Primary tabs

குறுநிலமன்னன் தன்பகைவரின் நாடு கொள்ளச் சென்றதாம்,
வேந்தனெனப் பெயர் கூறாமையின்.‘‘பசைபடு பச்சை நெய்தோய்த்து’’
(244) என்னும் அகப்பாட்டினுள் ‘‘முடிந்தன் றம்மநாம் முன்னிய
வினையே’’ என்றலிற் றானே குறுநிலமன்னன் சென்றதாம். ஏனைய
வந்துழிக் காண்க. (32)
வேளிர்க்குப் பொருட்பிரிவும் உரித்தாதல்
உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத் தான.
இஃது அக் குறுநில மன்னர்க்குப் பொருள்வயிற் பிரிதலும் ஓதற்
பிரிதலும் உரிய வென்கின்றது.
(இ-ள்.) பொருள் வயினும் - தமக்குரிய திறையாகப் பெறும்
பொருளிடத்தும்; உயர்ந்தோர் ஒழுக்கத்துக்கு ஆன பொருள் வயினும்
- உயர்ந்த நால்வகை வருணத்தார்க்குரிய ஒழுக்கத்திலேயான
ஓத்திடத்தும்; பிரிதல் அவர்வயின் உரித்து - பிரிந்துசேறல் அக்
குறுநில மன்னரிடத்து உரித்து எ-று.
பொருள்வயிற்
பிரிதல் பொருள் தேடுகின்ற இடத்தின் கண்ணென
வினைசெய் இடமாய்
நின்றது. ‘உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான’
(31) என்று அவ்
வோத்தினை அவரொழுக்கத்தி லேயான
பொருளென்றார். அச் சூத்திரத்திற் கூறிய ஓதற்பிரிவே இவர்க்கும்
உரித்தென்று கொள்க. இவற்றுக்குச் சான்றோர் செய்யுள்களுள்வழிப்
பொருள்படுமாறு உய்த்துணர்ந்து கொள்க.
பொருட்பிரிவு முதலியவற்றில் தலைவியொடு பிரிதல்
இல்லையெனல்
இது முற்கூறிய
ஓதல் பகை தூது காவல் பொருள் என்ற ஐந்தனுட்
பகையுங் காவலும் ஒழிந்தவற்றிற்கு ஓரிலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
ஓதலுந் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற்
செல்லுஞ் செலவு தலைவியொடு கூடச் செல்லுதலின்று எ-று.
தலைவியை
உடன்கொண்டு
செல்லாமை முற்கூறிய
உதாரணங்களிலும் ஒழிந்த சான்றோர் செய்யுள்களுள்ளுங் காண்க.
இதுவே ஆசிரியர்க்குக் கருத்தாதல் தலைவியொடுகூடச் சென்றாராகச்
சான்றோர் புலனெறிவழக்கஞ் செய்யாமையான் உணர்க.
இனித்,தலைவி கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன் கொண்டு
சென்மினெனக்
கூறுவனவுந்,
தோழி கூறுவனவுஞ்,
செலவழுங்குவித்தற்குக் கூறுவனவென்று உணர்க.
அக்கூற்றுத்
தலைவன் மரபு அன்றென்று மறுப்பன ‘மரபுநிலை திரியா’ (45)
என்பதனுள் அமைந்தது.
இனி, இச் சூத்திரத்திற்குப்,
‘பொருள்வயிற் பிரிவின்கண் கலத்திற்
பிரிவு தலைவியுடன் சேறலில்லை; எனவே, காலிற் பிரிவு தலைவியுடன்
சேறல் உண்டு’ என்று பொருள் கூறுவார்க்குச்