தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2385


கண் டொன்னார்த முள்ள
மிருபாற் படுவ தெவன்.’’
          (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு.1255 -
                                 பகைவயிற் சேறல் 4)

‘‘சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்’’ என்னும் புறப்பாட்டும்
(31) அது.

‘‘இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல்
வடிமணி யணைத்த பணைமரு ணோன்றாட்
கடிமரத்தாற் களிறணைத்து
நெடுநீர துறைகலங்க
மூழ்த்திறுத்த வியன்றானையொடு
புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம்
வாண்மதி லாகவேன்மிளை யுயர்த்து
வில்விசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற்
செவ்வா யெஃகம் வளைஇய வகழிற்
காரிடி யுருமி னுரறுபு முரசிற்
கால்வழங் காரெயில் கருதிற்
போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே.’’     (பதிற்றுப்.33)

இப் பதிற்றுப்பத்தும் அது.

‘‘போர்ப்படை யார்ப்பப் பொடியா யெழுமரோ
பார்ப்புர வெண்ணான்கொல் பார்வேந்த - னூர்ப்புறத்து
நில்லாத தானை நிலனெளிய நீளிடைப்
புல்லார்மேற் செல்லும் பொழுது.’’

இஃது எதிர்செல்வோன் படையரவம்.

எரிபரந்து எடுத்தல்   -  இருவகைப்  படையாளரும்  இருவகைப்
பகைப்புலத்துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுதலும்;

இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க.

உ-ம்:

‘‘வினைமாட்சி விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகச்
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
யெல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கஞ்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்
புலங்கெட விறுக்கும் வரம்பி றானை.’’        (புறம்.16)

எனவும்,

‘‘களிறு கடைஇயதாட்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையால்
கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து’’         (புறம்.7)

என்னும் புறப்பாட்டினுள்,

‘‘எல்லையு மிரவு மெண்ணாய் பகைவ
ரூர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்’’

எனவும் வரும்.

இவை  கொற்றவள்ளைப் பொருண்மையவேனும்  உட்பகுதி  பலவுந்
துறையாய் வருதலின், எரிபரந் தெடுத்தற்கும் உதாரணமாயின.

வயங்க  லெய்திய   பெருமையானும்   -   ஒருவர் ஒருவர் மேற்
செல்லுங்காற் பிறவேந்தர் தத்தந் தானையோடு அவர்க்குத் துணையாய
வழி அவர் விளக்கமுற்ற பெருமையும்;

உ-ம்:

‘‘மேற்செல்லுங் காலைத் துணைவந்த வேந்தர்தம்
பாற்செல்லச் செல்லும் பரிசினா - னாற்கடல்சூழ்
மண்மகிழுங் காட்சியான் மீன்பூத்த வானத்து
வெண்மதிபோன் மேம்பட்டான் வேந்து’’

என வரும்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:13:18(இந்திய நேரம்)