Primary tabs
-
1.3 பெரியபுராணத்தின் மூலங்கள்
சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றுவதற்கு மூல நூல்களாய் இருந்தவை பலவாகும். தேவாரப் பதிகங்களும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திரு அந்தாதியும் பெரியபுராணத்திற்கு முதன்மைத் தரவுகளைத் தந்துள்ளன. இவை அன்றி வேறு சில நூல்களையும் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் குறிப்பிடுவார். அவை:
காரைக்கால் அம்மையார் பாடிய
* மூத்த திருப்பதிகம்
* இரட்டை மணிமாலை
* அற்புதத் திருவந்தாதி
சேரமான் பெருமாள் இயற்றிய
* திருக்கயிலாய ஞான உலா
* பொன் வண்ணத்து அந்தாதி
* திருவாரூர் மும்மணிக்கோவை
மேலும் பதினோராம் திருமுறையில் உள்ள
● நக்கீரர் நூல்கள்
● கல்லாடர் நூல்
● பட்டினத்தார் நூல்கள்
● நம்பியாண்டார் நம்பி நூல்கள்
நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கும் கோயில்களுக்கும் சேக்கிழார் நேரில் சென்றிருக்க வேண்டும்; அங்குள்ள மக்கள் இடையே வழங்கி வந்த அடியார் பற்றிய கதைகளையும் சேக்கிழார் திரட்டி இருக்க வேண்டும் என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகின்றார். சேக்கிழாருக்கு முன்னரே நாயன்மார்கள் வரலாறு தமிழக எல்லையைக் கடந்து கருநாடகம், ஆந்திரம் முதலிய இடங்களிலும், கம்போடியா முதலிய நாடுகளிலும் வழக்கில் இருந்தன. இவையும் சேக்கிழாருக்கு மூலங்களாகப் பயன்பட்டிருக்கலாம் என்று அ.ச. ஞானசம்பந்தன் கூறியுள்ளார்.