ஆசிரியர் பெயர் இல்லாதவை

191. முல்லை
உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?-
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், 'போதின்
பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல்' என்குவெம்மன்னே.

உரை

பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

201. குறிஞ்சி
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி,
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு,
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே!

உரை

கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

256. பாலை
'மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப்
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி,
மான் ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத்
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச்
சொல்லாமுன்னர், நில்லா ஆகி,
நீர் விலங்கு அழுதல் ஆனா,
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே.

உரை

பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது.

313. நெய்தல்
பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு
யாத்தேம்; யாத்தன்று நட்பே;
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே.

உரை

இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து, 'பண்பிலர்' என்று இயற்பழித்த தோழிக்கு, 'அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ!' என்று,சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட

321. குறிஞ்சி
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன்,
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்-
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை;
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு,
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால்,
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே.

உரை

தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது.

326. நெய்தல்
துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!-
ஒரு நாள் துறைவன் துறப்பின்,
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே,

உரை

சிறைப்புறம்.

375. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே-சாரல்
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும்.
யாமம் காவலர் அவியாமாறே.

உரை

இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது.

379. பாலை
இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப்
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு,
கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன்,
'அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி!
எம்மில் வருகுவை நீ' எனப்
பொம்மல் ஓதி நீவியோனே?

உரை

நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது.

381. நெய்தல்
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது,
பசலை ஆகி, விளிவதுகொல்லோ-
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல்,
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி,
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?

உரை

வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனைத் இயற்பழித்தது.

395. பாலை
நெஞ்சே நிரை ஒல்லாதே; அவரே,
அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்;
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே;
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலக்
களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்;
அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில்
அளிதோதானே நாணே-
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே!

உரை

வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, 'நாம் ஆண்டுச் சேறும்' எனத் தோழிக்கு உரைத்தது.