தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தனி பாடல்கள்

  • 5.5 தனிப்பாடல்கள்

    பல்லவர் மரபில் இறுதி அரசன் அபராசிதவர்மன் ஆவான். கி.பி.875க்குப் பிறகு நாட்டை ஆண்டான். அவன் காலத்தில் நம்பி அப்பி என்பவன் திருத்தணிகை - வீரட்டானேசுவரர் கோவிலுக்குத் திருப்பணிகள் பலவும் செய்தான். அவற்றைப் பாராட்டி அபராசிதவர்மன் ஒரு வெண்பாப் பாடினான். அப்பாடல் அக்கோவில் கல்வெட்டில் உள்ளது. பாடலின் கீழ், ‘இவ்வெண்பாப் பெருமானடிகள்தாம் பாடி அருளித்து' என்ற குறிப்பு உள்ளது. அபராசிதனுக்குப் ‘பெருமானடிகள்' என்ற பெயர் உண்டு. அவ்வெண்பா வருமாறு :

    திருந்து திருத்தணியிற் செஞ்சடை ஈசற்குக்
    கருங்கலாற் கற்றளியா நிற்க - விரும்பியே
    நற்கலைகள் எல்லாம் நவின்றசீர் நம்பியப்பி
    ராசிதவர்மன் பாடிய பாடல் சொல்லப்படுகிறது.

    தண்டலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மரபினன் இராசபவித்திரப் பல்லவதரையன் என்பவன் ஆவான். அவன் அவிநயம் என்ற யாப்பிலக்கண நூலுக்கு உரை எழுதினான் என்று, நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் கூறுகிறார். அதற்கு ஆதாரமாக ஒரு பாடலையும் காட்டுகிறார்.

    இந்தப்பத் தெச்சமும்
    புவிபுகழ் புலமை அவிநய நூலுள்
    தண்டலங் கிழவன் தகைவரு நேமி
    எண்டிசை நிறைபெயர் இராச பவித்திரப்
    பல்லவ தரையன் பகர்ச்சி யென்றறிக.

    என்பதே அந்தப் பாடல்.

    அரக்கோணம் தாலூகாவில் தண்டலம் என்ற கிராமத்தில் உள்ள ஏரியைப் புதுப்பித்த பல்லவ மன்னன் சத்திபல்லவனைப் பற்றி அங்குள்ள கல்வெட்டில் இரண்டு வெண்பாக்கள் காணப்படுகின்றன.

    பல்லவ அரசன் ஒருவனது ஆணைப்படி அவன் எல்லைப்புற வீரர் வடுகர் முனையைக் கடந்து பசு நிரையைக் கவர்ந்த செய்தியை மற்றொரு பாடல் குறிக்கிறது. அப்பாடல் தொல்காப்பிய அகத்திணை சூத்திரம் 54க்கான உரையில் காட்டப்பட்டுள்ளன. எனவே நச்சினார்க்கினியர் காலம் வரை அப்பாடல் வழக்கத்தில் இருந்தது எனலாம்.

    நகில்பொழி தீம்பால் மண்சோறு படுப்ப
    மலர்தலை உலகம் ஓம்பும் என்ப
    பரிசிலை தொண்டைப் பல்லவன் ஆணையின்
    வெட்சித் தாய்த்து வில்லேர் உழவர்
    பொருந்தா வடுகர் முனைச்சுரம்
    கடந்து கொண்ட பல ஆனிரையே

    என்பதே அப்பாடல் ஆகும். இத்தனிப் பாடல்களால், பல்லவர் காலத்தில் புலவர்கள் பலர் இருந்தமை புலனாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 13:00:18(இந்திய நேரம்)