Primary tabs
-
2.0 பாட முன்னுரை
கதைப்பாடல்கள் பொழுது போக்கிற்காகப் பாடப்பட்டவை, என்றாலும் சமூக நீதியையும் சமூக ஒற்றுமையையும், வீரர் வணக்கத்தையும் மக்களுக்குச் சொல்லித் தருகின்ற, தன்மையையும் கொண்டு விளங்கின. கதைப்பாடல்கள், அவை உணர்த்தும் பொருளின் அடிப்படையில் நாட்டுப்புறவியல் அறிஞர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகைப்படுத்தல் என்பது ஒரே மாதிரியாக இருப்பனவற்றை இனங்கண்டு ஒன்றாக்குவதாகும். வகைப்படுத்துதல் மூலம் ஆய்வுகள் நுணுக்கமாக அமையும் என்பதில் ஐயமில்லை. பல்வேறு அறிஞர்களும் கதைப்பாடலைப் பல்வேறு விதமாக வகைப்படுத்தியுள்ளனர். ஆயின் தற்போது புராணக் கதைப்பாடல்கள், வரலாற்றுக் கதைப்பாடல்கள், சமூகக் கதைப்பாடல்கள் என்ற வகைமையே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வரிசையில் வரலாற்றுக் கதைப்பாடல்கள் பற்றிய குறிப்பினை இப்பாடம் எடுத்துரைக்கின்றது.
வரலாற்றுக் கதைப்பாடலில் இடம்பெறும் கதைப்பாடல்கள் எவை, அவற்றின் பின்னணி, அறியவரும் வரலாற்றுச் செய்தி மற்றும் அக்கதைப்பாடலில் இடம்பெற்றுள்ள சிறப்புச் செய்திகள் ஆகியவை இரு கதைப் பாடல்களின் துணைகொண்டு விளக்கப்பட உள்ளன.