தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4904


கடலினை     நிலமென்னாமையிற்  கலத்திற்  பிரிவு  முன்பகுத்த
நிலத்துள்  அடங்காதென்று,  அதுவும்  அடங்குதற்கு  ‘இரு  வகைப்
பிரிவும்’  என்னும் முற்றும்மை கொடுத்துக், காலிற் பிரிவொடு கூட்டிக்
கூறினார்.   கலத்திற்  பிரிவு  அந்தணர்  முதலிய  செந்தீவாழ்நர்க்கு
ஆகாமையின் வேளாளர்க்கே உரித்தென்றார். வேத வணிக ரல்லாதார்
கலத்திற்    பிரிவு    வேதநெறி    யன்மையின்   ஆராய்ச்சியின்று.
இக்கருத்தானே   இருவகை   வேனிலும்   நண்பகலும்   இருவகைப்
பிரிவிற்கும் ஒப்ப உரியவன்றிக் காலிற் பிரிவுக்குச் சிறத்தலுங், கலத்திற்
பிரிவிற்கு   இளவேனி    லொன்றுங்   காற்றுமிகாத   முற்பக்கத்துச்
சிறுவரவிற்றாய்   வருதலுங்  கொள்க.  ஒழிந்த  உரிப்பொருள்களினும்
பாலை  இடை  நிகழுமென்றலிற்  பிரிய  வேண்டிய  வழி அவற்றிற்கு
ஓதிய காலங்கள் கலத்திற் பிரிவிற்கு வந்தாலும் இழுக்கின்று. என்னை?
கார்காலத்துக்   கலத்திற்பிரிவும்   உலகியலாய்ப்   பாடலுட்  பயின்று
வருமாயினென்க.  தோன்றினும்  என்ற உம்மை சிறப்பும்மை; இரண்டு
பிரிவிற்கும் பின்பனி உரித்தென்றலின்.

இனிக் கலத்திற்பிரிவிற்கு

உ-ம்:

‘‘உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரைசெல லியற்கை வங்கூ ழாட்டக்
கோடுயர் திணிமண லகன்றுறை நீகான்
மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய
ஆள்வினைப் புரிந்த காதலர் நாள்பல
கழியா மையி னழிபட ரகல
வருவர் மன்னாற் றோழி தண்பணைப்
பொருபுனல் வைப்பின் நம்மூ ராங்கட்
கருவிளை முரணிய தண்புதற் பகன்றைப்
பெருவன மலர அல்லி தீண்டிப்
பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க
அறனின் றலைக்கு மானா வாடை
கடிமனை மாடத்துக் கங்குல் வீசத்
திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய
நிரைவளை யூருந் தோளென
உரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே’’   (அகம்.255)

இது தோழி தூதுவிடுவது காரணமாக உரைத்தது.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 07:12:32(இந்திய நேரம்)