Primary tabs

உம்மை,
எச்சவும்மை யாதலின், உரிப்பொருளாக எடுத்த பாலையும்
நால்வகை நிலத்தும் மயங்கவும் பெறும் என்றவாறாம். பாலையென்பது
ஒன்று பிரிந்து பலவாகிய கூற்றின் மேற்றாதலின், ஒற்றுமைப்பட்டு
நிகழ்கின்றார் இருவர் பிரிந்துவரலும் பாலையாமன்றே? அதனான்,
அதுவுங் குணங் காரணமாய்ச் செம்பால் செம்பாலையாயினாற்போல
நின்றது.
‘‘ஊர்க்கா னிவந்த’’ என்னுங் குறிஞ்சிக்கலியுள்,
‘‘ஆய்தூவி யனமென வணிமயிற் பெடையெனத்
தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம்
மாதர்கொண் மானோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ’’
(கலி.56)
என்பது நிலம்வரையாது வந்த கைக்கிளை. இதனைக் குறிஞ்சியுட்
கோத்தார் புணர்ச்சி யெதிர்ப்பாடாகலின்.
‘‘கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே யாயர் மகள்’’
(கலி.103)
‘‘வளியா வறியா வுயிர்காவல் கொண்டு
நளிவாய் மருப்பஞ்சு நெஞ்சினார் தோய்தற்
கெளியவோ வாயமக டோள்’’
(கலி.103)
‘‘அவ்வழி முள்ளெயிற் றேஎ ரிவளைப் பெறுமிதோர்
வெள்ளேற் றெருத்தடங்கு வான்;
ஒள்ளிழை, வாருறு கூந்தற் றுயில்பெறும் வைமருப்பிற்
காரி கதனஞ்சான் கொள்பவன்...’’
(கலி.104)