Primary tabs
-
3.3 காப்பியச் சிறப்பு
காப்பிய அமைப்பு, கதை, கதை மாந்தர் என்பன எல்லாக் காவியங்களிலும் உள்ள பொதுக் கூறுகள் ஆகும். இவற்றிற்கு மேல் அக்காப்பியத்திற்கே உரிய சிறப்புக் கூறுகள் உண்டு. இராவண காவியத்தில் சிறப்புக் கூறுகளாகக் கருதத்தக்கவை தமிழின் சிறப்பு, தமிழர் பண்பாடு, காப்பியத்தில் அமைந்த கருத்து வெளிப்பாட்டிற்கு உதவி புரியும் கவிதை அழகு முதலியவை ஆகும். மேற்கூறிய சிறப்புக் கூறுகளை வெளிப்படுத்தும் பாங்கில் இக்காப்பியம் அமைந்துள்ளது என்று கூறலாம்.
புலவர் குழந்தை தமிழும் தமிழரும் மேன்மையுறத் தேவையான கருத்துகளை இராவண காவியத்தில் முன் வைத்துள்ளார். இராவணன் தமிழர் தலைவன் எனப் போற்றப்படுகிறான்.
இனித்த பாலினும் தேனினும் இன்சுவைக்
கனித்தொ கையினும் கட்டிக் கரும்பினும்
நினைத்த வாயும்சொல் நெஞ்சும் இனித்திடும்
தனித்த மிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம்(இராவண காவியம், 1, பாயிரம் பா. 8)
மிக்க இனிமையுடையது என்று தமிழ் பாராட்டப்படுகிறது.
காப்பிய மாந்தர் வாயிலாகவும் தமிழின் பெருமை பேசப்படுகிறது. பிள்ளைப் பருவத்தில் இராவணன் தமிழ் கற்கத் தொடங்கினான். ஆசான் தமிழ் எனச் சொல்ல இராவணன் மழலைவாயால் தமிழ்மொழி என்றான். மறுபடியும் தமிழ்மொழி என்று சொல்ல இராவணன் தமிழ்மொழி எமது சொந்தத் தாய்மொழி என்றான். அன்னை இராவணனை ‘அமிழ்து உண்ணும்' என்றால் அவன் 'அப்போதே தமிழ் உண்டேன் இந்த அமிழ்து எனக்கு வேண்டாம் போ' என்பான். 'அமிழ்து அது தமிழ்தான்' என்று சொல்ல, 'அமிழ்து அமிழ்து அமிழ்தாம் அன்னாய்! ஆம் அது தமிழ்தான் ஆம் அது தமிழ்தான்' என்பான்.
மாயோன் மகள் வண்டார்குழலியும் தாய்மொழியாம் தமிழை ஆர்வத்துடன் கற்றாள். தமிழைச் சொல்லியும் எழுதியும் உணர்ந்தும் போற்றினாள். தமிழைப் பழுதறக் கற்றாள்.
இராவணன் தமிழ் ஆடவர்களில் சிறந்தவன் என்பதைத் ‘தாமரைத் தார்அணி தமிழநம்பி’ என்றும் வண்டார்குழலி மகளிருள் சிறந்தவள் என்பதைத் ‘தாமரைப் பூமுகத் தமிழநங்கையும்' என்றும் புலவர் குழந்தை குறிப்பிடுவதில் அவரின் தமிழ்நெஞ்சம் பளிச்சிடுகிறது.
சொல்லின்பமும் நடையின்பமும் கருத்தின்பமும் கவிதைக்கு அழகு செய்கின்றன. அதனை மேலும் நயப்படுத்துவது, மெருகூட்டுவது அணிநலனாகும். அத்தகைய அணிநலம் இராவண காவியத்தில் அமைந்திருக்கும் பாங்கினைச் சுருக்கமாகக் காண்பது இப்பாடப் பிரிவின் நோக்கமாகும்.
இராவணன் வண்டார்குழலியைத் தனிமையில் கண்டான். தன் உள்ளத்தை அவளிடம் பறிகொடுத்தான். அவளும் தன் உள்ளத்தில் அவன் உருவைப் பதித்துக் கொண்டாள். இராவணனைக் கண்டு நாணமுற்ற அவள் செயலைக் கவிஞர் உருவக அழகு மிளிரச் சுவைபடக் கூறுகிறார்.
பூங்கைப் போதால் முகமதியம்
பூத்த குவளை மலர்மூடும்(2. இலங்கைக் காண்டம், 3.காட்சிப் படலம், 86)
அழகிய கையாகிய மலரால் முகமாகிய மதியத்தில் பூத்த (கண்ணாகிய) குவளை மலரை மூடுவாள் என்பது இதன் பொருள்.
காரைப் போர்த்த முகமதியம்
கவிழ்ந்து நாணி இருகையும்
சேரக் கட்டித் தழுவுதல்போல்(2. இலங்கைக் காண்டம், 3.காட்சிப் படலம், 87)
கரிய மேகமாகிய (கூந்தலால்) போர்க்கப்பட்ட முகமாகிய மதியம் என்பது இதன் பொருள்.
இவ்விரு சான்றுகளிலும் உருவக அணி சிறப்பாக அமைந்து கவிதைக்குச் சுவை ஊட்டுவதைக் காணலாம்.
அணியின்பம் கவிதைக்கு அழகு சேர்க்கும். சொற்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதால் ஒருவகையான கவிதை இன்பம் கூடுவதுண்டு.
இராவணன் தங்கை இராமலக்குவரால் உறுப்புகள் சிதைக்கப்பட்டு உயிர்நீத்தாள் என்ற செய்தியை மறவர்கள் இராவணனிடம் கூறினர். அச்சூழலைப் புலவர் குழந்தை அழகுறப் புனைகிறார்.
என்னெனத் தங்கைஎன்ன இனிதென இல்லை என்ன
எனஅரும் தங்கைக்குஎன்ன இயன்றதை உரைமின் என்ன
என்னெனச் சொல்வோம் என்ன இலைஇலை நலமோஎன்ன
மன்னவர் மன்னா என்ன மன்னனும் தங்காய்என்ன(4. பழிபுரிகாண்டம், 3. செவிகோட்படலம், 3)
‘என்ன’ என்ற சொல் திரும்பத் திரும்ப அமைந்து மறவர் உணர்ச்சியையும் இராவணனின் உணர்ச்சியையும் மெல்ல மெல்ல உணர்த்திக் கவிதைக்கு அழகு சேர்க்கிறது.