தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5463


 

தூதாய்வருதலும்,  அறிந்து   சென்ற   தலைவற்குத்   தலைவி  நிலை
கூறுதலும்,  மீளுங்கால்  விருந்து  பெறுகுவள்   கொல்லெனத் தலைவி
நிலையுரைத்தலும் போல்வன. இலக்கியம் வந்துழிக் காண்க.

உ-ம்:

“விருந்தும் பெறுகுநள் போலுந் திருந்திழைத்
தடமென் பணைத்தோள் மடமொழி யரிவை
தளிரியற் கிள்ளை யினிதி னெடுத்த
வளராப் பிளிளைத் தூவி யன்ன
வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவிற்
பறைக்கண் ணன்ன நிறைச்சுனை தோறுந்
துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத்
தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச்
சிரற்சிற கேய்ப்ப வறற்கண் வரித்த
வண்டுண் நறுவீ துமித்த நேமி
தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியுள்
நிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச்
செல்லு நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர்புக லாய்ந்தே.”          (அகம்.324)

அவைகள் தங்களுக்கு வளராப்பிள்ளை யென்றலுமாம்.

இது பெறுவளென்றது.

ஆற்றது   பண்பும், ஆற்றிடைக்  கண்ட  பொருளும்  இறைச்சியும்
உடன்போக்கிலுங் கற்பிலுங் கூறுவனவாதலின்  இச்சூத்திரங்  கைகோள்
இரண்டற்கும் பொதுவிதி. (29)

இது இளையோர்க்குரிய இயல்புகூறல்

உழைக்குறுந் தொழிலுங் காப்பும் உயர்ந்தோர்க்கு
நடக்கை எல்லாம் அவர்கட் படுமே.

இது    முற்கூறியவற்றிற்கு    உரியார்   இங்ஙனஞ்   சிறந்தாரென
மேலதற்கொரு புறனடை.

(இ-ள்.)  உழைக்குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்க்கு நடக்கை
எல்லாம்  -  அவரிடத்து  நின்று  கூறிய தொழில் செய்தலும் போற்றீடு
முதலிய பாதுகாவலும் பிறவும்  உயர்ந்தோர்க்குச் செய்யுந் தொழிற்பகுதி
யெல்லாம்;     அவர்கட்    படும்  -   முற்கூறிய   இளையோரிடத்து
உண்டாம் எ-று.

என  இவ்விரண்டற்குமுரியர் அல்லாத  புறத்தினர்  முற்  கூறியவை
கூறப்பெறாரென்பது பொருளாயிற்று. (30)

தலைவன்பரத்தைமை நீங்குமிடமிவை எனல்

பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத்
தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும்
இன்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும்
கிழவோ னிறந்தது நினைஇ யாங்கட்
கலங்கலு முரியன் என்மனார் புலவர்.

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:01:13(இந்திய நேரம்)