குடும்ப விளக்கு
பாடல்
Poem
குடும்ப விளக்கு
தன்அருமை மக்கள்
தமிழ்க்கழகம் தாம்செல்லப்
பின்னரும் ஐயன்செல்லப்
பெண்ணரசி - முன்சுவரில்
மாட்டி இருந்த
மணிப்பொறி "இரண்டு என்று"
காட்டி இருந்ததுவும்
கண்டவளாய்த் - தீட்டிச்
சுடுவெயிலில் காயவைத்த
சோளம் துழவி
உடல்நிமிர்ந்தாள் கண்கள்
உவந்தாள் - நடைவீட்டைத்
தாண்டி வரும்விருந்தைத்
தான்கண்டாள் கைஏந்திப்
பூண்ட மகிழ்வால்
புகழ் ஏந்தி - வேண்டி
"வருக! அம்மா வருக!
ஐயா வருக!
வருக! பாப்பா தம்பி"
என்று - பெருகுஅன்பால்
பொன்துலங்கு மேனி
புதுமெருகு கொள்ள முகம்
அன்று அலர்ந்த செந்தா
மரையாக - நன்றே
வரவேற்றாள்; வந்தவரின்
பெட்டி படுக்கை
அருகில் அறைக்குள்
அமைத்தாள் - விரைவாக
அண்டாவின் மூடி
அகற்றிச் செம்பில் தண்ணீர்
மொண்டு புறந்தூய்மை
முடிப்பீர் என்று - விண்டபின்
சாய்ந்திருக்க நாற்காலி
தந்தும், வெண்தாழையினால்
வாய்ந்திருக்கும் பாய் விரித்தும்
மற்று அதிலே - ஏய்ந்திருக்க
வெள்ளைஉறை இட்டிருக்கும்
மெத்தை தலையணைகள்
உள்அறையில் ஓடி
எடுத்து உதவி - அள்ளியே
தேன்குழலும் உண்ணத்
தெவிட்டாத பண்ணியமும்
வான்குழலாள் கொண்டுவந்து
வைத்து ஏகி - ஆன்கறந்த
பாலும் பருகும்
படிவேண்டி, வெற்றிலைக்கு
நாலும் கலந்து
நறுக்கியகாய் - மேலும் இட்டுச்
செந்தாழை, பல்பூக்கள்
பச்சையொடு சேர்கண்ணி
வந்தாள் குழல்சூட்டி
மற்றவர்க்கும் - தந்துபின்
நின்ற கண்ணாடி
நெடும்பேழை தான் திறந்(து)
இன்று மலர்ந்த
இலக்கியங்கள் - தொன்றுவந்த
நன்னூல்கள் செய்தித்தாள்
நல்கி, "இதோ வந்தேன்"
என்று சமைக்கும்
எதிர் அறைக்குள் - சென்றவளை
வந்தோர்கள் கண்டு
மலர்வாய் இதழ்நடுங்க,
"எந்தாயே எந்தாயே
யாம் எல்லாம் - குந்தி
விலாப்புடைக்க வீட்டில் இந்த
வேளைஉணவு உண்டோம்
பலாப்பழம்போல் எம்வயிறு
பாரீர் - நிலாப்போலும்
இப்போதும் பண்ணியங்கள்
இட்டீர் அதையும் உண்டோம்
எப்போதுதான் அமைதி"
என்று உரைத்தார்
- பாரதிதாசன்





