191-200

191. நெய்தல்
''சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து,
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்
5
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி,
எல்லி வந்தன்றோ தேர்?'' எனச் சொல்லி,
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும்
என் நோக்கினளே அன்னை; நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்,
10
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி
நறும் பூங் கானல் வந்து, அவர்
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே.

தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.-உலோச்சனார்

192. குறிஞ்சி
''குருதி வேட்கை உரு கெழு வய மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய, பூழியர்
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்
5
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை,
நீ நயந்து வருதல் எவன்?'' எனப் பல புலந்து,
அழுதனை உறையும் அம் மா அரிவை!
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
10
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.

இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.

193. பாலை
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ,
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய்,
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை!
5
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே;
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக,
யாரும் இல் ஒரு சிறை இருந்து,
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே!

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.

194. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி! கைம்மாறு
யாது செய்வாங்கொல் நாமே-கய வாய்க்
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்,
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை,
5
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத்
தனி நிலை இதணம் புலம்பப் போகி,
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை,
குன்ற வெற்பனொடு நாம் விளையாட,
இரும்பு கவர்கொண்ட ஏனற்
10
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே?

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரை மருதன் இளநாகனார்

195. நெய்தல்
அருளாயாகலோ, கொடிதே!-இருங் கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி,
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே-
5
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி,
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல,
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே.

களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.

196. நெய்தல்
பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை,
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்,
மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்!
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்,
5
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்,
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்!
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்,
சிறுகுபு சிறுகுபு செரீஇ,
அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே?

நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து, ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்

197. பாலை
''தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே;
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ!
தெளிந்தனம் மன்ற; தேயர் என் உயிர்'' என,
5
ஆழல், வாழி-தோழி!-நீ; நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு,
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய,
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள்
10
இன் இசை முரசின் இரங்கி, மன்னர்
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே.

வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-நக்கீரர்

198. பாலை
சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம்,
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்
கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தை
5
தன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல்
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை,
வார்ந்து இலங்கு வால் எயிற்று, பொலிந்த தாஅர்,
சில் வளை, பல் கூந்தலளே, அவளே;
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை
10
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த்
தந்தைதன் ஊர் இதுவே;
ஈன்றேன் யானே; பொலிக, நும் பெயரே!

பின் சென்ற செவிலி இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.-கயமனார்

199. நெய்தல்
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,
5
உளெனே-வாழி, தோழி! வளை நீர்க்
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி,
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர்,
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய,
10
பைபய இமைக்கும் துறைவன்
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே!

வன்புறை எதிரழிந்தது.-பேரி சாத்தனார்

200. மருதம்
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,
''சாறு'' என நுவலும் முது வாய்க் குயவ!
5
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ-
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,
''கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று,
10
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன்
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்'' எனவே.

தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, ''இங்ஙனம் சொல்லாயோ?'' என்று குயவற்குச் சொல்லியது.-கூடலூர்ப் பல் கண்ணனார்