தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   515


மூவன்’  எனவும், இருத்தி, முத்தி’ எனவும், னகர ஈறும் இகர ஈறும்
இயைபு  இன்மையானும்,  ரகர  ஈறு  இயைபுடைமையானும்  இங்ஙனங்
கூறினார். 

‘ஒன்றென  முடித்தல்’  என்பதனான்,  ‘ஒருவேன், ஒருவை’ என்னுந்
தன்மை முன்னிலை ஈறும் எண்ணுமுறை நில்லாமை கொள்க. (44) 

வியங்கோள் எண்ணுப்பெயர் அமையுமாறு 

45. வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவு வரையார். 

இஃது எண்ணின்கண் திணைவழு அமைக்கின்றது. 

(இ-ள்.) வியங்கோள் எண்ணுப்பெயர் - வியங்கோளொடு தொடரும்
எண்ணுப்பெயர்,  திணை  விரவு  வரையார் - திணை விராய் வருதலை
நீக்கார் ஆசிரியர், எ-று. 

ஆவும்  ஆயனுஞ்  செல்க  என்றது, எண்ணும்மையாதலின், சேறல்
தொழில்  இரண்டற்கும்  எய்துதலின்   வழுவின்றேனும்,   அஃறிணை
ஏவற்றொழிலை முற்றமுடியாமை கருதி வழுவமைத்தார். 

‘ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்’ (புறம். 9 : 1) என எண்ணி,
‘நும்  அரண்  சேர்மின்’ (புறம். 9 : 5) என முன்னிலைவினை கோடல்
செய்யுள்முடிபு என்பது அதிகாரப் புறனடையாற் கொள்க. 

‘ஆவும்  ஆயனுஞ்  சென்ற  கானம், செல்லுங் கானம்’ என வியங்
கோளல்லா  விரவு   வினையான்   வருதல்  ‘தன்னினம் முடித்த’லாற்
கொள்க.
(45) 

பொதுமைக்குரிய சொற்கள்

46. வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார். 

இதுமரபுவழுக் காக்கின்றது. 

(இ-ள்.) வேறு  வினைப்  பொதுச்சொல் - வேறுபட்ட வினையினை
யுடைய பல பொருட்குப் பொதுவாகிய சொல்லை, ஒரு வினைகிளவார் -
அவற்றுள்     யாதானும்    ஒரு    வினையாற்   கூறார்.   எனவே,
அவற்றையெல்லாம்   உள்ளடக்கி   நிற்கும் பொதுவினையாற் கூறுவர்,
எ-று. 

‘அடிசில்’  என்பது,  உண்பன, தின்பன, நக்குவன, பருகுவனவற்றிற்கும்:
‘இயம்’  என்பது  கொட்டுவன, ஊதுவன, எழுப்புவனவற்றிற்கும்; ‘படை’
என்பது எய்வன, எறிவன, வெட்டுவன குத்துவனவற்றிற்கும் பொது வா

  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:21:10(இந்திய நேரம்)