயர் நிலையே."     (நற்றிணை.42)

என வரும்.

காமக்   கிழத்தி   மனையோ  ளென்றிவ ரேமுறு கிளவி சொல்லிய
வேதிரும்  என்பது-காமக்  கிழத்தியும்  மனையாளும்  என்று  சொல்லு
மிருவரும் பாதுகாவலாகக்  கூறிய  கூற்றி  னெதிரும்  தலைவன் கூற்று
நிகழும் என்றவாறு.

இவ்விருவரும்     இல்லுறை    மகளிராதலின்,    தலைவன்மாட்டு
நிகழுமவை இருவருக்கும் ஒக்கும் என்க.

அஃதாவது வழிவந்தவா றென்னை யெனவும் வருத்தமுற்றி ரெனவும்
இந்நிகரன பல கூறுதல்.

உதாரணம்

"எரிகவர்ந் துண்ண என்றூழ் நீளிடை
அரிய வாயினும் எளிய அன்றே
அவ்வுறு நெஞ்சங் கவவுநனி விரும்பிக்
கடுமான் திண்டேர் கடைஇ
நெடுமா னோக்கிநின் உள்ளியாம் வரவே."   (ஐங்குறு.360)

என வரும்.

சென்ற தேஎத்  துழப்பு  நனிவிளக்கி  யின்றிச்  சென்ற  தன்னிலை
கிளப்பினும்   என்பது-தான்  சென்ற  தேயத்து  வருத்தத்தை  மிகவும்
விளக்கித்  தலைவியை  யொழித்துச்  சென்ற  தன்னிலை  கிளப்பினும்
கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து
உள்ளியும் அறிதிரோ எம்மென யாழநின்
முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க
நோய்முந் துறுத்து நொதுமல் மொழியல்நின்
ஆய்நலம் மறப்பேனோ மற்றே சேணிகந்து
ஒலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி
படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை
முளிபுல் மீமிசை வளிசுழற் றுறாஅக்
காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்
அதர்கெடுத் தலறிய சாத்தொ டொராங்கு
மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
இனந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு
ஞான்றுதோன் றவிர்சுடர் மான்றாற் பட்டெனக்
கட்படர் ஓதி நிற்படர்ந் துள்ளி
அருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனப்
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென
இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு
இன்னகை இனைய மாகவும் எம்வயின்
ஊடல் யாங்குவந் தன்றென யாழநின்
கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி
நறுங்கதுப் புளரிய நன்னர் அமையத்து
வறுங்கை காட்டிய வாயல் கனவின்
ஏற்றேக் கற்ற உலமரல்
போற்றா யாகலின் புலத்தியால் எம்மே."       (அகம்.39)

என வரும்.

அருந்தொழின்  முடித்த  செம்மற்  காலை  விருந்தொடு  நல்லவை
வேண்டற்கண்ணும் என்பது-அரிய வினையை முடித்து வந்த தலைமைக்
காலத்து     விருந்தினரோடு     கூட     நல்லவற்றைக்     கிளத்தி
விருப்பமுறுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

மாலை  ஏந்திய   பெண்டிரு  மக்களுங்   கேளி   ரொழுக்கத்துப்
புகற்சிக்கண்ணும்   என்பது-தலைவனை   எதிர்கொண்டு   மங்கலமாக
மாலையேந்தி   நின்ற   பெண்டிரும்  மக்களும்  கேளிரும்   ஒழுகும்
ஒழுக்கத்து விருப்பத்தின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

கேளிரும்     என்னும்    உம்மை   எஞ்சி   நின்றது.    ஈண்டு
ஒழுக்கமாவது-சொல்லாது பெயர்ந்தீர் என்றானும், இளமையும்  காமமும்
நோக்காது  பெயர்ந்தீர்  என்றானும் கூற  இதற்குக்  காரணம் என்னை
எனத் தலைவன் வந்துழி அவர் நிகழ்த்தும் நிகழ்ச்சி.

உதாரணம்

"உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைந்தனென் அல்லனோ பெரிதே நினைந்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராத்த கோடுதோய் மலிநிறை
யிறைத்துணைச் சென்றற் றாங்கம்
மனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே"  (குறுந்.99)

என வரும்.

ஏனைய   வாயிலோ   ரெதிரோடு   தொகைஇ  என்பது-பெண்டிரு
மல்லாத  வாயில்களாயினார் எதிர் கூறும்  கூற்றும்  தலைவன்  மாட்டு
நிகழும் என்றவாறு.

இவை   யெல்லாம்  காமப்பொருளாகத்  தோன்றா,  அவர்  செயல்
பொருளாகத் தோன்றும்.

உதாரணம் வந்தவழிக் காண்க.

பண்ணமைப் பகுதிப்  பதினொரு  மூன்றும்  எண்ணருஞ்  சிறப்பிற்
கிழவோன்    மேன    என்பது-செய்தலமைந்த    பகுதியினையுடைய
முப்பத்துமூன்  றிடத்தினும்  நிகழும்  கூற்று  மிக்க  சிறப்பினையுடைய
கிழவோன் மேலன என்றவாறு.

மிக்க  சிறப்பினையுடைய  கிழவோன் மேலன என்றமையால், மிகாத
சிறப்பினையுடையார்மாட்டு  இவையெல்லாம் ஒருங்கு நிகழ்தலில் என்று
கொள்க. செயலமை பகுதி என்ற
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:58:57(இந்திய நேரம்)